திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப் பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க் கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர் சாவா உடம்பு எய்தினார். |
16 |
மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும்.
மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும், கற்புடையாள் பூப்பின்கண் சாராத் தலைமகனும், வாய்ப் பகையுள் சொல் வென்றி வேண்டும் இலிங்கியும், - இம் மூவர் கல்விப் புணை கைவிட்டார். |
17 |
மூப்பு வந்தபோது துறவறத்தை மேற்கொள்ளாதவனும், கற்புடைய மனைவியைக் குறித்த காலத்தில் சேராதவனும், வாய்மொழி வெற்றியை விரும்பி பேசுகின்ற தவசிகளும், கல்வித் தெப்பத்தைக் கைவிட்டவர்கள் ஆவர்.
ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும், புணர்ந்தார்க்கு இரு தலையும் இன்னாப் பிரிவும், உருவினை உள் உருக்கித் தின்னும் பெரும் பிணியும், - இம் மூன்றும் கள்வரின் அஞ்சப்படும். |
18 |
உறுதியாக வரும் மூப்பு, நண்பரின் பிரிவு, உடம்பினை உருக்குகின்ற தீராத நோய், இம்மூன்றுக்கும் அஞ்சி எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
கொல் யானைக்கு ஓடும் குணமிலியும், எல்லில் பிறன் கடை நிற்று ஒழுகுவானும், மறம் தெரியாது ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும், - இம் மூவர், நாடுங்கால், தூங்குபவர். |
19 |
யானைக்கு அஞ்சி ஓடுகின்ற வீரனும், அயலான் மனைவியை விரும்புபவனும், நச்சுப் பாம்பை ஆட்டுகின்றவனும், விரைவில் கெடுவர்.
ஆசை பிறன்கண் படுதலும், பாசம் பசிப்ப மடியைக் கொளலும், கதித்து ஒருவன் கல்லான் என்று எள்ளப்படுதலும், - இம் மூன்றும் எல்லார்க்கும் இன்னாதன. |
20 |
பிறரிடமுள்ள பொருளுக்கு ஆசைப்படுவதும், சோம்பி இருத்தலும், கல்லான் என்று இகழப்படுவதும் யாவருக்கும் துன்பம் தருபவைகளாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், மூவர், திரிகடுகம், கீழ்க்கணக்கு, பதினெண், மூன்றும், அஞ்சி, யானைக்கு, கல்லான், மூப்பு, கற்புடைய, சங்க, கற்புடையாள், அவர், வேண்டும்