இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு
உள்ளவா சேறல்இயைபு எனினும் போம்வாய வெள்ளத் தனசேறல் வேண்டல் - மனைக்கிழவன் நள்அளவில் மிக்காய கால்தொழிலை ஓம்பலே தெள்ளறிஞர் கண்ட நெறி. |
36 |
தன்னிடத்தில் உள்ள பொருளுக்கு ஏற்றவாறு செலவழித்து நடப்பது பொருத்தமென்றாலும், செலவழிக்க வேண்டிய இடத்தில் வெள்ளத்தைப் போலப் பெருக்கமாகச் செலவு செய்து நடப்பதை விரும்பற்க; ஒரு மனைக்குரிமையுடைய தலைவன், விரும்பும் அளவிற்கு மேற்பட்ட அளவுடைய முயற்சியை விலக்குவதே, தெளிந்த அறிவுடையோர் கூறிய வழியாம்.
கருத்து : இல்வாழ்வோர் செல்வத்திற்குத் தக்கவாறு செலவழிக்க வேண்டுமெனினும் அளவுகடந்து செலவழித்தல் ஆகாது; தம்பொருள் அளவிற்கு மேற்பட்ட முயற்சியையும் செய்யக் கருதலாகாது.
ஐங்குரவர் ஓம்பல் இனன்நீக்கல் சேர்ந்தோர்க்குப் பைங்கூழ் களைகணாப் பார்த்தளித்தல் நையுளத்தர்க்கு உற்ற பரிவுஈர்த்தல் எண்ணான்கு அறநெறியில் உற்ற புரிதல் கடன். |
37 |
ஐந்து குரவரையும் காத்தலும், அவர்கட்கு வருந்துன்பத்தை நீக்குவதும், தன்னைச் சார்ந்தவர்க்கு நல்ல உணவினை ஆதரவாக ஆய்ந்து கொடுப்பதும், வருந்தும் நெஞ்சுடையார்க்கு நேர்ந்த துன்பத்தை நீக்குதலும், முப்பத்திரண்டாகிய தரும வழியில், தனக்கு இய்ற அறங்களைச் செய்வதும் (இல்வாழ்வானுக்குரிய) கடமையாம்.
கருத்து : இல்வாழ்வான், ஐந்து குரவரைப் பேணித், தன்னைச் சார்ந்தவர்க்கு உணவு கொடுத்தாதரித்து, வருந்துவோர் கவலையை மாற்றி, முப்பத்திரண்டு தருமங்களில் தனக்கியன்ற சில தருமங்களைச் செய்து வாழவேண்டும்.குரவர் ஐவராவர், குரு, அரசன், அன்னை, தந்தை, தம்முன் ஆகிய இவர்.
நல்லினம் சாரல் நயன்உணர்தல் பல்லாற்றான்
நல்லினம் ஓம்பல் பொறையாளல் - ஒல்லும்வாய் இன்னார்க்கு இனிய புரிதல் நெறிநிற்றல் நல்நாப்பண் உய்ப்பதோர் ஆறு. |
38 |
நல்லோர் கூட்டத்தைச் சேர்வதும், நல்ல வழிகளையறிவதும், பலவழிகளாலும் நல்லொழுக்கமுடையவர்களையே காத்தலும், பொறுமை என்னும் குணத்தைக்கொள்வதும், பகைவர்க்கும் அமையம் வாய்த்தபோது நன்மையான செயல்களைச் செய்வதும், நல்லொழுக்க நெறியில் நின்று வாழ்வதும், நடு விடத்திற் சேர்ப்பதற்குரிய. ஒரு வழியாம்.
கருத்து : நல்லாரைச் சேர்வதும், நல்வழியை யறிவதும், நல்லவர்களைக் காப்பதும், பொறுமையை மனங்கொள்வதும், பகைவர்க்கும் நன்மை செய்வதும், நல்வழியினிற்பதும் ஆகிய செயல்கள் மேலுலகத்திற் சேர்க்கும்.
முனியான் அறம்மறங்கள் முக்குற்றம் பேணான் நனிகாக்கும் ஒண்மை உறைப்படுத்தும் பண்போன் பனிநிலத்தின் வித்தாய்ப் பெயரான நடுக்கற்று இனியன்ஆ வான்மற்று இனி. |
39 |
அறஞ்செய்வதில் வெறுப்பில்லாதவனும், பாவங்களையும் மூன்று குற்றங்களையும் செய்ய விரும்பாதவனும், மிகவும் காக்கப்படுகின்ற ஒழுக்கத்தை நிலை நிறுத்தும் குணமுடையவனும் (ஆகிய ஒருவன்) , குளிர்ந்த நிலத்தில் இட்ட விதையைப்போல, நிலையை விட்டுப் பெயராமல அச்சமற்று வாழ்ந்து இனிமேல் எவர்க்கும் இனியவன் ஆவான்.
கருத்து : அறம் புரிந்து பாவமும் குற்றமும் நீக்கி ஒழுக்கத்தைக்காத்து வாழும் ஒருவன் நிலை பெற்று இனியவனாய் இருப்பான்.
ஆ. துறவியல்
முப்பாலை வீழ்வார் விலங்கார் செறும்பாலை முப்பால் மயக்கேழ் பிறப்பாகி - எப்பாலும் மெய்ப்பொருள் தேறார் வெளிஓரார் யாண்டைக்கும் பொய்ப்பாலை உய்வாயாப் போந்து. |
40 |
(அறம், பொருள், இன்பம் ஆகிய) மூன்று பகுதிகளையும் விரும்புவார் தம்மை வருத்தும் பகுதியை விட்டு விலகார், அம் மூன்று பகுதியால் மயங்கும் மயக்கத்தால் எழுவகைப் பிறப்புக்களும் உண்டாகி, எவ்விடத்திற்கும் பொய்யாகிய பகுதிகளையே பிழைக்கும் வழியாகக் கொண்டு சென்று, எவ்விடத்திலும் உண்மைப்பொருளைத் தெளியார்; பரவெளியையும் ஆராய்ந்தறியார்.
கருத்து : இல்வாழ்வின் நின்று இன்பம் பொருள் அறம். இவற்றை விரும்பியவர்க்குத் துன்பம் நீங்காது; எழுவகைப் பிறவியும் உண்டாகும், பொய்வாழ்க்கையே பிழைக்கும் வழியாகக் கொள்வர், மெய்ப்பொருளையும் அறியார். ஆதலால் துறவே சிறந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், பதினெண், இன்னிலை, கீழ்க்கணக்கு, நல்லினம், புரிதல், ஓம்பல், சங்க, உற்ற