சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு
புண் பட்டார், போற்றுவார் இல்லாதார், போகு உயிரார், கண் கெட்டார், கால் இரண்டும் இல்லாதார், கண் கண்பட்டு ஆழ்ந்து நெகிழ்ந்து அவர்க்கு ஈத்தார்,-கடை போக வாழ்ந்து கழிவார், மகிழ்ந்து. |
76 |
போரின்கண் புகுந்து புண்பட்டார், பாதுகாக்குங் களைகணில்லாதார், உயிர்போந் தன்மையையடைந்தோர், குருடர், முதவர் என்று சொல்லப்பட்டாருடைய கண்ணிலே தங்கள் கண்கள் பட்டிரங்கி மனநெகிழ்ந்து வேண்டுவன கொடுத்தார் இடையூறு பட்டொழியாதே கடைபோக மகிழ்ந்து வாழ்ந்து போவார்.
கருத்துரை: புண்பட்டவர் முதலிய ஐவருக்கும் மனமிரங்கி அவர் வேண்டுவன கொடுத்துப் போற்றீயவர் இடையூறின்றி மகிழ்ந்து வாழ்ந்து கழிவார் என்பது.
பஞ்சப் பொழுது பாத்து உண்பான்; கரவாதான்; அஞ்சாது, உடை படையுள், போந்து எறிவான்; எஞ்சாதே உண்பது முன் ஈவான்; குழவி பலி கொடுப்பான்;- எண்பதின் மேலும் வாழ்வான். |
77 |
சிறுவிலைக் காலத்து, பலர்க்கும் பகுத்துண்பான், தனுமாட்டுள்ள பொருளி காவாது பிறருக்கே ஈவான், படையுடைந்த விடத்துத் தானஞ்சாதே வருகின்ற படையை யெறிந்து மீட்டுப் பலரையு முய்யக் கொளிவான், ஒரு நாளு மொழியாதே தானுண்பதனை முன்னே பிறர்க்கீத்துண்பான், பசித்த குழவிகட்குப் பலிகொடுப்பான் எண்பதிற்றாண்டின் மேலுந் துன்புறாது வாழ்வான்.
கருத்துரை: சிறிவிலை காலத்திற் பகுட்டுண்ணுதல் முதலியன செய்பவன் எண்பது ஆண்டுகட்கு மேலும் நீண்ட வாழ்நாளுடம் வாழ்வான்.
வரைவு இல்லாப் பெண் வையார்; மண்ணைப் புற்று ஏறார்; புரைவு இல்லார் நள்ளார்; போர் வேந்தன் வரைபோல் கடுங் களிறு விட்டுழி, செல்லார்; வழங்கார்; கொடும் புலி கொட்கும் வழி. |
78 |
பொது மகளைத் தமக்கு மனையாளாக மனையின்கண் வையார், பழையதாய்த் தலைமழுங்கியிருந்த புற்றின்மே லேறார், தம்மோடு நிகரில்லாதாரோடு நட்புக் கொள்ளார், போர்வேந்தனுடைய வரைபோலுங் கடுங்களிறு விட்டுழிச் செல்லார், பொடும்புலி சுழலும் வழியின்கண் நடவார்.
கருத்துரை: அறிஞர்கள் வேசையரை வீட்டில் வைத்துக் கொள்ளுதல் முதலியன செய்யமாட்டார்கள்.
தக்கார் வழி கெடாதாகும்; தகாதவர் உக்க வழியராய் ஒல்குவார்; தக்க இனத்தினான் ஆகும், பழி, புகழ்; தம் தம் மனத்தினான் ஆகும், மதி. |
79 |
தகுதியுடையார் வழிமரபுகெடாதாகும், தகுதியில்லாதார் கெட்டவழி மரபையுடையராயே தளர்வார், பழிக்கத்தக்க இனத்தினா னாகும் பழியும், புகழுக்குத் தக்க இனத்தினானாகும் புகழும், தனது மனத்தினளவே யுண்டாகும் அறிவும்.
கருத்துரை: நல்லவர்கள் கால்வழி கெடாது, நல்லவர்களல்லாதவர் கால்வழியே கெடும், தீய சேர்க்கையால் பழியும், நற்செய்கையால் புகழும், தத்தம் மனவியற்கைக்கு ஏற்ப அறிவும் மக்கட் குண்டாகும்.
கழிந்தவை தான் இரங்கான், கைவாரா நச்சான், இகழ்ந்தவை இன்புறான், இல்லார் மொழிந்தவை மென் மொழியால், உள் நெகிழ்ந்து, ஈவானேல், - விண்ணோரால் இன் மொழியால் ஏத்தப்படும். |
80 |
இறந்த பொருட்டுத் தானிரங்கான், தனக்குக் கைவாராதனவற்றை நச்சி வருங்கான், நல்லாரா னிகழப்பட்டவற்றை யின்புறான், வறியாரிரந்து வேண்டியவற்றை மென்மொழி சொல்லி யுண்ணெகிழ்ந்தீவானாயிற் றேவர்களானினிய மொழிகளாலே புகழப்படும்.
கருத்துரை: கழிந்தவற்றிற்கு இரங்கான் முதலியன உடையான் தேவர்களாற் புகழ்தற்குரியனாவான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்துரை, இலக்கியங்கள், வாழ்ந்து, மகிழ்ந்து, சிறுபஞ்சமூலம், வாழ்வான், முதலியன, பதினெண், கீழ்க்கணக்கு, ஆகும், தக்க, புகழும், மொழியால், இரங்கான், அறிவும், செல்லார், பழியும், ஈவான், நெகிழ்ந்து, இல்லாதார், சங்க, கழிவார், வேண்டுவன, வையார், மேலும், இல்லார்