பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
வாள் திறலானை வளைத்தார்கள், அஞ் ஞான்று, வீட்டிய சென்றார், விளங்கு ஒளி காட்ட, பொறுவரு தன்மை கண்டு, அஃது ஒழிந்தார்;-அஃதால், உருவு திரு ஊட்டுமாறு. |
301 |
முன்னொரு காலத்தில் நாந்தகம் என்னும் வாளினை உடைய மிக்க திறல் பொருந்திய திருமாலை கொல்லும் பொருட்டுச் சென்ற மது கைடவர் என்போர் வளைந்து சூழ்ந்தார்களாகி நிலைபெற்று விளங்குகின்ற தனது திருமேனியின் ஒளியைக்காட்ட ஒப்பில்லாத வடிவின் தன்மையைக் கண்டு தாங்கொண்ட மாறுபாட்டினின்றும் நீங்கினார்கள்; உருவு திரு ஊட்டுமாறு - அழகிய வடிவே செல்வத்தை ஊட்டும் நெறி; அஃதால் - அதுவன்றோ?
கருத்து: உருவப் பொலிவால் பகைவர் வயமாவர் என்றது இது.
வலியாரைக் கண்டக்கால் வாய் வாளார் ஆகி, மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை,- புலி கலாம் கொள் யானைப் பூங் குன்ற நாட!- வலி அலாம் தாக்கு வலிது. |
302 |
புலியொடு மாறுபாடு கொள்ளும் யானையையுடைய அழகிய மலை நாடனே! தம்மின் வலியாரைக் கண்டவிடத்து வாயாலும் அடக்கமுடையராகி தம்மின் மெலியாரிடத்து அடர்ந்து மிக்கு ஒழுகும் மேம்பாடுடைமை வலியில்லாத காலத்து வலிமை உண்டாயினவாறு போலும்.
கருத்து: அரசன் தனக்கு மிக்க வலியில்லாத காலத்து வலியார்க்கு அஞ்சி மெலியார்மேல் மீதூர்ந்தொழுகுக என்றது இது.
ஒன்னார் அட நின்ற போழ்தின், ஒரு மகன் தன்னை எனைத்தும் வியவற்க! துன்னினார் நன்மை இலராய்விடினும், நனி பலர் ஆம் பன்மையின் பாடு உடையது இல். |
303 |
பொருந்தாதோர் போரிடத்தும் தம்மைக் கொல்லநின்றபொழுதில் வீரத்தின்கண் மிக்கானாயினும் தனித்துநின்ற ஒருமகன் தன்னை எத்துணையும் வியந்து கூறாதொழிக கொல்லும் பொருட்டுச் சூழ்ந்து நின்றார் வீரத்தால் நன்மையிலராய் நின்றாராயினும். மிகப்பலராயிருத்தலைவிட வலிமையுடைய தொன்றில்லையாதலின்.
கருத்து:வீரமுடைமையினும் படைவலி வேண்டுமென்பது.
தன் நலிகிற்பான் தலை வரின், தான் அவற்குப் பின், நலிவானைப் பெறல் வேண்டும்-என்னதூஉம் வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே, நாய் பின்னதாகத் தகர். |
304 |
எத்துணை வருந்தி வாய் முன்னதாகும்படி கட்டியிழுத்தாலும் ஆடு நாய் தன் பின்னே வர முன்னே போதல் இல்லை; (ஆதலால்) தன்னை நலியவல்லவன் மீதூர்ந்து மேல்வரின் அவருக்குத் துணையாய் அவன் பின்னின்று தன்னை வருத்தவருபவனைத் தான்துணையாகப் பெறுதல் வேண்டும்.
கருத்து: பகையிரண்டனுள் ஒன்றனைத் துணையாக்கிக் கொள்க என்றது இது.
யானும் மற்று இவ் இருந்த எம் முன்னும், ஆயக்கால், ஈனம் செயக் கிடந்தது இல் என்று, கூனல் படை மாறு கொள்ளப் பகை தூண்டல் அஃதே- இடை நாய்க்கு எலும்பு இடுமாறு. |
305 |
யானும் இவ்விடத்திலிருந்த என் தமையனும் ஒன்றுசேர்ந்து ஒரு செயல் செய்யப்புகுந்த இடத்து பகைவருடைய வீரம் செய்யத்தக்கது யாதொன்றுமில்லையென்று கூறி அவரும் தம்மொடு சேர்ந்து தமக்குத் துணைப் படையாக நின்று மாறுகொள்ளுமாறு பகைவரிடமிருந்து பிரிய அவரைத் தூண்டுதலாகிய அதுவே ஆடு காத்து நிற்கும் இடையர் நாய்க்குத் திருடர் எலும்பினையிடுதலோடொக்கும்.
கருத்து: பகை யிரண்டாயவழி இன்சொற்கூறி அவற்றுள் ஒன்றனை வயப்படுத்துக என்றது இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 59 | 60 | 61 | 62 | 63 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, என்றது, தன்னை, இலக்கியங்கள், வாய், பழமொழி, நானூறு, பதினெண், கீழ்க்கணக்கு, தம்மின், வலியாரைக், வேண்டும், யானும், நாய், காலத்து, வலியில்லாத, கொல்லும், அஃதால், கண்டு, சங்க, உருவு, திரு, பொருட்டுச், மிக்க, ஊட்டுமாறு, அழகிய