பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
உறு மக்கள் ஆக ஒருவனை நாட்டி, பெறு மாற்றம் இன்றி, பெயர்த்தே ஒழிதல் சிறுமைக்கு அமைந்தது ஓர் செய்கை;-அதுவே, குறுமக்கள் காவு நடல். |
121 |
வேலைக்குத் தகுதியானவராக ஒருவரை வேலையில் இருக்கச்செய்து அவர் செய்த குற்றம் உண்டு என்னும் சொல் இன்றியே அவரைவேலையினின்றும் தவிர்த் தொழிதல் கீழ்மக்களுக்குப் பொருந்திய செயலாம். அச்செயல் பிள்ளைகள்சோலைவைத்து வளர்ப்பதை ஒக்கும்.
கருத்து: கீழ்மக்கள் தொடங்கிய செயல் முடிவுபெறாது.
உரை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய, நிரை உளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்,- வரை தாழ் இலங்கு அருவி வெற்ப!அதுவே, சுரை ஆழ, அம்மி மிதப்பு. |
122 |
மலையினின்றும் விழுகின்ற ஒளிவிளங்கும் அருவியை உடைய மலை நாடனே! புகழ் நிறைந்த குடியிற் பிறந்த அறிவு நிறைந்தவர்கள் வறுமையால் வருந்திநிற்க நல்ல குடிமரபின் வரிசையில் சேராதவரான கீழோர் செல்வத்தால் தலைநிமிர்ந்து பெருகுதல் ஆகிய அது நீரிலே சுரைஆழ்வதையும் அம்மி மிதப்பதையும் ஒக்கும்.
கருத்து:நற்குடிப் பிறவார் செல்வத்தால் தருக்கிநிற்பர்.
தேர்ந்து, கண்ணோடது, தீவினையும் அஞ்சலராய், சேர்ந்தாரை எல்லாம் சிறிது உரைத்து, தீர்ந்த விரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும் நரகர்கட்கு இல்லையோ நஞ்சு. |
123 |
ஆராய்ந்து கண்ணோட்டம் செலுத்தாது அஞ்சவேண்டிய தீய செயல்களுக்கும் அஞ்சாதவராய் தம்மைச் சேர்ந்தார் எல்லோரையும் சிறுமைப்படப்பேசி நெருங்கிய உறவினர்கட்கு எல்லாம் வெறுப்பானவைகளையே செய்யும் நரகம் புக இருக்கின்றவர்களுக்கு (அவர் உயிரை உண்ணும்)விடம் உலகில் இல்லையோ?
கருத்து:இத்தகைய கீழ்மக்கள் இருப்பதைவிட இறப்பதே நன்று.
14. நட்பின் இயல்பு
ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா, கட்டங்கம் வெல் கொடி கொண்டானும், கொண்டானே;- விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே, நட்டாரை ஒட்டியுழி. |
124 |
பொருந்திய அன்பினை உடைய உமையை ஒரு கூறாக தண்டினையும் வெல்லுகின்ற ஏற்றுக்கொடியினையும் உடைய சிவபிரான் ஏற்றுக்கொண்டான் தம்மொடு நட்புச் செய்தாரைத் தாம் அடைந்தவிடத்து அங்கே விட்டு நீங்காத தம் உடம்புமுழுதும் கொள்வார்கள்.
கருத்து: நல்லோர் தம் நட்பினரிடத்துத் தாம் வேறு,அவர் வேறு என்னும் வேறுபாடின்றி ஒழுகுவர்.
புரை இன்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த உரையும் பொருள் முடிவும் ஒன்றால் - உரை பிறிது கொண்டு எடுத்துக் கூறல், கொடுங் கழித் தண் சேர்ப்ப! ஒன்று எற்றி வெண்படைக்கோள் ஒன்று. |
125 |
வளைந்த உப்பங்கழிகளை உடைய குளிர்ந்த கடல் நாடனே! குற்றம் இன்றி நட்புப் பூண்டவர்களுக்கு அவரின் நட்பினர் கூறிய சொல்லும் அதன் பொருளும் வேறுபடாது ஒன்றேயாம் பொருள் வேறாக மனத்தில் நினைத்துக் கொண்டு வஞ்சனையால் விளக்கிக் கூறுதல் ஒருவனது பா ஒன்றினைச் செலுத்தி வெண்பாவாக செய்து கொள்ளுகின்ற ஒன்றை ஒக்கும்.
கருத்து: மனம் வேறு, சொல் வேறாக, நட்பினரிடத்தில் கூறுதல் மிக்கவஞ்சனை பொருந்தியதாகக் கருதப்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, உடைய, இலக்கியங்கள், பதினெண், நானூறு, ஒக்கும், அவர், பழமொழி, எல்லாம், வேறு, இன்றி, கீழ்க்கணக்கு, இல்லையோ, விட்டு, தாம், கொண்டு, கூறுதல், வேறாக, ஒன்று, செய்யும், பொருள், கீழ்மக்கள், குற்றம், அதுவே, சங்க, என்னும், சொல், நாடனே, அம்மி, பொருந்திய, செல்வத்தால்