முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 44.குற்றங் கடிதல்
திருக்குறள் - 44.குற்றங் கடிதல்

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. |
431 |
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு. |
432 |
பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். |
433 |
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை. |
434 |
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தாறு போலக் கெடும். |
435 |
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.
தன்குற்றம் நீக்கிப் பிறர்க்குற்றம் காண்கிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு. |
436 |
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.
செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால நன்றிக் கெடும். |
437 |
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று. |
438 |
பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. |
439 |
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். |
440 |
தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
44.குற்றங் கடிதல் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - குற்றம், குற்றமே, காத்துக், செய்யாமல், வாழ்க்கை, கெடும், கூடாது, செல்வம், குற்றமாகும், கொள்வர், செருக்கும், இலக்கியங்கள், சினமும், பெருக்கம், இறைக்கு, மானமும், literature