இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு
தூவி நெருஞ்சிக்காய் நீர்முள்ளி தும்பைஅலர் காவியன சேல்கண் குறுந்தொடியார் - ஆவிக்கு இனியர் இணைசேரார் ஈர்ங்கண் மாஞாலத் தனிமைக்கு அவரோர் கரி. |
26 |
அன்னப்பறவையின் சிறகிலுள்ள மயிர்கள் நெருஞ்சிக் காய் முட்களாகவும் தும்பை மலர்கள் நீர் முள்ளியின் முட்களாகவும் தோன்று மெல்லிய அடிகளையும், நீலமலரும் கெண்டை மீனும் போன்ற விழிகளையும் சிறிய வளையலையும் உடைய மகளிர், ஆவிக்கு, (ஆடவரது) உயிர்க்கு இனிமை தருவோராவார்; (அம்மகளிரைத் தமக்கு) இணையாகக் கொண்டு கூடி வாழாதவர்; குளிர்ந்த இடத்தையுடைய பெரிய வுலகத்தில், தனிமை வாழ்வுக்கு அவ்வாடவர் ஒரு சான்றாவர்.
கருத்து : மங்கையரை வாழ்க்கைத் துணையாக மணந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. அவ்வாழ்வே இன்பந் தருவது. அவரைக் கூடாத வாழ்வு தனிமையுடையது; துன்ப வாழ்வு.
காமம்வீழ் இன்பக் கடலாமே காதலரின் ஏம இருக்கையே தூம்திரையாம் - ஏமத்தீண்டு ஆம்பாலே தோன்றும் அளிஊடலாம்பரலில் தெற்றித் தெறிப்பாம் ஒளி ஒளிபாய் கண்ணே சீர்த் துற்றுகப்பாய்ப் பெற்ற மகவு. |
27 |
காமமானது யாவரும் விரும்புகின்ற இன்பக் கடலாகும், காதலன் காதலி இருவரும் கூடிய இன்பத்தின் இருக்கையே வீசும் அலையாகும், அவ்வின்பத்தினின்று இங்கு உண்டாகும் அன்பே முத்தாகும், அம்முத்தினின்று தெளிந்து எழுகின்ற ஒளியே ஊடலாம், அவ்வொளி பாய்கின்ற இடமே சிறந்து மகிழ்வுடன் பெற்ற குழவிகளாம்.
கருத்து : காமம் கடலாகும்; புணர்ச்சியே அக்கடலிற்றோன்றும் அலையாம்; அன்பு அலையில் வந்த முத்து ஆம்; ஊடல் அம்முத்தின் ஒளியாகும்; மக்கள் அவ்வொளி கூடும் இடமாகும்.
கறங்குபறை காணா உறுஊனைக் காதல் பிறங்கறை நாவாரும் அதே - திறம்இரங்கி ஊடிஉணர் வாரே தாம்இசைவார் பல்காலம் ஈடிலதோர் இன்ப விருந்து. |
28 |
பலியிடும்போது தன் பாலுற்ற ஊனினது சுவையை ஒலிக்கின்ற பறைகள் அறியா, காதலை விளங்கச் சொல்லுகின்ற நாவினையுடையவரும் அப்பறைகள் போலக் காதற் சுவையை யறியார்; (காதலிருவரும்) தன்மையறிந்து மனமிரங்கிப் புலந்து பின் அப்புலவி நீங்கிக் கூடியவரே, ஒப்பற்றதாகிய ஓர் இன்ப விருந்தினைப் பலகாலமும் தாம் நுகர்ந்து சுவையறிபவராவர்.
கருத்து : காதற் சுவையைப் பலர்க்கும் விரித்துப் பேசுவார் எல்லாரும் காமச்சுவையையறியார். காதலர் இருவரும் இயல்பறிந்து பிரிவுக்கிரங்கிப் பின் ஊடியும் கூடியும் போகம் நுகர்ந்தவரே சுவையறிந்தவராவர்.
