முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 21.தீவினையச்சம்
திருக்குறள் - 21.தீவினையச்சம்

தீவனையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவார் தீவினை என்னும் செருக்கு. |
201 |
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். |
202 |
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
அறிவினுள் எல்லாந் தலைஎன்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். |
203 |
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. |
204 |
பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. |
205 |
யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். |
206 |
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாத பின்சென்(று) அடும். |
207 |
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா(து) அடிஉறைந் தற்று. |
208 |
தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால். |
209 |
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
அருங்கேடன் என்ப(து) அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். |
210 |
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
21.தீவினையச்சம் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - தீவினை, செயல்களைச், ஒருவன், செய்தால், வேண்டும், எவ்வளவு, சென்று, வறியவன், செய்யற்க, இலக்கியங்கள், மறந்தும், literature, அஞ்சார்