திருக்குறள் - 42.கேள்வி

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. |
411 |
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். |
412 |
செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோ(டு) ஒப்பர் நிலத்து. |
413 |
செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்(கு) ஒற்கத்தின் ஊற்றாந் துணை. |
414 |
நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம்உடை யார்வாய்ச் சொல். |
415 |
ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். |
416 |
எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர். |
417 |
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. |
418 |
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது. |
419 |
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள அவியினும் வாழினும் என். |
420 |
செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
42.கேள்வி - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - கேள்வி, செல்வம், கேட்டறிய, சொல்லார், வேண்டும், வாழ்க்கையில், ஊன்றுகோல், ஆயினும், நிறைந்த, உடையவர், இலக்கியங்கள், literature, செல்வத்துள், செவியால், வயிற்றுக்கும், சிறிது, நிலத்தில்