ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு
அகன்பனை யூரனைத் தாமம் பிணித்த(து) இகன்மை கருதி யிருப்பன் - முகன்அமரா ஏதின் மகளிரை நோவ தெவன்கொலோ பேதமை கண்டொழுகு வார். |
46 |
பரந்த மருதநிலத்துள்ள ஊர்க்குத் தலைவனான என் காதலனை மலர்மாலையினாலே (பரத்தையர்) கட்டிக் கொண்டு போயதனால் (அவர் மாட்டு) மாறுபாட்டினை எண்ணி இருத்தலைச் செய்கின்றனன் அறியாமையினை செய்து நடப்பவராகிய பிறமகளிராகிய பரத்தையரை மனம் பொருந்தி (தலைமகன் பிரிவுக்காக) நொந்து கொள்வது எற்றுக்கு ? (அன்பும் உறவுமுடைய தலைமகனை நோவதே நெறியாம் என்று தலைமகள் கூறிக் கொண்டனள்.)
போத்தில் கழுத்தில் புதல்வன் உணச்சான்றான் மூத்தேம் இனியாம் வருமுலையார் சேரியுள் நீத்துநீர் ஊனவாய்ப் பாண!நீ போய்மொழி கூத்தாடி உண்ணினும் உண். |
47 |
பாணனே ! (தலைமகன் முன்பு தழுவியமைந்த) எமது கழுத்தினிடத்தே இனித் தழுவதற்கு நேரமின்றி என் மகன் முலையுண்ணும்படி அமைந்துளான் மேலும் நாம் தலைமகற்குத் தகுதியின்றி மூப்பினையடைந்தோம் (ஆதலின்) நீ இவ்விடத்தினின்று நீங்கி முன்னோக்கி வளருகின்ற முலைகளையுடைய பரத்தையரது சேரியினிடத்தே சென்று (அங்குள்ள தலைமகனுக்கு எமது மூப்பு முதலிய செய்திகளை) இயம்புவாயாக கள் முதலிய குடிநீர்வகைகளையும் இறைச்சிகளையும் விரும்பி பரத்தையர் முன்பாக நாடக முதலியனவற்றை நடத்தி உண்ணுதலைச் செய்யினும் செய். (என்று தலைமகள் பாணனிடம் கூறினாள்.)
யாணர்நல் லூரன் திறங்கிளப்பல் என்னுடை பாண! இருக்க வதுகளை - நாணுடையான் தன்னுற்ற எல்லாம் இருக்க இரும்பாண! நின்உற்ற(து) உண்டேல் உரை. |
48 |
என்னருமைப் பாணனே ! இவ்விடத்தே இருப்பாயாக புது வருவாயினையுடைய நல்ல மருதநிலத்தூர்த் தலைவனது மேன்மையினை (பலபடியாகஎடுத்துச்) சொல்லுதலாகிய அப்போக்கினை ஒழித்து விடுவாயாக பெருமைமிக்கபாணனே ! நாண் உடையான் - (பிறபெண்டிரைக் காணுதலில்) வெட்கமுற்றுப் பின்வாங்கும் பெருமையினையுடைய தலைமகனுக்கு நேர்ந்த குறைகளெல்லாம் இருக்கட்டும் உனது வாழ்க்கையில் பொருந்திய குறை யாதேனும் உளதாயின் எடுத்துச் செல்வாயாக. (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)
உழலை முருக்கிய செந்நோக்(கு) எருமை பழனம் படிந்துசெய் மாந்தி - நிழல்வதியும் தண்டுறை யூரன் மலரன்ன மால்புறப் பெண்டிர்க்(கு) உரைபாண! உய்த்து. |
49 |
பாணனே ! உழலை மரத்தினை நாசப்படுத்திய சிவந்த கண்களையுடைய எருமையானது மருத நிலத்தூடே தவழ்ந்து சென்று கழனியிலே மேய்ந்து (மருதமர) நிழலின் கண்ணே தங்கியிருக்கும்படியான குளிர்ந்த இடத்தினையுடைய ஊர்க்குத் தலைவனாகிய தலைமகனது (வண்டுகள் பல படியும் வண்ணம் மலர்ந்து கிடக்கும்) மலர்போன்ற காதலினை கொண்டு சேர்த்து ஊர்க்குப் புறத்தேயுள்ள சேரியில் வாழும் பரத்தையர்க்கு சொல்வாயாக. (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)
பேதை புகலை புதல்வன் துணைச்சான்றோன் ஓதை மலிமகிழ்நற்(கு) யாஅம் எவன்செய்தும் பூவார் குழற்கூந்தல் பொன்னன்னார் சேரியுள் ஓவாது செல்பாண! நீ. |
50 |
பாணனே ! பல்வகை யொலிகள் மிகுந்த மருதநிலத் தலைவனாகிய தலைமகனுக்கு மகனையே (பிரிவின் கண்) துணைவனாகிய சான்றோனெனும் அடைக்கலமாகக் கொண்ட பெண்பாலாகிய நாம் என் செய்து பயன்படப் போகின்றோம் ? (அவற்கு எம்மால் ஆவது யாதுமின்று பூக்கள் நிறைந்த சுருட்டி முடித்த மயிரினையுடைய திருமகளை யொத்தவராகிய (அவற்கு வேண்டிய) பரத்தையரின் சேரியினிடத்தே ஒழியாது நீபோவாயாக. (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு, தலைமகள், இலக்கியங்கள், பாணனே, கூறினாள், தலைமகனுக்கு, ஐந்தினை, பாணனிடங், கீழ்க்கணக்கு, பதினெண், எழுபது, சென்று, முதலிய, அவற்கு, சேரியினிடத்தே, இருக்க, தலைவனாகிய, உழலை, சேரியுள், பரத்தையர், ஊர்க்குத், சங்க, கொண்டு, செய்து, எமது, புதல்வன், தலைமகன், நாம்