முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 25.அருளுடைமை
திருக்குறள் - 25.அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. |
241 |
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை. |
242 |
நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். |
243 |
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்(கு) இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. |
244 |
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.
அல்லல் அருள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி. |
245 |
அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்துஒழுகு வார். |
246 |
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
அருளில்லார்க்(கு) அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்(கு) இவ்வுலகம் இல்லாகி யாங்கு. |
247 |
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது. |
248 |
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். |
249 |
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து. |
250 |
(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
25.அருளுடைமை - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - வாழ்க்கை, வாழ்க்கையின், பொருள், இல்லாதவர், செல்லும், இல்லாதவர்க்கு, உலகில், இலக்கியங்கள், ஆராய்ந்து, வேண்டும், பொருந்திய, literature