ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு
சூரல் புறவின் அணில்பிளிற்றும் சூழ்படப்பை ஊர்கெழு சேவல் இதலொடு - போர்தினைக்கும் |தேரொடு கானம் தெருளிலார் செல்வார்கொல் ஊரிடு கவ்வை ஒழித்து. |
36 |
(பொருளினும் அருளே போற்றும் பண்பினது என்னுந்) தெளிவினை மேற்கொண்டிராத நங்காதலர் பிரப்பம்புதர்கள் மிகுந்த காட்டினிடத்தே அணிற்பிள்ளைகள் ஒலிக்கும்படியான கொல்லைகளாற் சூழப்பெற்ற பாலைநிலத்தூர்களில் பொருந்தியுள்ள ஆண் கோழியானது காடைப்பறவையுடனே சண்டை செய்யும்படியான பாலைநிலவழியே தேரின் மீதே இவ்வூரில் நமக்கு இட்டுச் செய்யவேண்டிய காரியத்தை விட்டுவிட்டு நம்மைப் பிரிந்து போவாரோ ? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)
கொடுவரி பாயத் துணையிழந்(து) அஞ்சி கடுவுணங்கு பாறைக் கடவு தெவுட்டு நெடுவரை அத்தம் இறப்பர்கொல் கோண்மாப் படுபகை பார்க்குஞ் சுரம். |
37 |
புலியானது பாய்தலினாலே தனது துணையாகிய பிடியினைப் பறிகொடுத்து அச்சமிகுந்து மாவிலங்குமரம் வாடி நிற்கும் பாறைகளுக்கு இடையேயுள்ள வழியினிடத்தே நிறைத்து நிற்கும்படியான களிறானது (தனது துணையினைப்) படுத்த புலியாகிய பகையின் வரவினை எதிர்பார்த்திருக்கும் படியான பாலை நிலத்தின்கண்ணுள்ள நீண்ட மலைத்தொடர்களுடைய அருநெறிக்கண்ணே (காதலர்) நடந்து செல்வரோ ? (என்று தலைமகள் ஐயுற்றுத் தோழியிடம் கூறினாள்.)
கோளவல் கொடுவரி நல்வய மரக்குழுமும் தாள்வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல் ஆள்வினையின் ஆற்ற அகன்றவா நன்றுணரா மீளிகொள் மொய்ம்பி னவர். |
38 |
(மான் முதலியவற்றைக்) கொள்ளுதலில் வல்ல வளைந்த வரிகளையும் நல்ல வெற்றியினையுமுடைய விலங்காகிய புலிகள் கூடித் திரியும் பூக்கள் நிறைந்த அடிப்பாகத்தினையுடைய புதரினியுடைய காடாகிய பாலை நிலவழியின்கண்ணே வீரத்தினைக் கொண்ட வலிமை மிக்க காதலர் முயற்சியினிடத்தே மிகுதியுங் கொண்ட விருப்பத்தினாலே (இங்குத் தங்குதலாலேற்படும்) நன்மையினை அறியாமல் (நம்மைப்) பிரிந்து சென்றனரோ ? (எனத் தலைமகள் ஐயுற்றுத் தோழியை வினவினள்.)
பேழ்வாய் இரும்புலி குஞ்சரம் கோட்பிழைத்துப் பாழூர்ப் பொதியில் புகாப்பார்க்கும் ஆரிடைச் சூழாப் பொருள்நசைக்கண் சென்றோர் அருள்நினைந் வாழ்தியோ மற்றோ உயிர். |
39 |
எனது ஆருயிரே ! பிளந்த வாயினையுடைய பெரிய புலியானது யானையினை கொள்ளுதலினின்றும் தவறிப்போய் (மறவர்தம் கொள்ளையாற்) பாழ்ப்பட்ட ஊரினது மன்றத்தின்கண் புகுந்து (உணவினை) நாடி நிற்கும்படியான அரிய பாலைநில வழியே நெருங்கி பொருள் தேடவேண்டுதலினாலே பிரிந்து சென்ற தலைவரது தண்ணளியினை இன்னும் எதிர் பார்த்து (மடியாது) வாழ விரும்புகின்றனையோ ? (என்று தலைமகள் தன்னுயிருடன் வினவினள்.)
முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ்படப்பை புள்ளி வெருகுதன் குட்டிக்(கு) இரைபார்க்கும் கள்ளர் வழங்கும் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி. |
40 |
நந்தலைவரின் மனமானது (பொருள் தேடுதலை மேற்கொண்டு) சென்ற வழியானது முட்களையுடைய மூங்கிற் புதர்கள் சூழ்ந்து பின்னிக்கொண்டு கிடக்கும்படியான தோட்டத்தினிடத்தே புள்ளிகளையுடைய காட்டுப்பூனையானது தனது குட்டிக்கு உணவினைத் தேடித் திரிதலோடு ஆறலைப்போர் சஞ்சரிக்கும் கொடிய பாலைவனம் என்று சொல்லுவர் பலர். (என்று தலைமகள் தோழியிடங் கூறினள்.)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு, தலைமகள், இலக்கியங்கள், காதலர், வினவினள், பிரிந்து, பதினெண், ஐந்தினை, கீழ்க்கணக்கு, தனது, எழுபது, பாலை, கொண்ட, சென்ற, பொருள், நிற்கும்படியான, ஐயுற்றுத், தோழியை, சூழ்படப்பை, சங்க, கானம், நம்மைப், கொடுவரி, புலியானது