இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு
அளகும் அளிநாகைப் பேண அணியார் அழகுஅரிவை வீழ்முயக்கை அண்ணாத் - தளியாளர் பெற்ற பிறக்கெறிந்து புத்தாய பெட்டுழலும் பெற்றியர் பெட்ட கழுது. |
31 |
பெண்பறவைகளும் அன்பினால் இளமையான குஞ்சுகளைப் பேணிவளர்க்கவும், (அதனைக்கண்டும்) நகைநிறைந்த இயற்கையழகுடைய பெண்கள் விருப்பமான புணர்ச்சியின்பத்தைக் கருதாத கோயிலையிடமாகக் கொண்ட துறவிகள்; தாம்பெற்ற பொருள்களைப் புறம்பாக எறிந்துவிட்டுப் புதிதாகிய பொருள்களை விரும்பி உழன்று திரியும் இயல்புடையவராவார்; (அவர்கள் மேலுமேலும் உணவைமட்டும்) விரும்பிய பசாசு ஆவர்.
கருத்து : மங்கையரின்பத்தைக் கருதாத மனமுடைய துறவிகள் பெற்றபொருளை யெறிந்துவிட்டு வேறுபொருள் தேடியுழலும் பித்தர் போன்றவர். பசாசு போன்றவர்கள் என்றுங் கூறலாம்.
4. வீட்டுப்பால்
அ. இல்லியல்
ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக் குற்றம் ஒரூஉம் குணத்தளாக் - கற்றறிஞர்ப் பேணும் தகையளாக் கொண்கண் குறிப்பறிந்து நாணும் தகையளாம் பெண். |
32 |
(பிறப்பு முதலியவற்றால்) ஒத்த உரிமையுடையவளாகியும், ஊடலில் இனிமையுடையவளாகியும், குற்றங்கள் நீங்கிய நற்குணங்களையுடையவளாகியும், (பலநூல்களையும்) கற்ற அறிவுடையவரைப்பேணும் தன்மையுடையவளாகியும், கணவனுடைய குறிப்பினை அறிந்து (அதற்கியைய) நாணுகின்ற தன்மையுடையவளே பெண் ஆவள்.
கருத்து : ஒத்தவுரிமையும், ஊடலினிமையும், குற்ற நீங்கிய குணமும், கற்றவரைப் பேணும் கருத்தும், கணவன் குறிப்பறிந்து நாணும் பண்பும் உடையவளே இல்லறத்திற்குத் தக்க பெண்ணாவள்.
மனைக்கொளி சேய்நாற் பணியோன் நாரப்புலக்கார் வினைக்கொளியாம் கட்காம் அனலி - முனைக்குஅஞ்சா வீரர் ஒளியாம் மடமே அரிவையர்க்காம் ஏரொளியாம் இல்லுடையான் துப்பு. |
33 |
வீட்டிற்கு விளக்கு மக்கள் ஆவர், நீர் பொருந்திய நிலத்திற்குச் செய்யும் தொழிலுக்கு விளக்கு நான்கு தொழிலும் அறிந்த ழவனேயாவன். விழிகளுக்கு விளக்காவது சூரியனேயாவன், போர் முனைக்கு அஞ்சாத படைவீரர்களே விளக்கு ஆவர், மங்கையருக்கு விளக்கு மடமை யென்னும் பண்பேயாகும், இல்வாழ்வான் வலிமைக்கு விளக்கு ஏருழுதல் என்னுந் தொழிலாம்.
கருத்து : மனைக்கு மக்களும், நிலத்திற்கு உழவனும், கண்ணுக்குக் கதிரவனும், போருக்கு வீரரும், பெண்ணுக்கு மடமையும், இல்வாழ்வானுக்குப் பயிர்த்தொழிலும் சிறப்பைத்தருவனவாம்.
எய்ப்பில்லைப் பாக வருவாயில் ஐந்தொன்றை மெய்ப்பிணி சேய்வரைவில் கூட்டிடுக - கைப்பொருள்வாய் இட்டில்உய் வாய்இடுக்க ஈங்க விழையற்க வட்டல் மனைக்கிழவன் மாண்பு. |
34 |
இடுக்க கைப்பொருள் வருவாய் குறைந்தால் செலவுவழியையும் சுருக்குக, தன்னைப் பெருக்கிக் காட்ட விரும்பற்க, பொருளைத் திரட்டுவதே மனைக்குரிய தலைவன் செயலாகும், இளைத்த பருவத்தில் (கிழப்பருவத்தில்) நுகர்தற்குரிய சேமப்பொருளாகவும், உடற்பிணிக்கு வேண்டும் மருந்துண்டற்குரிய பொருளாகவும், மக்கட்கு மணம் புரியும் செலவிற்குரிய பொருளாகவும்,
கருத்து : வீட்டுக்குரிய தலைவன் பொருளைச் சேர்க்க வேண்டும்; வருவாய் குறைந்தாற் செலவைக் குறைக்கவேண்டும்; ஐந்தில் ஒரு பங்கைச் சேம நிதியாக வைத்திருக்க வேண்டும்; அப்பொருள் மக்கள் மணத்திற்கும் தன் முதுமைப்பருவத்திற்கும் நோய்க்கும் உதவியாகும்.
ஐம்புலத்தோர் நல்குரவோர் ஓம்பித் தலைப்பட்ட செம்பாக நன்மனையைப் பேணிக் - கடாவுய்த்த பைம்புல் நிலைபேணி ஊழ்ப்ப வடுஅடார் ஐம்புலம்ஈர்த் தாரில் தலை. |
35 |
தென்புலத்தார் முதலிய ஐந்து திறத்தாரையும் வறியவரையும் காத்து, தம்மைச்சார்ந்த ஒமுங்காகிய பங்கினால் நல்ல மனைவியைக்காத்து, எருமைக்கடாக்களைச் செலுத்தி யுழுத பசிய புல் நிற்கும் நிலையையுடைய நிலங்களைக் காத்து, சிறக்கும்படி குற்றம் பொருந்தாத வழக்கையுடையவர், ஐம்புலங்களையும் வென்ற முனிவரினும் முதன்மையாவர்.
கருத்து : இல்வாழ்க்கையை முறைப்படி நடத்தி வாழ்பவர் ஐம்புலமடக்கிய முனிவரினும் சிறந்தவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், இன்னிலை, கீழ்க்கணக்கு, பதினெண், சங்க