கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு
பிரிவாற்றாத தலைவி தன் தோழிக்குக் கூறியது.
ஆந்தை குறுங்கலி கொள்ளநம் ஆடவர் காய்ந்து கதிர்தெறூஉம் கானம் கடந்தார்பின் ஏந்தல் இளமுலை ஈர்எயிற்றாய் என்நெஞ்சு நீந்து நெடுவிடைச் சென்று. |
21 |
நமது தலைவர் ஆந்தை யென்ற பறவைகள் மரப்பொந்துகளிலிருந்து சிறிய ஒலி செய்யும்படி சூரியன் வெயில் சுட்டு வருத்துகின்ற காட்டின் வழியாக பிரிந்து சென்றவர்க்குப் பின்னே என் மனமானது நீண்ட வழிகளிற் சென்று நீந்துகின்றது பருத்த இளமுலையையும் குளிர்ந்த பற்களையுமுடைய பாங்கியே! (நான் என்ன செய்வேன் என்றாள்)
பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி
வற்புறுத்தித் தேற்றியது.
கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர் உள்ளம் பிரிந்தமை நீஅறிதி - ஒள்இழாய் தொல்லை விடரகம் நீந்திப் பெயர்ந்தவர் வல்லைநாம் காணும் வரவு. |
22 |
ஒளிபொருந்திய நகைகளையணிந்த தலைவியே! ஆறலை கள்வர் நீங்காது திரியும் காட்டு வழியாகப் பிரிந்து சென்றவருடைய மனமும் பிரிந்ததற்குரிய காரணமும் நீயறிவாய் (யான் கூற வேண்டுவதின்று) பழமையான மலைகளைக் கடந்து மீண்டு வரும் அவர் வரவினை விரைவில் நாம் காண்போம்
ஆற்றாமையறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது.
சிலையொலி வெங்கணையார் சிந்தியா நெஞ்சில் கொலைபுரி வில்லொடு கூற்றுபோல் ஓடும் இலையொலி வெங்கானத்து இப்பருவம் சென்றார் தொலைவிலர்கொல் தோழி நமர். |
23 |
வில்லின் நாணொலியும், கொடிய கணைகளையும் உடைய வேடர்கள் அறம் பாவம் என்ற ஆராய்ச்சியில்லாத மனத்துடன் கொல்லத்தகுந்த வில்லுடன் இயமனைப்போல வழிச்செல்வோரைத் தொடர்ந்து விரைந்து செல்லும் இயல்புடைய இலைகள் உலர்ந்து கலகலவென்று ஒலிசெய்யும் கொடிய கானகத்து வழியாக இவ்வேனிற் காலத்தே பிரிந்து சென்றவராகிய நம் தலைவர் தளர் வில்லாதவரா யிருப்பரோ? பாங்கியே (நீ கூறுக என்றாள்)
ஆற்றாமையறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது.
வெஞ்சுரம் தேரோட வெகிநின்று அத்தமாச் சிந்தையான் நீர்என்று செத்துத் தவாஓடும் பண்பில் அருஞ்சுரம் என்பவால் ஆய்தொடி நண்பிலார் சென்ற நெறி. |
24 |
ஆராய்ந்த வளையலையணிந்த பாங்கியே! கொடிய பாலைவனங்களில் பேய்த்தேர் தோன்ற அச்சுரத்தில் உள்ள மான்கள் விரும்பி நோக்கி நின்று மனத்தால் நீர் என்று கருதி நீங்காமல் ஓடித் திரியும் பயனில்லாத கொடிய வனமே நம் மேல் நண்பு இல்லாத தலைவர் நம்மைப் பிரிந்து சென்ற வழியாகும் என்று பலரும் சொல்வர். (அது குறித்து தான் வருந்துகின்றேன் பிரிவாற்றாமையா லன்று என்றாள்.)
3. முல்லை
- பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி
வற்புறுத்தியது.
கார்செய் புறவில் கவினிக் கொடிமுல்லை கூர்எயிறு ஈனக் குருத்தரும்ப - ஓரும் வருவர்நம் காதலர் வாள்தடங் கண்ணாய் பருவரல் பைதல்நோய் கொண்டு. |
25 |
வாளாயுதம் போன்ற கூநிய அகன்ற விழிகளையுடையாய்! மேகம் மழை பெய்த முல்லை நிலங்களில் முல்லைக் கொடி செழித்து அழகு பெற்று குருந்த மரங்களும் அரும்பைத் தோற்றுவிக்கவும் நம்முடைய காதலர் வருவார் பசலைநோய் கொண்டு வருந்தாதே (வருவர் என்று தேற்றினாள்).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், பிரிந்து, கொடிய, பாங்கியே, கைந்நிலை, தோழி, வருந்திய, தலைவர், என்றாள், தலைவி, பதினெண், கூறியது, கீழ்க்கணக்கு, சென்ற, கானம், தோன்றக், முல்லை, வருவர், கொண்டு, காதலர், என்பது, ஆற்றுவல், கள்வர், சங்க, வழியாக, திரியும், ஆற்றாமையறிந்து, தோழிக்குத், சென்று, ஆந்தை