திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு

பல்லவையுள் நல்லவை கற்றலும், பாத்து உண்டு ஆங் இல்லறம் முட்டாது இயற்றலும், வல்லிதின் தாளின் ஒரு பொருள் ஆக்கலும், - இம் மூன்றும் கேள்வியுள் எல்லாம் தலை. |
31 |
நல்லவற்றைக் கற்றலும், இல்லாளோடு குறைவின்றி அறம் செய்வதும், முயற்சியால் செயற்கரிய செய்கையை முடித்தலும் சிறந்த கல்வியாகும்.
நுண் மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலா வெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல் மொழியைச் சிற்றினம் அல்லார்கண் சொல்லலும், - இம் மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன். |
32 |
சொற்களை ஆராய்ந்து பொருள் கொள்ளுதலும், பயனற்ற சொற்களைச் சொல்லாதிருத்தலும், நல்ல சொற்களை கீழ்க்குலத்தார்க்குச் சொல்லுதலும் படித்தறிந்தவர் மேற்கொள்ள வேண்டிய கடமையாகும்.
கோல் அஞ்சி வாழும் குடியும், குடி தழீஇ ஆலம் வீழ் போலும் அமைச்சனும், வேலின் கடை மணி போல் திண்ணியான் காப்பும், - இம் மூன்றும் படை வேந்தன் பற்று விடல்! |
33 |
செங்கோலுக்கு பயந்த குடிமக்களையும், குடிமக்களை ஆலம் விழுது போல் தாங்கும் மந்திரியையும், எல்லையில் மணிபோல் உறுதியானவனின் திட்பமுடைய காவலையும் அரசன் விட்டுவிடாமல் இருக்கவேண்டும்.
மூன்று கடன் கழித்த பார்ப்பானும், ஓர்ந்து முறை நிலை கோடா அரசும், சிறைநின்று அலவலை அல்லாக் குடியும், - இம் மூவர் உலகம் எனப்படுவார். |
34 |
மூவர்க்குக் கடன் செய்த பார்ப்பானும், நீதி நிலையில் வழுவாத அரசனும், கவலையில்லாக் குடியும் உயர்ந்தோர் எனப்படுவர்.
முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும், நுண் நூல் பெருங் கேள்வி நூல் கரை கண்டானும், மைந் நீர்மை மேல் இன்றி மயல் அறுப்பான், - இம் மூவர் மெய்ந் நீர்மைமேல் நிற்பவர். |
35 |
கடலின் அலைபோல் எழுந்து தடுமாறாத அறிவுடையவனும், நுட்பமான நூல்களின் முடிவைக் கண்டானும், மனக்கலக்கம் ஒழித்தவனும், ஆகிய இம்மூவரும் அழியாத் தன்மை உடையவராவார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், திரிகடுகம், கடன், குடியும், மூன்றும், பொருள், பதினெண், கீழ்க்கணக்கு, மூவர், பார்ப்பானும், கண்டானும், நூல், எழுந்து, போல், மொழி, சங்க, கற்றலும், நுண், சொற்களை, ஆலம்