முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.047.திருவேகம்பம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.047.திருவேகம்பம்
5.047.திருவேகம்பம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்.
தேவியார் - காமாட்சியம்மை.
1537 | பண்டு செய்த பழவினை யின்பயன் கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே வண்டு லாமலர்ச் செஞ்சடை யேகம்பன் தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே. |
5.047.1 |
நெஞ்சமே! நீ முற்பிறவிகளிற் செய்த பழவினைகளின் பயனைக் கண்டும் கண்டும் பின்னும் களிப்புற்றுக் கெடுகின்றனையே, வண்டு உலாவுகின்ற மலரையணிந்த செஞ்சடை உடையவனாகிய திருவேகம்பத்துப் பெருமானுக்குத் தொண்டனாகி உன் துயர்கள் தீரும்பொருட்டுத் திரிவாயாக.
1538 | நச்சி நாளும் நயந்தடி யார்தொழ இச்சை யாலுமை நங்கை வழிபடக் கொச்சை யார்குறு கார்செறி தீம்பொழில் கச்சி யேகம்ப மேகை தொழுமினே. |
5.047.2 |
அடியார்கள் நாள்தோறும் நசை உடையவராய் நயந்து தொழவும், உமைநங்கையார் இச்சையால் வழிபடவும் கண்டு,செறிந்த இனிய பொழில்களை உடைய கச்சியேகம்பத்தினை நீங்களும் கைகளாற் றொழுவீர்களாக.
1539 | ஊனி லாவி யியங்கி யுலகெலாம் தானு லாவிய தன்மைய ராகிலும் வானுலாவிய பாணி பிறங்கவெங் கானி லாடுவர் கச்சியே கம்பரே. |
5.047.3 |
கச்சி ஏகம்பர், உடல்கள்தோறும் உயிராய் இயங்கி உலகமெல்லாம் பொருந்திய இயல்பினை உடையவராயினும், வானமெங்கும் உலாவிய இசை விளங்கும் படியாக வெவ்விய சுடுகாட்டில் நட்டமும் ஆடுவர்.
1540 | இமையா முக்கண ரென்நெஞ்சத் துள்ளவர் தமையா ரும்மறி வொண்ணாத் தகைமையர் இமையோ ரேத்த இருந்தவ னேகம்பன் நமையா ளும்மவ னைத்தொழு மின்களே. |
5.047.4 |
இமையாத முக்கண்ணை உடையவரும், என் நெஞ்சத்தின் கண் உள்ளவரும், தம்மை யாரும் அறியவொண்ணாத பெருந்தகைமை உள்ளவரும். தேவர்கள் ஏத்துமாறு வீற்றிருந்தவரும, நம்மையாள்பவருமாகிய திருவேகம்பரைத் தொழுவீர்களாக.
1541 | மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும் பொருந்தி நின்றெனக் காயவெம் புண்ணியன் கருந்த டங்கண்ணி னாளுமை கைதொழ இருந்த வன்கச்சி யேகம்பத் தெந்தையே. |
5.047.5 |
கச்சியேகம்பத்தின்கண் எழுந்தருளியுள்ள எந்தை, எனக்கு மருந்தும், சுற்றமும், மக்களும் ஆகப் பொருந்திநின்று விளங்கும் புண்ணிய வடிவினன்; கரிய பெரிய கண்ணை உடைய உமாதேவி கைதொழ இருந்தவன் ஆவன்.
1542 | பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர்க் கருளு நன்மைதந் தாயவ ரும்பொருள் சுருள்கொள் செஞ்சடை யான்கச்சி யேம்பம் இருள்கெ டச்சென்று கைதொழு தேத்துமே. |
5.047.6 |
பற்று அற்றவர்களுக்குப் பொருளும், நற்சுற்றமும், அருளும் நன்மைதந்து ஆதலுற்ற அரும்பொருளும் ஆகியவனும், சுருளுதலைக்கொண்ட செஞ்சடை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கச்சிஏகம்பத்தை, உம்மைச்சார்ந்த இருள் மலங்கெடச் சென்று கரங்குவித்து வழிபடுவீர்களாக.
