முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 47.தெரிந்து செயல்வகை
திருக்குறள் - 47.தெரிந்து செயல்வகை

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். |
461 |
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்(கு) அரும்பொருள் யாதொன்றும் இல். |
462 |
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். |
463 |
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.
தெளிவில் அதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பா(டு) அஞ்சு பவர். |
464 |
இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. |
465 |
செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும். |
466 |
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப(து) இழுக்கு. |
467 |
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். |
468 |
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
நன்றாற்றல் உள்ளுந் தவறுண்(டு) அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை. |
469 |
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு. |
470 |
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
47.தெரிந்து செயல்வகை - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - வேண்டும், ஆராய்ந்து, கெடுவான், செயல்களை, செய்தக்க, இலக்கியங்கள், உண்டாகும், literature, செயலைத்