சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு
தான் பிறந்த இல் நினைந்து, தன்னைக் கடைப்பிடித்து, தான் பிறரால் கருதற்பாடு உணர்ந்து, தான் பிறரால், 'சாவ' என வாழான், சான்றோரால், 'பல் யாண்டும் வாழ்க!' என வாழ்தல் நன்று. |
66 |
தான்பிறந்த குடியை நினைத்து, தன்னையொழுக்கத்தின் வழுவாதவகைக் கடைப்பிடித்து, தான் பிறரால் மதிக்கப்படுஞ் செய்கையை யுணர்ந்து, தான் பிறராற் சாகவென்று சொல்லும்படி யொழுகாது சான்றோராலே பல்யாண்டும் வாழ்வானாக என்று சொல்லும்படி யொழுகுதனன்று.
கருத்துரை: ஒருவன் தான்பிறந்த குடியின் பெருமையை நினைத்தல் முதலியவற்றை யுடையவனாய் உயிர்வாழ்தல் நன்மையாமென்பதாம்.
நெடுக்கல், குறுக்கல், துறை நீர் நீடு ஆடல், வடுத் தீர் பகல்வாய் உறையே, வடுத் தீரா ஆகும் அந் நான்கு ஒழித்து, ஐந்து அடக்குவான் ஆகில், வே கும்பம் வேண்டான் விடும். |
67 |
மயிரைச் சடையாக நீட்டுதலும், மயிரைக் குறைத்தலும், தீர்த்தங்கள் நெடிதாகப் போயாடுதலும், வடுத்தீர்ந்த பகலின்கண் உண்ணுதலென்கின்ற குற்றமுந் தீராவாகின்ற அந்நான்கினையு மொழித்தலும், ஐந்து புலன்களையு மடக்குவானாகிற் சுடலைத் தீயுள் வேகக்கடவ கும்பமாகிய உடம்பினை வேண்டான் விடும்.
கருத்துரை: சடையை வளர்த்தல் முதலியவற்றால் இப்பிறவி யொழியாது; ஐம்புலன்கள் அடக்கு மாற்றால் நீங்கும். புலன்களை யொடுப்பாதவர்களுக்குச் சடைவளர்த்தல் முதலியன பயன்தரா.
கொன்றான், கொலையை உடன் பட்டான், கோடாது கொன்றதனைக் கொண்டான், கொழிக்குங்கால், கொன்றதனை அட்டான், இட உண்டான், ஐவரினும் ஆகும் என, கட்டு எறிந்த பாவம் கருது. |
68 |
உயிரைக் கொன்றவன், கொலைக்குக் கோடாதே யுடன்பட்டவன், கொல்லப்பட்டதனுடைய ஊனைக்கொண்டவன், ஆராயுங்காற் கொல்லப்பட்டதனுடைய ஊனை அட்டான், அதனை யிடவுண்டான் என இவ்வைவர் மாட்டு முளவாய் நிகழுமென்று வரம்பழித்துச் செய்த பாவத்தைக் கருது.
கருத்துரை: கொலை செய்தவன்முதல் உண்டவன் ஈறாக எல்லார்க்குமே கொலைக்குற்றமுண்டு.
சிறைக் கிடந்தார், செத்தார்க்கு நோற்பார், பல நாள் உறைக் கிடந்தார், ஒன்றுஇடையிட்டு உண்பார், பிறைக் கிடந்து முற்றனைத்தும் உண்ணாத் தவர்க்கு, ஈந்தார், - மன்னராய், கற்று அனைத்தும் வாழ்வார், கலந்து. |
69 |
சிறையின்கட் கிடந்தார், செத்தவர்க்கு நன்மை வேண்டி யுண்ணாது நோற்பார், பலநாளுந் தான் கொண்டபிணிக்கு மருந்தாயுண்ணாது கிடந்தார், ஒருநாளிடையிட்டுண்பார், பிறைக்கிடந்து நிறம்புமளவும் உண்ணாத தவசிகளென இவ்வைவர்க்கும் உணவு கொடுத்தவர்கள் அனைத்து நூல்களுங் கலந்து கற்ற மன்னராய் வாழ்வார்.
கருத்துரை: சிறை கிடந்தார் முதலிய ஐவருக்கும் உணவு கொடுத்தவர்கள் கல்வி அறிவுள்ள அரசராய் நீடு வாழ்வார்.
ஈன்று எடுத்தல்; சூல் புறஞ்செய்தல்; குழவியை ஏன்று எடுத்தல்; சூல் ஏற்ற கன்னியை, ஆன்ற அழிந்தாளை, இல் வைத்தல்; - பேர் அறமா ஆற்ற மொழிந்தார், முது நூலார், முன்பு. |
70 |
ஈன்ற தாய் குழவியைத் துறவாதோம்பி வளர்த்தல், தான்கொண்ட சூலைத் தானழியாது புறஞ்செய்தல், வளப்பாரில்லாத குழவியைக் கண்டாலேன்று வளர்த்தல், சூலேற்ற கன்னியையும் அழிந்த மனையாளையும் நீக்காது தன்னில் தே்துப் புறந்தருதல் என இவ்வைந்தும் பெரிய அறமாக மிகவுமொழிந்தார் முதிய நூலையுடையவர் பண்டு.
கருத்துரை: ஈன்றெடுத்தல் முதலிய ஐந்தும் பெரிய அறமாக முற்காலத்தில் நூலறிவையுடைய பெரியோர் சொன்னார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, தான், கிடந்தார், கருத்துரை, இலக்கியங்கள், சிறுபஞ்சமூலம், வாழ்வார், பிறரால், வளர்த்தல், கீழ்க்கணக்கு, பதினெண், கலந்து, மன்னராய், உணவு, நோற்பார், எடுத்தல், பெரிய, அறமாக, புறஞ்செய்தல், சூல், முதலிய, கொடுத்தவர்கள், விடும், தான்பிறந்த, சொல்லும்படி, கடைப்பிடித்து, கல்வி, சங்க, நீடு, வடுத், அட்டான், கருது, வேண்டான், ஐந்து, ஆகும், கொல்லப்பட்டதனுடைய