முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » தல புராணங்கள்
தல புராணங்கள் (Temple Mythology)
இந்து சமயக் கோவில்களின் பழம்பெருமையினையும் வரலாற்றுச் சிறப்பினையும் எடுத்து விளக்கும் நூல்களே தல புராணங்களாகும்.
புராணம் என்பது பழைமையானது, புராதனமானது எனப்படும். பழைமையான திருத்தலங்களின் பெருமையைப் பற்றிப் பிற்காலத்தவரும், நெடுந்தூரம் பயணம் செய்து வந்து தரிசிக்க முடியாதவரும் அறிந்து கொள்ளவும், அவ் ஆலயத்தின் புகழைப் பாடவும் முயன்ற புலவர்கள், தேவாரங்கள் மூலம் பாடல்பெற்ற தலங்களின் பெருமையைப் பாட்டினால் தாமும் பாடியதால் தோன்றியவையே தலபுராணங்களாகும். இவை, அத்தலங்களிலே எழுந்தருளியிருக்கும் இறைவன், அருட்செயல்கள், துன்பங்களையும் நோய்களையும் நீக்கவல்ல தீர்த்தங்கள் என்பவற்றின் சிறப்புக்களை எடுத்துரைக்கின்றன.
இவை குறிப்பாக கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதிலேயே தோற்றம் பெற்றனவாகக் கொள்ளப்படுகின்றன. தல புராணங்களில் முதலாவதாகத் தோன்றியது பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவர் எழுதிய திருவிளையாடற்புராணம். ஆயினும் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் குறிப்பாக 14 முதல் 16 வரையான நூற்றாண்டுகளில் அந்நியரின் ஆதிக்கமும் சமூகக் குழகப்பங்களும் ஏற்பட தலபுராணங்களின் தோற்றமும் மங்கிப் போய்விட்டது. பின்னர் விஜயநகர நாயக்க மன்னர்களின் ஆட்சி தமிழகத்தில் நிலைபெற்றுவிட தலபுராணங்களும் மேலும் பெருக்கமாய்த் தோன்றத் தொடங்கின.
தல புராணங்களின் செய்திகள் மக்களுக்கு எழுச்சி தரும் இன்ப ஊற்றுக்களாகவும், அந்நியரது தாக்குதலினால் அல்லலடைந்து மனங்குன்றியிருந்த மக்களுக்கு புத்துயிர் தருவனவாகவும் அமைந்ததால், மக்கள் மத்தியில் பெருஞ்செல்வாக்கு மிக்கனவாகத் திகழ்ந்தன. இதனால், இவற்றைப் பாடிய புலவர்களை மக்கள் புகழத் தொடங்கினர். இதனால், வறுமையில் வாடிய புலவர்களும் திருக்கோவில்களைப் புகழ்ந்துபாடி உணவும், பெயரும் பெற்றனர். இந் நிலை 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் தொடர்ந்ததால் பல்வேறு தலபுராணங்கள் தோற்றம் பெற்றன.
பெரும்பாலான தலபுராணங்கள் இறைவனும் இறைவியும் எழுந்தருளி, தேவர்கள் - முனிவர்களுக்கு அருள்செய்த வகையை கூறுகின்றன. இதனால் இவை, தெய்வநம்பிக்கை, சமய நம்பிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கோயில் வழிபாடு, பூசை, விழாக்கள், விரதங்கள் என்பவற்றின் பயனையும், சரியை கிரியைத் தொண்டு என்பவற்றையும் தெளிவாக விளக்குகின்றன. இவை, மனிதர்களைப் பாடி பொருளை மாத்திரம் சேர்ப்பதைவிட, இறைவனைப் பாடி இம்மைக்கும் மறுமைக்குமாக அருளைப் பெறல் வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு வலியுறுத்துவன.
இத் தல புராணங்கள், பாடல்பெற்ற தலங்கள், அற்புதங்கள் நிகழ்த்திய தலங்கள், முத்தித் தலங்கள், தேவர் முனிவர் வழிபட்ட தலங்கள், புராணக் கதைகளில் குறிப்பிடப்படும் தலங்கள், சித்தர் வாழ்ந்த தலங்கள் எனப் பலவகைப். இத்தகையவை தமிழ் மொழியில் 200 இற்கும் அதிகமாகக் காணப்படுகின்றன.
தல புராணங்கள்
- கேஆர்.சக்தி வேல்
தேடல் தொடர்பான தகவல்கள்:
Temple Mythology, தல புராணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்