முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 37.அவா அறுத்தல்
திருக்குறள் - 37.அவா அறுத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து. |
361 |
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். |
362 |
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப(து) இல். |
363 |
அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். |
364 |
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார் அற்றாக அற்ற(து) இலர். |
365 |
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. |
366 |
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும். |
367 |
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.
அவா இல்லார்க்கு இல்லாகும்துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும். |
368 |
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும் துன்பத்துள் துன்பம் கெடின். |
369 |
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். |
370 |
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
37.அவா அறுத்தல் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - ஒருவன், துன்பம், என்றுக், அந்நிலையே, ஒழித்தால், வாய்க்கும், இயற்கை, தோரும், மேலும், இன்பம், உண்டாகும், ஒழியாமல், வித்து, இலக்கியங்கள், வேண்டும், மற்றது, literature, வேண்டாமை, அற்றவர்