திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
முருகுவாய் முள்தாழை நீள்முகைபார்ப் பென்றே குருகுவாய்ப் பெய்துஇரை கொள்ளாது - உருகிமிக இன்னா வெயில்சிற கால்மறைக்கும் சேர்ப்ப! நீ மன்னா வரவு மற! |
36 |
விரை வாய்த்த முட்டாழையினது நீண் முகையைக் குஞ்சு என்று கருதிக் குருவிகள் அம்முகை வாயிலே இரையைப் பெய்து தாம் அவ்விரையைக் கொள்ளாது உருகி மிக வின்னாத வெயிலைத் தஞ் சிறகால் மறைக்குஞ் சேர்ப்பை யுடையானே! நீ இங்கு வரும்நிலையாத வரவினை மறந்து நிலைக்கும் வரவினைச்செய்வாயாக.
ஓதநீர் வேலி உரைகடியாப் பாக்கத்தார் காதல்நீர் வாராமை கண்ணோக்கி - ஓதநீர் அன்றறியும் ஆதலால் வாராது அலர்ஒழிய மன்றறியக் கொள்ளீர் வரைந்து. |
37 |
ஓத நீர் வேலியை யுடைய பாக்கத்தார் உரையாற் கடியாது உம்மேலுள்ள காதலாற் றுன்புற்று இவள் கண்கள் நீர் வாராத வகை இவண்மாட்டு வேறுபாட்டைப் பார்த்து முன்பு நீரி்வட்குச் சொல்லிய வஞ்சினத்தை ஓத நீர் அறியுமாதலான், இவ்வாறு வாராது அலரொழியும் வகைமன்றத்தாரறிய வரைந்து கொள்ளீர்்.
மாக்கடல்சேர் வெண்மணல் தண்கானல் பாய்திரைசேர் மாக்கடல்சேர் தண்பரப்பன் மார்புஅணங்கா - மாக்கடலே என்போலத் துஞ்சாய் இதுசெய்தார் யார்உரையாய் என்போலும் துன்பம் நினக்கு. |
38 |
பெருங்கடலினானே வந்து சேர்ந்த வெண் மணற் றண் கானலின்கண் வந்து பரவாநின்ற திரை சேர்ந்த மாக்கடலைச் சேர்ந்த தண்பரப்பினை யுடையான் மார்பினான் வருத்தப்படாத பெருங்கடலே! என்னைப் போலக் கண்டுஞ்சுகின்றிலை; இக் கண்டுஞ்சாமையைச் செய்கின்ற என்போலுந் துன்பத்தை நினக்குச் செய்தார் யாவர்சொல்லாய்?
தந்தார்க்கே ஆம்ஆல் தட மென்தோள் இன்னநாள் வந்தார்க்கே ஆம்என்பார் வாய்காண்பாம் - வந்தார்க்கே காவா இளமணல் தண்கழிக் கானல்வாய்ப் பூவா இளஞாழல் போது. |
39 |
வந்து சேர்ந்தார்க்கு ஏமமாம் இளமணற் றண்கழிக் கானலிடத்து வந்து, முன்பு பூவாதே பூத்த இள ஞாழற் பூவினை இவட்குத் தந்தவர்க்கே யாமால், இவள் தடமென்றோள்; இந்நாள் வதுவை வரையப் புகுந்தார்க்கா மென்பாருடைய மெய்யுரையைக் காண்போம்.
தன்துணையோடு ஆடும் அலவனையும் தான் நோக்கா இன்துணையோடு ஆட இயையுமோ? - இன்துணையோடு ஆடினாய் நீயாயின் அந்நோய்க்குஎன் நொந்தென்று போயினான் சென்றான் புரிந்து. |
40 |
தன் பெடை ஞெண்டொடு இன்புற்று விளையாடும் அலவனையும் என்னையும் பார்த்து, 'என்னுடைய இனிய துணையோடு இப்பெற்றி போல ஆட எனக்குக் கூடுமோ?நின்னுடைய இன்றுணையாகிய பெடை ஞெண்டுடனே விளையாடினாய் நீயாயிற் பிரிவுத் துன்பம் அறியா யாதலான், அப்பெற்றிப்பட்ட நினக்கு என் பிரிவுத்துன்பத்தைச் சொல்லி நொந்து என்னை,' என்று சொல்லிப் போயினவன் பின்னை வந்து மேவித் தோன்றுகின்றிலன்,என் செய்தானோ!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, வந்து, இலக்கியங்கள், திணைமாலை, நீர், நூற்றைம்பது, கீழ்க்கணக்கு, பதினெண், துன்பம், நினக்கு, அலவனையும், பெடை, இன்துணையோடு, மாக்கடல்சேர், வந்தார்க்கே, பார்த்து, பாக்கத்தார், ஓதநீர், கொள்ளாது, வாராது, வரைந்து, சங்க, இவள், முன்பு