முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 43.அறிவுடைமை
திருக்குறள் - 43.அறிவுடைமை

அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். |
421 |
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப(து) அறிவு. |
422 |
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
எப்பொருள் யார்யார்வாய்க கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. |
423 |
எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. |
424 |
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. |
425 |
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.
எவ்வ துறைவது உலகம் உலகத்தோ(டு) அவ்வ துறைவ(து) அறிவு. |
426 |
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். |
427 |
அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். |
428 |
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய். |
429 |
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். |
430 |
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
43.அறிவுடைமை - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - அறிவாகும், காக்கும், முன்னே, ஒன்றும், எல்லாம், அறிவில்லாதவர், அறிவிலார், literature, அறிவுடையார், இலக்கியங்கள்