1543 | மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந் தாக்கு மைவர்த மாப்பை யவிழ்த்தருள் நோக்கு வான்நமை நோய்வினை வாராமே காக்கும் நாயகன் கச்சியே கம்பனே. |
5.047.7 |
கச்சியேகம்பத்து இறைவன், மெய், வாய், கண், மூக்குச் செவியாகி வந்து ஆக்கிய நும்புலன்களினாலாய கட்டினை அவிழ்த்தருளித் தன் திருக்கண்களால் நம்மை நோக்குவான்; நோய்களை உண்டாக்கும் வினைகள் நம்மிடத்து வாராமற் காக்கம் நாயகன் ஆவன்.
1544 | பண்ணி லோசை பழத்தினி லின்சுவை பெண்ணொ டாணென்று பேசற் கரியவன் வண்ண மில்லி வடிவுவே றாயவன் கண்ணி லுண்மணி கச்சியே கம்பனே. |
5.047.8 |
கச்சியேகம்பத்து இறைவன் பண்ணின் இசையாகவும் பழத்தில் இனிய சுவையாகவும், பெண் ஆண் என்று ஒருபாற்படுத்திப் பேசுதற்கு அரியவனாகவும் , வண்ணம் இல்லாதவனாகவும், வடிவம் வேறாயவனாகவும், கண்ணினுட் கருமணியாகவும் உள்ளான்.
1545 | திருவின் நாயகன் செம்மலர் மேலயன் வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான் ஒருவ னாயுணர் வாயுணர் வல்லதோர் கருவுள் நாயகன் கச்சியே கம்பனே. |
5.047.9 |
கச்சியேகம்பத்து இறைவன், திருமகளின் நாயகனாகிய திருமாலும், சிவந்த தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் அஞ்சி வெருவும்படியாக விளங்குகின்ற நிமிர்ந்த சோதி ஒளியாகவும், ஒப்பற்றவனாகவும், உணர்வு ஆகவும், உணர்வல்லாத கருவினுள் நாயகனாகவும் உள்ளான்.
1546 | இடுக நுண்ணிடை யேந்திள மென்முலை வடிவின் மாதர் திறம்மனம் வையன்மின் பொடிகொள் மேனியன் பூம்பொழிற் கச்சியுள் அடிக ளெம்மை யருந்துயர் தீர்ப்பரே. |
5.047.10 |
மிகச் சிறிய (இடுகிய) நுண்ணிடையையும், இளமை உடைய சற்றே ஏந்தினாற்போன்று மெம்முலையையும், உடைய வடிவினையுடைய பெண்கள்பால் உள்ளம் வையாதீர்கள்; திருநீற்றுப்பொடியணிந்த மேனியனாகிய, பொழில் சூழ்ந்த கச்சியேகம்பத்து எழுந்தருளியுள்ள இறைவன் எம்மையெல்லாம் அரிய துயரங்கள் தீர்த்துக் காப்பர்.
1547 | இலங்கை வேந்த னிராவணன் சென்றுதன் விலங்க லையெடுக் கவ்விர லூன்றலும் கலங்கிக் கச்சியே கம்பவோ வென்றலும் நலங்கொள் செலவளித் தானெங்கள் நாதனே. |
5.047.11 |
எங்கள் நாதனாகிய கச்சியேகம்பத்து இறைவன், இலங்கை வேந்தனாகிய இராவணன் சென்று தம் திருக்கயிலாயத்தை எடுக்க முற்படுதலும், தன் திருவிரலை ஊன்றக்கலங்குதலுற்று "கச்சி ஏகம்பத்து இறைவா!" என்று அவன் அலறினன்; அது கேட்டு நலம் பெற மீளும் செலவை அவனுக்கு அருளிய பெருங்கருணைத்திறம் உடையவன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவேகம்பம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கச்சியே, கச்சியேகம்பத்து, இறைவன், நாயகன், செஞ்சடை, சுற்றமும், கம்பனே, எழுந்தருளியுள்ள, சென்று, இலங்கை, உள்ளான், மக்களும், னோடுநற், கண்டுங், திருச்சிற்றம்பலம், திருமுறை, நெஞ்சமே, கண்டும், உள்ளவரும், விளங்கும், திருவேகம்பம்