முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 123.பொழுது கண்டு இரங்கல்
திருக்குறள் - 123.பொழுது கண்டு இரங்கல்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. |
1221 |
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. |
1222 |
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும். |
1223 |
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும். |
1224 |
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. |
1225 |
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன். |
1226 |
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய். |
1227 |
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. |
1228 |
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது.
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. |
1229 |
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். |
1230 |
( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
123.பொழுது கண்டு இரங்கல் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - காதலர், மாலைப், வருகின்றது, துன்பம், மாலைப்பொழுது, மாலைப்பொழுதில், தூதாகி, துன்பத்தால், literature, பொழுது, மருள்மாலை, மணந்தார், பொழுது, இலக்கியங்கள், பிரிந்து