இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு
துணைஎன்ப காமவிருந்து துய்ப்பார் தோமில் இணைவிழைச்சின் மிக்காகார் ஆகல் - புணைதழீஇக் கூட்டும் கடுமிசையான் கட்டியில் கொண்டற்றால் வேட்டபோழ் தாகும் அணி. |
21 |
காமவின்பமாகிய விருந்துண்பவர் (கணவனும் மனைவியும்) முத்தியுலகஞ் செல்வதற்குத் தக்க துணையாவார் என்று ஆன்றோர் கூறுவர். (அவர்கள்) குற்றமில்லாத புணர்ச்சியின்பத்தின் மிகாதவர்களாகுக. அது புணையாகி அவர்களைத் தழுவி முத்தியிற் சேர்ப்பிக்கும். மணம் புரிந்த போது உண்டாகிய அழகின் தோற்றம், கசப்பு மருந்தினையுண்ணாதவனுக்குக் கருப்புக்கட்டியில் வைத்து ஊட்டினாற்போன்றது.
கருத்து : கணவனும் மனைவியும் முத்தியுலகு செல்வதற்கு வழித்துணையாவார்; காதலிற் கருத்து மிகுதியுஞ் செலுத்தாது வாழ்ந்தால், அது புணைபோலக்கொண்டு போய்ச் சேர்க்கும் மணமுடிப்பது பேரின்ப வாழ்வு குறித்ததுவேயாம்.
ஒப்புயர்வில் வேட்டோன் ஒருநிலைப்பட்டாழ்ந்த செயல் நப்பின்னை ஞாலம் ஒருங்கு அறிக - துப்பாராய்த் தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க ஏமக் கிழத்தி அறிந்து. |
22 |
ஒப்பில் உயர்வு இல்லாமல் (காதலன் காதலியிருவரும் ஒப்பென்று கருதி) மணந்தவன் ஒரு நிலைமையடைந்து (இன்பத்தில்) ஆழ்ந்திருந்த செய்தியை, நப்பின்னை (வாழ்வால் அறியலாம்) , உலக முழுவதும் அறிந்து கொள்க, மனத்தூய்மையுடையவராய்த் தூய பூவின் மென்மையாகிய தோற்றத்தையே மனதில் வைத்து (இல்லறம்) நடத்துக.
கருத்து : நப்பின்னையும் கண்ணனும் காதலுடன் கூடி இல்லறம் நடாத்தியது போல ஒருவர் தமக்கு வாழ்க்கைத்துணையை யறிந்து 'மணம் புரிந்து' மென்மைத் தன்மையாக இல்லறம் நடத்த வேண்டும்.
பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல் சால்பென்ப கண்கூடாக் காணாய் - தழைகாதல் வாலறிவன் ஆக்க வகையறிக காலத்தால் தோலொடு நாலைந்து அணந்து. |
23 |
பாலகனை வளர்த்து, பெருகிய ஆசையுடன், அழகுடன் நான்கு அல்லது ஐந்து ஆண்டு கூடிய அக்காலத்தில், (பள்ளியில் வைத்து) தூய அறிவுடையவனாக்குவதற்கு வேண்டும் வழியினை அறிந்து செய்க, (அவ்வாறு செய்யின்) திரண்ட காதணிகளையுடைய மங்கையின் இன்பத்தையுறுவது பெருமை என்று சொல்வார் (பெரியோர்) , அவ்வின்பத்தினை நீ கண்ணுக்குத் தோன்றும்படி காண்பாய்.
கருத்து : நல்ல மைந்தனைப் பெற்றெடுத்து வளர்த்துக் கல்வியறிவுடையனாகச் செய்தால் இல்லறத்தில் மனையாளுடன் கூடியவின்பம் பெருமையுடையதாம்.
அழுக்குடம்பு யாத்தசீர் மெல்லியலை ஆணம் முழுக்காட்டி மன்றின்முன் கைத்தாக் - குழீஇக்கூடல் என்னே செறிகாமம் பூட்டும் இயல்மாரன் மன்னரசால் மாண்பூப்பு உலகு. |
24 |
(எலும்பு நரம்பு முதலியவற்றாற்) கட்டப்பட்ட சிறப்புடைய அழுக்குப் பொருந்திய உடலுடைய மங்கையை, பலவகைக் கூட்டுப் பொருள்களைப் பூசி நீராட்டுவித்து (அலங்கரித்து) அவையோர் முன் கைப்பற்றிக் கொண்டுபோய்ப் புணர்தல் என்ன வியப்பு! நெருங்கிய காமத்தை (ஆடவர் மகளிர் என்ற இரு திறத்தார்க்கும்) பூட்டுகின்ற இயல்புடைய மன்மதனுடைய, நிலைபெற்ற அரசாட்சியினால் மண்ணுலகமானது மாண்பாக உண்டாவது.
கருத்து : அழுக்குடம்புடைய பெண்ணை ஒருவன் அலங்கரித்து மணம் புரிந்து வாழ்கிறான். அதனால் உலகம் மேலும் மேலும் பெருகி நிலைத்து நிற்கிறது.
இன்ப இயலோரார் யாணர் விழைகாமம் பொன்னின் அணிமலரின் செவ்விதாம் - தன்மேனி முத்தம் முறுவல் முயக்கொக்கின் அன்னத்தின் பெற்றியரின் என்பெறும் பேறு. |
25 |
காமவின்பத்தின் இலக்கணங்களை யறியார் (சிலர்) , புதுமையாக விரும்பும் காமவின்பம் பொன்னைப்போலவும், அழகிய மலரைப் போலவும் சிறப்புடையதாகும், ஒருவன் தனது உடம்புக்கு முத்துப்போன்ற பற்களையுடையார் புணர்ச்சி இன்பம் கிடைத்தால், அன்னப்பறவையின் இயல்புவாய்ந்த அம்மங்கையராற் பெறும் இன்பத்தினும் வேறு சிறந்த பேறு யாது? (இல்லை) .
கருத்து : காமவின்பத்தின் இயல்பறியார் சிலர் இகழ்ந்து பேசுவர். காமம் பொன்மலர் போல அழகும், இன்பமும் தருவது. காமத்தைப் போலச் சிறந்த பேறு வேறு ஒன்றும் இல்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், இன்னிலை, கீழ்க்கணக்கு, பதினெண், சங்க