பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
குலத்துச் சிறயார், கலாம் தணிப்பான் புக்கு விலக்குவார் மேலும், எழுதல்-நிலத்து நிலை அழுங்க வேண்டிப் புடைத்தக்கால், வெண் மாத் தலை கீழாக் காதிவிடல். |
111 |
குலத்தினால் சிறியவர்கள் (பிறரிடம் கொண்ட) பகைமையை நீக்கும்பொருட்டு இடைப்புகுந்து விலக்குவாரிடத்தும் சினந்து எழுதல் அவ்விடத்தில் நிற்கின்ற நிலை நீங்கும் பொருட்டு (சாட்டையால்) அடித்தவிடத்து வெள்ளிய குதிரையானது சவாரி செய்யத் தெரியாதவனைத் தலைகீழாகத் தள்ளித் துன்புறுத்துவதோ டொக்கும்.
கருத்து: கீழ்மக்கள் தமக்கு நன்மை செய்வோரிடத்திலும் வெகுண்டுஎழுவார்கள்.
சொல் எதிர்ந்து, தம்மை வழிபட்டு ஒழுகலராய், கல் எறிந்தாற் போலக் கலாம் தலைக்கொள்வாரை இல் இருந்து, ஆற்ற முனிவித்தல்,-உள் இருந்து, அச்சாணி தாம் கழிக்குமாறு. |
112 |
தாங்கூறும் அறிவுரைகளை யேற்றுக்கொண்டு தம்மை வழிபாடு செய்து ஒழுகாதவராய் கற்களை வீசினாற்போன்ற தீய சொற்களைச் சொல்லிப் பகைமையை மேற்கொள்வாரை அவர் வீட்டினுள்ளேயிருந்து மிகவும் அவரை முனிவித்தல் தேரின் உள்ளே இருந்து அச்சின் கண்சொருகும் ஆணியைத் தாமே நீக்கிவிடுவது போலாம்.
கருத்து: கீழ்மக்களது அருகில் இருந்து அவருக்குச் சின மூட்டுதல் தனக்குத் தீங்கினை விளைவித்துக்கொள்வதாக முடியும்.
நாணார், பரியார், நயன் இல செய்து ஒழுகும் பேணா அறிவு இலா மாக்களைப் பேணி, ஒழுக்கி, அவரோடு உடனுறைசெய்தல்- புழுப் பெய்து புண் பொதியுமாறு. |
113 |
நன்மையில்லாத செயல்களைச் செய்து ஒழுகுகின்ற யாவரானும் விரும்பப்படாத அறிவு இல்லாத விலங்கு ஒப்பாரை விரும்பிநடத்தி அவருடன் கூடி வாழ்தலைச் செய்தல் புழுவினை உள்ளே இட்டுப் புண்ணைமூடிவைத்ததோடு ஒக்கும்.
கருத்து: தீயாரோடு உடனுறையின் தீமையே விளையும்.
பொல்லாத சொல்லி, மறைந்து ஒழுகும் பேதைகள் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்;-நல்லாய்!- மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும் தன் வாயால் கெடும். |
114 |
நற்குணமுடையாய்! மணலுள் பதிந்து மறைந்திருக்கும் தவளையும் தன்குரலைக் காட்டுதலால் தன் வாயாலேயே தன்னைத் தின்பார்க்கு அகப்பட்டு இறந்தொழியும் தீயனவற்றைக்கூறி ஒளித்து நிற்கும் அறிவிலான் தான்கூறும் சொற்களாலேயே தன்னைத் துன்பத்தின்கண்அகப்படுத்திக்கொள்வான்.
கருத்து:அறிவிலான் தன் வாயாலேயே தனக்குத் தீங்கு தேடிக்கொள்வான்.
தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்கு உரைத்து, போக்குற்ற போழ்தில் புறன் அழீஇ, மேன்மைக்கண் நோக்கு அற்றவரைப் பழித்தல் என்? என்னானும், மூக்கு அற்றதற்கு இல், பழி. |
115 |
எப்படி ஆயினும் மூக்கு அறுபட்டதற்குப் பழிப்பு இல்லை (அதுபோல) ஒருவரைத் தலைப்பட்ட பொழுது தம் உறவினரைப்போல் அன்புடன் நன்றாகப் புகழ்ந்துரைத்து அவர் நீங்கிய இடத்து புறம் பேசுபவர்களைப் பற்றி அழித்துப் பேசுபவரால் மேன்மைக் குணத்தின்கண் கருத்து இல்லாதவர்களை இகழ்ந்துரைத்தல் ஏன்?
கருத்து: புறங்கூறுவார் என்றும் திருந்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இருந்து, இலக்கியங்கள், செய்து, பழமொழி, கீழ்க்கணக்கு, தன்னைத், நானூறு, பதினெண், மறைந்து, அறிவு, வாயாலேயே, மூக்கு, போழ்தில், அறிவிலான், ஒழுகும், மணலுள், முனிவித்தல், எழுதல், கலாம், சங்க, நிலை, பகைமையை, உள்ளே, அவர், தம்மை, தனக்குத்