இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு
முப்பொருள் உண்மை தெளிவான் அருஞ்சீலன் முப்பொருள் உண்மை உடையான் அருமுனிவன் முப்பொருள் உண்மை மடுப்பான் இறையாங்கு முப்பொருள் உண்மைக்கு இறை. |
16 |
(அறம் பொருள் இன்பம் என்ற) மூன்று பொருள்களின் உண்மை இயல்புகளை யுணர்ந்து தெளிந்தவன் அருமையான நல்லொழுக்க முடையவனாவான். அம்மூன்று பொருள்களின் உண்மையறிவுடையவன் அரிய தவ முனிவனாவான். அம்மூன்று பொருள்களின் உண்மையை மனிதர்கட்குக் காட்டி வளர்ப்பவன் அரசனாவான், அம்மூன்று பொருள்களும் மெய்ப் பொருளுக்கு உறைவிடமாம்.
கருத்து : அறம் பொருள் இன்பம் என்ற மூன்று பொருள்களின் இயல்புணர்ந்து தெளிந்தவன் நல்லொழுக்கமுள்ளவன்; அவற்றை அறிந்தவன் முனிவன்; அவற்றை மனிதர்க்குக் காட்டிப் பெருக்குவோன் அரசன். பரம்பொருட்கு இருக்குமிடமும் அவையாம்.
கால்கலத்தால் சேர்பொருளும் கண்ணற்றார் தேர்பொருளும் நாலிரண்டால் கூடும் நலப்பொருளும் - கோல்தாங்கிக் கோடும் அரசிற்கு உரியாமே தொல்புவிக்கீழ் ஆடும் பொருளோடு அணைந்து. |
17 |
வண்டியாலும் கப்பலாலும் வந்து சேர்கின்ற சுங்கப் பொருளும், அறிவில்லாதவர் தேடிய பொருளும், வருவாயில் ஆறிலொரு பங்காகக் கொடுக்கும் நலமான பொருளும், பழைமையான புவிக்குக்கீழ் அசை கின்ற பொருளாகிய புதையலுடன் சேர்ந்து, செங்கோல் தாங்கி நீதி தவறி நடக்கும் அரசுக்கு உரியனவாமோ (உரியனவாகா செங்கோலரசர்க்கே யுரியனவாம்.)
கருத்து : சுங்கப் பொருளும் அறிவில்லார் தேடிய பொருளும், குடிகள் ஆறிலொன்று கொடுக்கும் பொருளும் நிலத்திற் புதைத்த பொருளும் செங்கோலரசர்க்கே சேரும்.
ஆம்போம் வினையாம் அணைவுற்ற பேர்வெறுக்கை ஓம்புஓம்பு எனமறை கூறத் தலைப்பெயலென் ஏம்போம் எனவரைதல் ஈட்டுநெறி தேராமை சாம்போழ்ந்து அலறும் தகைத்து. |
18 |
(பொருள்) முற்பிறப்பிற் செய்த வினை காரணமாக உண்டாகும் பின்பு அழிந்துபோகும், (அப்பொருளுக்கு) சேர்ந்த பெயர் வெறுக்கையாம், ஒழித்துவிடு ஒழித்துவிடு என்று வேதங்கள் கூறவும், அப்பொருளைச் சேர்ப்பது, என்ன காரணம், (பொருளீட்டி) களிப்படையோம் நாம் என்று கூறி அதனை நீக்குவது, பொருள் சேர்த்து இன்பம் துய்க்கும் வழியறியாமையே யாகும், அது இறக்கும்போது வருந்தியழுந் தன்மை யுடையது.
கருத்து : ஆம் போது ஆம் போம்போது போம் என்று எளிதாகச் செல்வத்தைக் கருதி இளமைப் பருவத்தில் தேடாமலிருந்தால் இறக்கும்போது மனைவி மக்களைக் குறித்து வருந்த வேண்டியது நேரிடும்.
பட்டாங்குத் தூயர் பழிச்சற்கு உரியராய் ஒட்டின்று உயர உலகத்தோர் - கட்டளை யாம்வெறுக்கை இன்றி அமையாராம் மையாவின் ஆம்வெறுக்கை நிற்க வுடம்பு. |
19 |
உலகத்துள்ள மக்கள், உண்மையாக, தூய்மையுடையவராகவும் துதிப்பதற்கு உரியவராகவும், ஒப்பில்லாமல் உயர்வதற்கு, செல்வமே உரைகல்லாம், அச் செல்வமில்லாமல் (வேறொன்றாலும் அளப்பதற்கும்) பொருந்தார் ஆம். (செல்வமின்றி) உடல்மட்டும் நின்றால், காட்டுப் பசுவைப்போல வெறுப்பதற்கு உரியதாம்.
கருத்து : உலகத்தில் மக்களையளந்து உயர்வு தாழ்வுகாட்டுவதற்குக் கட்டளைக் கல்லாக இருப்பது செல்வம். செல்வமில்லாதவ ருடம்பு காட்டுப் பசுப்போல வெறுக்கப்படுவதாம்.
3. இன்பப்பால்
அறங்கரை நாவானாம் ஆய்மயிலார் சீரில் அறங்கரையா நாப்பண் அடைவாம் - புறங்கரையாத் திண்மை நிலையின் உயர்புலத்தில் சேர்வாம் ஈண்டு எண்ணிலைக்கு உய்வாய் இது. |
20 |
இன்பத்தின் பகுதியைக் கூறுவது இது. ஐம்புலனுகர்ச்சியிற் சிறந்த இன்பமாவது மங்கையர் காமவின்பமேயாதலின் அதனைக்கூறும் பகுதியாம். மூன்றாவதாக இன்பப்பால் வைக்கப்பட்டுள்ளது.
அறங்கூறும் நாவினால் ஆராய்ந்த மயில்போன்ற மகளிருடன் கூடிவாழும் சிறப்பு (ஒருவனுக்கு) உண்டாகும், இல்லறத்தின் முடிவாக நடுவுலகம் (பொன்னுலகம்) அடைவது கூடும், புறத்தொழுக்கிற் சென்று தளராத வலிமையான நிலையால் உயர்ந்த முத்தியாகிய இடத்திற்குச் சேர்வதும் கூடும், (ஆதலால்) இவ்வுலகத்தில் ஆராய்ந்த நிலைகட்கு எல்லாம் செலுத்துகின்ற வழி, இவ்வழியேயாம்.
கருத்து : இல்லறமே சுவர்க்கத்துச் செல்லுவதற்கும், முத்தியுலகம் அடைவதற்கும் வழியாகும். ஆதலால் இல்லறத்தை நல்லறமாகக்கொள்ளல் வேண்டும் மக்கள் யாவரும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், முப்பொருள், இன்னிலை, கீழ்க்கணக்கு, பதினெண், உண்மை, சங்க