ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு
உண் நீர் வளம், குளம், கூவல், வழிப் புரை, தண்ணீரே, அம்பலம், தான் பாற்படுத்தான் - பண் நீர பாடலொடு ஆடல் பயின்று, உயர் செல்வனாய், கூடலொடு ஊடல் உளான், கூர்ந்து. |
51 |
நாட்டினுள் நீர்வளத்தையும் குளத்தையும் கிணற்றையும் பலருஞ் செல்லும் வழியிற் றங்குதற்குரிய சிறு வீடுகளையும், தண்ணீர்ப் பந்தல்களையும் மண்டபங்களையும் வகையினால் அமைப்பித்தவன், சிறந்த செல்வமுடைவனாய், இசையோடு பொருந்தின இயல்புடைய பாடலையும் ஆடலையும் பன்முறை கேட்டுங் கண்டும் அனுபவித்து உள்ளன்புடைய மாதர்களின் ஊடலோடு கூடுதலை மிகுந்துள்ளவன் ஆவான்.
கருத்து: உலகத்துக்கு உண்ணீர் வளம் முதலியன அமைத்துக் கொடுப்பவன், இம்மை யின்பங்களை நன்கு நுகர்வான்.
இல் இழந்தார், கண் இழந்தார், ஈண்டிய செல்வம் இழந்தார், நெல் இழந்தார், ஆன் நிரைதான் இழந்தார்க்கு, எல் உழந்து, பண்ணி ஊண் ஈய்ந்தவர் - பல் யானை மன்னராய், எண்ணி ஊண் ஆர்வார், இயைந்து. |
52 |
வீட்டை இழந்தவர்களுக்கும், கண்ணையிழந்தவர்களுக்கும், சேர்ந்திருந்த செல்வத்தை இழந்தவர்களுக்கும், விளைந்த நெல்லை யிழந்தவர்கட்கும், பசுமந்தையை இழந்தவர்களுக்கும், இரவிலும் வருந்தி முயன்று பொருளையீட்டி உணவுகளைச் சமைத்துக் கொடுத்தவர், பலவாகிய யானைப்படையுடைய அரசர்களாய் மதிக்கப்பட்டு, மனைவி மக்கள் முதலியவர்களுடன் கூடி நுகர்பொருளை நுகர்ந்திருப்பர்.
கருத்து: இருக்க இடம் இல்லாதார் முதலியவர்கட்கு உழன்று தேடியேனும் உணவு முதலியன உதவி செய்கின்றவர், இம்மையிற் செல்வராய் இன்ப நுகர்வார்.
கடம் பட்டார், காப்பு இல்லார், கைத்து இல்லார், தம் கால் முடம் பட்டார், மூத்தார், மூப்பு இல்லார்க்கு உடம் பட்டு, உடையராய் இல்லுள் ஊண் ஈத்து, உண்பார் - மண்மேல் படையராய் வாழ்வார், பயின்று. |
53 |
கடன்பட்டவர்களுக்கும், தம்மைக் காப்பவர் ஒருவரும் இல்லாதவர்களுக்கும், பொருளில்லாதவர் கட்கும், தங்கால் முடம்பட்டவர்க்கும், முதிர்ந்தவர்களுக்கும், பெற்றோர் முதலிய பெரியார்க ளில்லாதவர்க்கும், மனமியைந்து அன்புடையவர்களாய்த் தம் வீட்டில் உணவு கொடுப்பித்து உண்பவர், பூமியின்மீது நால்வகைப் படைகளையுமுடைய மன்னர்களாய் மனைவி மக்களுடன் கூடி இன்பமுடன் வாழ்வார்கள்.
கருத்து: கடன்பட்டவர் முதலானவர்க்கு உணவு கொடுத்து உதவி செய்பவர், மன்னராய் இன்பம் மிக்கு வாழ்வார்.
பார்ப்பார், பசித்தார், தவசிகள், பாலர்கள், கார்ப்பார், தமை யாதும் காப்பு இலார், தூப் பால நிண்டாரால் எண்ணாது நீத்தவர் - மண் ஆண்டு, பண்டாரம் பற்ற வாழ்வார். |
54 |
பார்ப்பாரும், பசித்தவர்களும் தவஞ் செய்கின்றவர்களும், பாலர்களும், உடம்பை வெறுக்கின்றவர்களும், தங்களைக் காத்தற்குரிய ஆதரவு ஒன்று மில்லாதவர்களும், தூய்மையாகிய தன்மையை யுடையனவாகிய அறநெறிகளில் மிக்கவர்களும் ஆகிய இவர்களுடைய துன்பங்களை யாதொரு பயனையும் விரும்பாமல் போக்கினவர்கள், பூமியை ஆண்டு செல்வம் தம்மைச் சூழ்ந்திருக்க இன்புடன் வாழ்வார்கள்.
கருத்து: அந்தணர் முதலியோருடைய துன்பங்களைப் பயன் கருதாமல் நீக்கினவர்கள் செல்வராய் வாழ்வார்.
'ஈன்றார், ஈன்கால் தளர்வார், சூலார், குழவிகள், மான்றார், வளியான் மயங்கினார்க்கு, ஆனார்!' என்று, ஊண் ஈய்த்து, உறு நோய் களைந்தார் - பெருஞ் செல்வம்- காண் ஈய்த்து வாழ்வார், கலந்து. |
55 |
ஈன்றவர், ஈனுங்காலத்து நோயாற் றளர்வார், சூலையுடையார், பிள்ளைகள், பித்தேறினார், வாத நோயா லறிவு கெட்டார், ஓம்புதற் கமைந்தாரென் றூணுதவியுறுநோயைக் களைந்தார், பிறர்க்குத் தனங்களை யீந்து பெருஞ் செல்வங்களை நுகர்ந்து வாழ்வார்.
கருத்து: ஈன்றார் முதலானவர்களுக்கு உணவு கொடுத்தல், நோய் நீக்குதல் முதலான அறச்செயல்களைச் செய்தல் வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, வாழ்வார், கருத்து, உணவு, இலக்கியங்கள், இழந்தார், கீழ்க்கணக்கு, ஏலாதி, பதினெண், இழந்தவர்களுக்கும், செல்வம், வாழ்வார்கள், இல்லார், ஆண்டு, ஈன்றார், நோய், பெருஞ், ஈய்த்து, காப்பு, களைந்தார், கூடி, பயின்று, வளம், சங்க, முதலியன, மன்னராய், செல்வராய், உதவி, மனைவி, பட்டார்