முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.048.திருவேகம்பம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.048.திருவேகம்பம்

5.048.திருவேகம்பம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்.
தேவியார் - காமாட்சியம்மை.
1548 | பூமே லானும் பூமகள் கேள்வனும் நாமே தேவ ரெனாமை நடுக்குறத் தீமே வும்முரு வாதிரு வேகம்பா ஆமோ அல்லற்படவடி யோங்களே. |
5.048.1 |
தாமரைப்பூமேல் உள்ளவனாகிய பிரமதேவனும், பூமகளாகிய இலக்குமிநாயகனாகிய திருமாலும்'யாங்களே பிரமம்' என்று கூறாது நடுக்குறும்படியாகத் தீ வடிவாகிய பெருமானே! திருவேகம்பத்தை உடையவனே! நின் அடியோமாகிய யாங்கள் அல்லறபடுதலும் ஆமோ?
1549 | அருந்தி றல்அம ரர் அயன் மாலொடு திருந்த நின்று வழிபடத் தேவியோ டிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம் பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே. |
5.048.2 |
அரிய திறலை உடைய தேவர்களும், திருமாலும், பிரமனும் திருத்த முறநின்று வழிபடும் வண்ணம் உமைநங்கையோடு இருந்த பெருமானது அருள் எழில் சேர்ந்த கச்சி ஏகம்பத்தைப் பொருந்த சென்ற வழிபடற்கு எழுவோமாக.
1550 | கறைகொள் கண்டத்தெண் தோளிறை முக்கணன் மறைகொள் நாவினன் வானவர்க் காதியான் உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம் முறைமை யாற்சென்று முந்தித் தொழுதுமே. |
5.048.3 |
திருநீலகண்டனும், எட்டுத்தோள்களை உடைய இறைவனும், முக்கண்ணினனும், வேதம் ஓதும் நாவினனும், தேவர்களுக்கெல்லாம் ஆதியானவனும் ஆகிய பெருமான் உறைகின்ற பூம்பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்தை நெறியினாற் சென்று முந்துறத்தொழுவோமாக.
1551 | பொறிப்புலன்களைப் போக்கறுத் துள்ளத்தை நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள் அறிப்பு றுமமு தாயவ னேகம்பம் குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே. |
5.048.4 |
பொறிகளைப், புலன்களின்வழிப் போதல் தவிர்த்து, உள்ளத்தை ஒரு நெறியின்கண்படச் செய்து நினைந்த மெய்யடியார்களின் சிந்தனையுள் அறிதலுறம் அமுதாகிய பெருமான் எழுந்தருளியுள்ள திருஏகம்பத்தைத் திருவருட் குறிப்பினாற் சென்று கூடித் தொழுவோமாக.
1552 | சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ டந்தி யாயன லாய்ப்புனல் வானமாய்ப் புந்தி யாய்ப்புகுந் துள்ள நிறைந்தவெம் எந்தை யேகம்பம் ஏத்தித் தொழுமினே. |
5.048.5 |
சிந்தையுள் சிவமாகிநின்ற செம்மையினோடு, அந்தியாகவும், அனலாகவும், புனலாகவும், வானமாகவும் நினைவார் புத்தியாகிய அந்தக்கரணமாகவும் எல்லாவற்றுள்ளும் புகுந்து, உள்ளத்தில் நிறைந்த எந்தையாரின் கச்சிஏகம்பத்தை ஏத்தித் தொழுவீர்களாக.
1553 | சாக்கி யத்தோடு மற்றுஞ் சமண்படும் பாக்கி யம்மிலார் பாடுசெ லாதுறப் பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம் நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே. |
5.048.6 |
புத்தமும், சமணமுமாகிய நெறிகளிற் பட்டுத் திருவருட்செல்வம் இல்லாதவர் மருங்குசெல்லாமல், மிகுந்த பூக்களைக்கொண்ட சேவடியானது கச்சியேகம்பத்தை நாவினைக் கொண்டு ஏத்தி விரும்பித் தொழுவோமாக.
1554 | மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை ஆர்ப்ப தன்முன் னணியம ரர்க்கிறை காப்ப தாய கடிபொழி லேகம்பம் சேர்ப்ப தாகநாஞ் சென்றடைந் துய்துமே. |
5.048.7 |
வெறுப்புமிகுந்து மூப்பினோடு எம்மையெல்லாம் கட்டுவதற்கு முன்பே, அணி உடைய அமரர்க்கு இறை உறைவதும்,காவலுடைய மணமிக்க பொழில் சூழ்ந்ததுமாகிய ஏகம்பத்தைச் சேர்வதாக நாம் சென்று தரிசித்து உய்வோமாக.
1555 | ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடும் சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே நீல மாமிடற் றண்ணலே கம்பனார் கோல மாமலர்ப் பாதமே கும்பிடே. |
5.048.8 |
நெஞ்சமே! ஒலிக்கின்ற பெரிய மயில்போலும் சாயலை உடைய பெண்களோடும் நீ மிகுந்து கொண்ட மயக்கத்தைத் தவிர்வாயாக; நீலமாகிய பெருமைமிக்க கழுத்தினை உடைய அண்ணலாகிய ஏகம்பனாருடைய கோலமிக்க மலர்ச் சேவடிகளைக் கும்பிட்டு உய்வாயாக.
1556 | பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே. |
5.048.9 |
அனைத்துப் பொய்யையும் விட்ட உயர்ந்தவர் புந்தியுள் மெய்யாகவிளங்குபவனும், சுடர்விடுகின்ற வெண்மழுஏந்திய கையை உடையவனும் ஆகிய கச்சியேகம்பத்தை விரும்பிப் பொருந்திய தலைவனைத் தொழுவார்க்கு அல்லல்கள் இல்லையாம்.
1557 | அரக்கன் தன்வலி யுன்னிக் கயிலையை நெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித் திரக்க இன்னிசை கேட்டவ னேகம்பம் தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே. |
5.048.10 |
தன் ஆற்றலைக் கருதியவனாய்த் திருக்கயிலையைழு சென்று எடுத்தவனாகிய அரக்கனின் முடிகளையும் தோள்களையும் நெரித்தவனும், அவனது இரக்கத்திற்குரிய இன்னிசையைக் கேட்டருள் புரிந்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருவேகம்பத்தை நாம் அருள் இறுமாப்புடன் சார்ந்து தொழுவோமாக.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவேகம்பம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சென்று, யேகம்பம், தொழுதுமே, பெருமான், கச்சியேகம்பத்தை, தொழுவோமாக, ஏத்தித், சார்ந்து, நெஞ்சமே, தாகநாஞ், கூடித், புந்தியுள், உறைகின்ற, திருச்சிற்றம்பலம், திருமுறை, திருமாலும், திருவேகம்பத்தை, சிந்தையுள், திருவேகம்பம், னேகம்பம்