முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 113.காதற் சிறப்புரைத்தல்
திருக்குறள் - 113.காதற் சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். |
1121 |
மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.
உடம்பொ(டு) உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. |
1122 |
இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். |
1123 |
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து. |
1124 |
ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். |
1125 |
போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவதார் நுண்ணியர்எங் காத லவர். |
1126 |
எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக் கறிந்து. |
1127 |
எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. |
1128 |
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.
இமைப்பின் கரப்பாக்(கு) அறிவல் அனைத்திற்கே எதிலர் என்னும்இவ் வூர். |
1129 |
கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் ஊர். |
1130 |
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
113.காதற் சிறப்புரைத்தல் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - காதலர், உயிர்க்கு, ஆகையால், இருக்கின்றார், பொருளை, அன்பில்லாதவர், வாழ்கின்றார், கரப்பாக், literature, போன்றவள், இவளுடைய, பண்புகளை, இமைப்பின், இலக்கியங்கள், மாட்டார்