இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு
2. பொருட்பால்
உண்மைஓராப் பித்தர் உடைமை மயக்கென்ப வண்மையுற ஊக்கல் ஒருதலையே - கண்ணீர் இருபாலும் தோன்றன்ன ஈர்க்கலார் - போழ்வாள் இருபால் இயங்கலினோடு ஒப்பு. |
11 |
உண்மையையறியாத மயக்க முடையவர் செல்வத்தை மயக்கம் தருவது (சிறந்தது அன்று) என்று கூறுவர். துணிவாகவளம் பொருந்தும்படி தேடுவதற்கு ஊக்கங்கொள்க. கண்ணின் நீர்மை போன்ற இருபக்கமுள்ள அறம் இன்பங்கள் தோன்றுவதாகிய அத்தன்மையுடையது (செல்வம்) வெட்டுவோர்க்கு வெட்டும் வாளாயுதம் இருபாலும் இயங்குவதனோடு ஒப்பாகும் அது.
கருத்து : செல்வம் அறம் இன்பங்களைத் தோன்றுவிக்கும். செல்வ மிருப்பது வீரர்களுக்கு வாளாயுதம் இருப்பது போன்றது. ஆதலாற் செல்வத்தைத் தேட வேண்டியது மக்கள் கடமையாம்.
உடைமைஅறாது ஈட்டல் உறுதுணையாம் யாண்டும் உடைமையராச் சென்றக்கால் ஊர்எல்லாம் சுற்றம் உடைமைக் கோல் இன்றங்குச் சென்றக்கால் சுற்றம் உடையவரும் வேறு படும். |
12 |
(ஒருநாளும்) நீங்காது செல்வத்தைச் சேர்க்க வேண்டும். அஃது எவ்விடத்தும் மிக்க துணையாகும்; செல்வமுடையவராகி அயலூர்க்குச் சென்றால் சென்றவூரில் உள்ளவர் எல்லாரும் சுற்றத்தாராவார், செல்வமாகிய ஊன்றுகோலின்றி ஆங்குச் சென்றால் சுற்றத்தார் என்ற உரிமையுடையவரும் வேறுபட்டு அயலார் போலாவார்.
கருத்து : செல்வமுடையவரை எல்லாருஞ் சேர்ந்து தம் சுற்றமாகவே கொண்டாடுவர். ஆதலாற் செல்வத்தை இடைவிடாது வருந்திச் சேர்க்கவேண்டும்.
மண்ணீர் உடையார் வழங்கிச் சிறுகாலைத் தண்ணீரார் சாரும் நிலம்சார்வர் - உண்ணீர் அறியின் அருஞ்செவிலி மாண்பொருளே வெண்ணீர்ச் சிறியரையும் ஏர்ப்படுத்தும் செய். |
13 |
நிலமும் நீர்நிலைகளும் ஆகிய செல்வங்களையுடையவர்; அவற்றை வறியவர்க்குக் கொடுத்து (அறம்புரிந்து) விரைவில், அருட்குணமுடைய ஆன்றோர் எய்தும் மேலுலகத்தினை அடைவர், உண்மைத் தன்மையாய்ந்தால், மாட்சிமையுடைய செல்வப் பொருளே (அந்நற்பண்பு நற்செயல்களை வளர்க்கும்) அருமையான செவிலித்தாயாகும்; (அப்பொருள்) வெள்ளிய தன்மையுடைய சிறியோரையும் பெருமைப் படுத்தும், (ஆதலால் அப்பொருளை) ஈட்டுக.
கருத்து : செல்வமுடையவர்கள் அறம்புரிந்து மேலோர் எய்தும் துறக்கத்தினையும் அடைவர். செல்வமே நற்பண்புகளை வளர்பபது. ஆதலால் நீ செல்வத்தினையே தேடுக.
மெய்வலியும் செல்நிலையும் வாழ்நாளும் தூவொழுக்கும் மெய்யா அளிக்கும் வெறுக்கைஇலார் - வையத்துப் பல்கிளையும் வாடப் பணையணை தோள் சேய்திரங்க ஒல்குஉயிர்நீத்து ஆரும் நரகு. |
14 |
பொருட்செல்வமானது (எல்லார்க்கும்) , உடல்வலியும், தம்வாக்கு எங்குஞ் செல்கின்ற நிலைமையும், நீண்ட வாயுளும், தூயவொழுக்கமும், உண்மையாகக் கொடுக்கும், செல்வமில்லாதவர்கள், இவ்வுலகில், பலசுற்றாத்தாரும் வருந்தும் படியும், மூங்கில் போன்ற தோளுடையவள் ஆகிய மனைவி மக்கள் குறைவாகிய உயிரைப் போக்கி, (மறுமையிலும்) நரகத்திற் சேர்வர்.
கருத்து : ஒருவருக்குச் செல்வமானது உடல்வலி செல்வாக்கு. வாழ்நாள், நல்லொழுக்கம் இவற்றைக் கொடுக்கும், செல்வமில்லாதவர் இம்மையிற் சுற்றம் மனைவி மக்கள் வாடும்படி வாழ்ந்து பின் இறந்து மறுமையில் நரகத்தை யடைவர். ஆதலாற் செல்வத்தைத்தேடுக.
குருட்டுஆயன் நீள்கானம் கோடல் சிவணத் தெருட்டுஆயம் காலத்தால் சேரான் - பொருட்டாகான் நல்லறமும் பேணான் நாரம்இவர்த் தானாம் பொல்லாங்கு உறைவிடாமாம் புல். |
15 |
(யாவரையும்) தெளிவிக்கின்ற பொருள் வருவாயை, இளமைப்பருவத்திலேயே சேராதவன். கண்குருடாகிய இடையன் நீண்ட கானத்தினை (தன் ஆடுகளை மேய்ப்பதற்கு) இடமாகக் கொள்வதை ஒப்ப, ஒரு பொருளாக மதிக்கப்படான். நல்ல அறங்களையும் செய்ய விரும்பான். மக்கட் கூட்டத்தால் வெறுக்கப்பட்டவனாவன், தீமைகள் யாவும் தங்குவதற்கு இடமாவன். சிறியவன்.
கருத்து : இளமையிற் பொருள் தேடாதவன், குருட்டாயன் காட்டில் ஆடு மேய்த்தது போல வாழ்வில் இடர்ப்பட்டுப் பிறரால் மதிக்கப்படாமல் வாழ்வான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், இன்னிலை, கீழ்க்கணக்கு, பதினெண், சுற்றம், சங்க, சென்றக்கால்