ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு
இளமை கழியும்; பிணி, மூப்பு, இயையும்; வளமை, வலி, இவை வாடும்; உள நாளால், பாடே புரியாது, - பால் போலும் சொல்லினாய்!- வீடே புரிதல் வீதி. |
21 |
பால்போலுஞ் சொல்லினாய்! இளமை நில்லாது கழியும், பிணியும் மூப்பும் வந்தடையும், செல்வமும் வலியும் வாடும், தானுள்ள நாளின்க ணிவ்வைந்தானும் வருந்துன்பத்தையே நுகரவிரும்பாது, வீடு பெறுதலையே விரும்புதலொருவர்க்கு நெறியாவது.
கருத்து: இளமை கழிந்து பிணி மூப்புகள் உண்டாதலின், மக்கள் வீடுபேற்றை விரும்பி நிற்றலே கடமையா மென்பது.
வாள் அஞ்சான், வன்கண்மை அஞ்சான், வனப்பு அஞ்சான், ஆள் அஞ்சான், ஆம் பொருள்தான் அஞ்சான்; நாள் எஞ்சாக் காலன் வரவு ஒழிதல் காணின், வீடு எய்திய பாவின் நூல் எய்தப்படும். |
22 |
வாள் வென்றியை யஞ்சான், தறுகண்மையை யஞ்சான், தோற்றப்பொலிவினை யஞ்சான், படையாளனென் றஞ்சான், செல்வமுடையனென் றஞ்சான், நாளினை மறந்தொழியாத காலன் தன்மேல்வரும் வரவினை யொழிதலொருவன் காண்பனாயின், வீட்டு நெறியைப் பொருந்திய தன்மையையுடைய நூல்களைச் சாரத்தகும்.
கருத்து: வீடுபே றடைவதற்கு நல்லொழுக்கங்களே யல்லாமல் அகவழிபாடு முதலியனவும் வேண்டப்படும்.
குணம் நோக்கான்; கூழ் நோக்கான்; கோலமும் நோக்கான்; மணம் நோக்கான், மங்கலமும் நோக்கான்; கணம் நோக்கான்; - கால் காப்பு வேண்டான், - பெரியார் நூல் காலற்கு வாய் காப்புக் கோடல் வனப்பு. |
23 |
குணமுடையானென்று பாரான், செல்வமுடையானென்று பாரான், தோற்றப் பொலிவுடையானென்று பாரான், கலியாணஞ் செய்ய நின்றானென்று பாரான், புண்ணியஞ் செய்ய நின்றானென்று பாரான், சுற்றமுடையானென்று பாரான், ஆதலால் தன்னகர்க்குத் துணையாகிய மனைவாழ்க்கையை வேண்டானாய்ப் பெரியோராற் செய்யப்பட்ட ஆகமத்தைக் காலற்கு வாய்ப்பாகக் கோடல் ஒருவற் கழகாவது.
கருத்து: துறவொழுக்கத்தை விரும்புகின்றவன் இயல்பு முதலியவற்றைப் பொருட்படுத்தாமற் பிறப் பிறப்புக் கெடுதற்கான ஆன்றோ ரறிவு நூல்களைக் கற்றொழுகுதலே அழகாகும்.
பிணி, பிறப்பு, மூப்பொடு, சாக்காடு, துன்பம், தணிவு இல் நிரப்பு, இவை தாழா - அணியின், அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்று ஆம் நிரம்புமேல், வீட்டு நெறி. |
24 |
பிணியும், ‘பிறப்பும், மூப்பும், சாக்காடும் இழவினான் வருந் துன்பமும், தேடுதலானே வருங் குறையாத விடும்பையுமென் றிவை யாறு மதிட்டியாது வருமாயிற் சொல் வேறுபாட்டினா னரங்கின்கண் வந்தாடும் கூத்தரைப்போலப் பிறந்திறந்துழலாதே வீட்டுநெறியே யொருவற்கு வந்து நிரம்புமாயினன்றாம்.
கருத்து: ஒவ்வொரு பிறப்பிலும் பிணி முதலான துன்பங்களுண்மையின், வீடுபேற்றிற்குரிய துறவொழுக்கத்தை மேற்கோடலே நன்மையாம்.
பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும் நாடகம் சாராமை; நாடுங்கால், நாடகம் சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே, தீர்ந்தாற்போல் தீரா வரும். |
25 |
(ஓருறுதி படாதபோது) மகளிர் விரும்புகின்ற பாடுமிடஞ் சாராதொழிக. அவர்களோடு நாடகஞ் சேர்ந்து காணாதொழிக. அவர்களாடுமிடஞ் சார்ந்து காணுமாயிற்பகையும், பழியும், பிறர் சொல்லுந் தீச்சொல்லும், சாக்காடுமென்று சொல்லப்பட்ட நான்கு மவர்க்கு நீங்கினபோல நீங்காவாய் வரும்.
கருத்து: பொதுமகளிருடைய பாட்டையும் ஆட்டத்தையுங்கேட்டலுங் காண்டலும், பகையும் பழியுங் கடுஞ்சொல்லும் சாவும் விளைக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, நோக்கான், பாரான், கருத்து, அஞ்சான், பிணி, இலக்கியங்கள், ஏலாதி, பதினெண், கீழ்க்கணக்கு, இளமை, யஞ்சான், கோடல், காலற்கு, நின்றானென்று, நாடகம், வரும், சாராமை, துறவொழுக்கத்தை, வீட்டு, செய்ய, காலன், பிணியும், சொல்லினாய், வாடும், கழியும், மூப்பும், வீடு, நூல், வனப்பு, வாள், சங்க, றஞ்சான்