தோற்றாரே வெல்வர் துணைமிசைவார் கோட்டியானை ஏற்றுக்கழல் தொடியார் மிக்காரை யார்வரைவர் போற்றளி கூடல் கரி. |
29 |
ஆண்யானைத் தந்தத்தாற் செய்த வீரக்கழலும் வளையலும் அணிந்த ஆடவர் மகளிரில், உயர்ந்தவர்களை யார் மணஞ்செய்துகொள்வர் (ஒப்பவரையே மணம்புரிவர்) , (அவ்வாறு ஒத்த) வாழ்க்கைத் துணையாக அமைந்து காமவின்பம் நுகர்வாரில், ஊடலில் தோல்வியடைந்தவரே வென்றவராவர்; அதற்குச் சான்று தோற்றவர் போற்றுவதும் தலையளி செய்வதும் ஆகிய செயல்களேயாம்.
கருத்து : கழல்-ஆடவர்க்குரியது; தொடி-மகளிர்க்குரியது; கழல் தொடியார் எனவே கழலும் தொடியும் அணிந்தவர் என அவ்விருவரையும் குறிப்பாக உணர்த்திற்று. "ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப" என்றும் பிறப்பே குடிமை ஆண்மை, ஆண்டோ, டுருவுநிறுத்த காமவாயில், நிறையேயருளே யுணர்வொடு திருவென, முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே" என்றும் தொல்காப்பியம் கூறுவதால் "மிக்காரை யார் வரைவர்" என்றார். இருவரும் ஒத்தவராயமைந்தால் அது வாழ்க்கைத் துணையென மதிக்கப்படும் என்பது கருத்து. வாழ்க்கைத் துணையாக மதித்து மணம்புரிந்த காதலர் இருவரினும் "தோற்றாரே வெல்வர் எனக்கொள்க. காதலன், காதலியாகிய இருவரிடத்தும் ஊடல் நிகழ்வதுண்டு. "யானூடத்தானுணர்த்த யானுணராவிட்டதற்பின், தானூட யானுணர்த்தத் தானுணரான்" என்று தலைவி கூறுவது சான்றாம். ஊடியிருந்த தலைவியைத் தலைவன் இன்சொற்கூறி யிரந்து வேண்டுவன், அது போலவே தலைவன் ஊடியிருப்பின் தலைவியும் வேண்டுவள் இருவரும் பின் புலவிநீங்கிக் கூடுவர். இவ்வாறு ஊடல் நிகழ்ந்து பின் கூடுவது மிகவும் இன்பம் பயக்கும் என்பது அறிஞர் கண்டவுண்மை. ஊடியிருந்த இருவரில் ஒருவர்க்குக் காமம் மிகின் அவர் பிணக்கு நீங்கி முதலிற் கூடுதற்கு மனங்கொள்வர். அவரையே தோற்றவர் என்று கொள்க. அவர் புணர்ச்சி விருப்ப மிகவும் உடையர் ஆதலால் அவரே புணர்ச்சிப்போரில் வெல்வார் என்பது குறிப்பு. வள்ளுவரும் "ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னும் கூடலிற் காணப்படும்" என்றார். இதனுண்மையாய்க. அவரது தலையளியும் கூடலும் அவர்வென்றமையை யுணர்த்துஞ் சான்றாம் என்பார் "போற்று அளி கூடல் கரி" என்றார்.
காதல் விரிநிலத்து ஆராவகை காணார் சாதல்நன்று என்ப தகைமையோர் - காதலும் ஆக்கி யளித்தழிக்கும் கந்தழியின் பேருருவே நோக்கிலரை நோவது எவன். |
30 |
பரந்த மண்ணுலகத்தில், காதலின்பம் (எப்போதும்) நிறையாதிருக்கும் விதத்தையறியாதவர்கள்; (காதலின்பத்தைக் கருதி வாழ்வதினும்) சாவதே நல்லது என்று சொல்லுவார்; நற்பண்புடையோரது காதலின்பமும் படைத்துக் காத்துத் துடைக்கும் கடவுளின் பெருமையாகிய வடிவமேயாகும்; (இவ்வுண்மையை) ஆராய்ந்து அறியும் அறிவில்லாதவர்களைக் குறித்து வருந்துவது என்னபயன்.
கருத்து : காமவின்பத்தின் இயல்பு அறியாதவர் இறந்து பேரின்பம் அடைவதே நல்லது என்பார், ஆராய்ந்து பார்த்தால் இச்சிற்றின்பமும் பேரின்பத்திற்கு வழியாகும். ஆதலால் சிற்றின்பத்தினைத் துய்த்து வாழ்வதே நல்லது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், இன்னிலை, கீழ்க்கணக்கு, பதினெண், காதல், சங்க