முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 50.இடன் அறிதல்
திருக்குறள் - 50.இடன் அறிதல்

தொடங்கற்க எவ்வினையும் என்னற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது. |
491 |
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவும் தரும். |
492 |
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். |
493 |
தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். |
494 |
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின் நீங்கின் அதனைப் பிற. |
495 |
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து. |
496 |
வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தாற் செயின். |
497 |
(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். |
498 |
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோ(டு) ஒட்டல் அரிது. |
499 |
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு. |
500 |
வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
50.இடன் அறிதல் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - செயின், கடலில், பகைவர், வெல்லும், ஓடமுடியாது, ஊக்கம், இடத்தில், அஞ்சாமை, செய்தால், சென்று, பொருந்தி, அல்லாமல், இலக்கியங்கள், இடனறிந்து, இடத்தை, literature, அறிந்து, செயலைச்