பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க! போற்றாது கொண்டு அரக்கன் போருள் அகப்பட்டான் நோற்ற பெருமை உடையாரும், கூற்றம் புறம் கொம்மை கொட்டினார் இல். |
291 |
தவம் ஆற்றியதா லுண்டாகும் பெருமையினை உடையவர்களும் கூற்றத்தை அதன் பின்னே நின்று கைகளைக் குவித்துக் கொட்டி வலிய அழைத்தாரிலர் இராவணன் ஆராய்தலின்றி இராமனோடு பகை கொண்டு போரிடைப்பட்டு இறந்தொழிந்தான் (ஆதலால்) மிகவும் பெரியவர்களுடைய பகையினை விரும்பி மேற்கொள்ளா தொழிக.
கருத்து: அரசன் தன்னின் வலியாரிடத்துப் போர்செய்தல் ஒழிக என்பதாம்.
பெரியாரைச் சார்ந்தார்மேல், பேதைமை கந்தா, சிறியார் முரண் கொண்டு ஒழுகல், வெறி ஒலிக்கு ஓநாய் இனம் வெரூஉம் வெற்ப!-புலம் புகின், தீ நாய் எடுப்புமாம் எண்கு. |
292 |
வெறியாட்டெடுக்கும் ஒலியைக் கேட்டு ஓநாய்க் கூட்டங்கள் அஞ்சாநின்ற மலைநாட்டை யுடையவனே! வலியிற் சிறியவர்கள் வலியாற் பெரியோர்களைச் சார்ந்து நிற்பவர்களிடத்து அறியாமையையே பற்றுக்கோடாகக் கொண்டு மாறுபாடு கொண்டு ஒழுகற்க; (அது) தீய நாய் நாட்டின்கண் புகுந்தால் உறங்காநின்ற கரடியைஎழுப்புகின்றதை ஒக்கும்.
கருத்து: வலியாற் பெரியார்மீது மாறுபட்டு நிற்றலை ஒழிதலே யன்றி அவரைச் சார்ந்தார்மீதும் அங்ஙனமே யாகுக என்றது இது.
இகலின் வலியாரை எள்ளி, எளியார், இகலின் எதிர் நிற்றல் ஏதம்;-அகலப் போய், என் செய்தே ஆயினும் உய்ந் தீக!-சாவாதான் முன்கை வளையும் தொடும். |
293 |
போர் செய்தலில் வல்லமை உடையவர்களை இகழ்ந்து வலிமைகுன்றி நின்றோர் போரில் எதிர்த்து நிற்றல் அவருயிர்க்கு இன்னல் தருவதாம் (ஆதலின்) நெடுந்தொலைவிற் சென்று எத்தகைய சூழ்ச்சியைச் செய்தேயாயினும் உயிர் பிழைக்க; தப்பி உயிர்பிழைத் திருப்பவன் ஒருகால்அவர்களை வென்று தனது முன்கையில் கடகத்தையும் அணிந்துகொள்ளுவானாதலால்.
கருத்து: வலியாரோடு போர்செய்யத் துணிந்து நிற்றல் உயிருக்கு இறுதிபயப்ப தொன்றாம்.
வென்று அடுகிற்பாரை வெப்பித்து, அவர் காய்வது ஒன்றொடு நின்று சிறியார் பல செய்தல்- குன்றொடு தேன் கலாம் வெற்ப!-அது பெரிதும் நன்றொடு வந்தது ஒன்று அன்று. |
294 |
குவடுகளோடு தேனொழுக்குகள் மாறுபட்டுக் கலாம் விளைக்கும் மலை நாட்டை உடையவனே! தம்மைக்கொல்ல வல்லவர்களை கொதிப்பிக்கச் செய்து அவர் காய்வதாகிய ஒரு செயலின் கண்ணே நின்று வலிமையாலும் அறிவாலும் சிறியவர்கள் அவர்க்கு மாறுபட்ட பலவற்றைச் செய்தல் அச் செயல் மிகவும்நல்லகாலத்திற்குத் தனக்கு வந்ததொரு செயலன்று.
கருத்து: வலியார்க்கு மாறுபட்டு நின்று அறிவிலார் செய்வன அவர்க்கே தீங்கினை விளைவிக்கும்.
'உரைத்தவர் நாவோ பருந்து எறியாது' என்று, சிலைத்து எழுந்து, செம்மாப்பவரே-மலைத்தால், இழைத்தது இகவாதவரைக் கனற்றி, பலிப் புறத்து உண்பர் உணா. |
295 |
உரைக்கத் தகாதனவற்றை உரைத்தவர் நாவினைப் பருந்து எறிந்துண்ணா தென்று கருதி மிகுதி கொண்டு இறுமாந்திருப்பவர்கள் ஒருவர் தம்மோடு மாறுபட்டு நின்றால் அவர் தம்மைத்தாம் செய்ய நினைத்ததைத் தவறாது முடிக்க வல்லாரை வெகுளச்செய்து பலிபீடத்தின் மேலிட்ட உணவினை உண்பவராவர்.
கருத்து: அரசர்க்கு யாவரையும்இகழ்ந்து பேசிச் செருக்குறுதல் ஆகாததொன்றாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 57 | 58 | 59 | 60 | 61 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கொண்டு, கருத்து, இலக்கியங்கள், நின்று, மாறுபட்டு, பழமொழி, நானூறு, நிற்றல், பதினெண், அவர், கீழ்க்கணக்கு, வென்று, உரைத்தவர், பருந்து, கலாம், செய்தல், நாய், சிறியார், சங்க, வெற்ப, சிறியவர்கள், வலியாற், இகலின்