முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 83.கூடாநட்பு
திருக்குறள் - 83.கூடாநட்பு

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. |
821 |
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.
இனம்போன்(று) இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். |
822 |
இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.
பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. |
823 |
பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும். |
824 |
முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற் றன்று. |
825 |
மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். |
826 |
நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். |
827 |
வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.
தொழுதகை யுள்ளும் படையொடுங்கம் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து. |
828 |
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று. |
829 |
புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்(பு) ஒரீஇ விடல். |
830 |
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
83.கூடாநட்பு - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - பகைவர், வேண்டும், அகத்தில், இலக்கியங்கள், செய்து, தீங்கு, கொண்டு, literature, பொருந்தாமல், புறத்தே