முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » நாலடியார் » 3.யாக்கை நிலையாமை
நாலடியார் - 3.யாக்கை நிலையாமை

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத் தில். |
21 |
மலையின் மீது காணப்படும் சந்திரனைப் போல, யானைத் தலையின் மீது பிடித்த குடையுடைய அரசர்களும், உலகில் இறந்தனர் என இகழப்பட்டார்களே அல்லாமல், இவ்வுலகில் இறவாது எஞ்சி இருந்தவர் யாரும் இல்லை. (மன்னாதி மன்னர்களும் மாண்டனர் என்றதனால் யாக்கை நிலையாமை உணர்த்தப்பட்டது.)
வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும் நிலவார் நிலமிசை மேல். |
22 |
உயிரோடு வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் உதயமாதலால், ஆயுள் கெடா முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள். (சூரியன் தோன்றுவது - ஒரு நாள் கழிந்தது; இரு நாட்கள் கழிந்தன என ஆயுளை அளவிடுவதாக இருத்தலால், வாழ்நாள் முடிவதற்கு முன்னரே நல்லறம் செய்து வாழவேண்டும் என்பது கருத்து.)
மன்றம் கறங்க மணப்பறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே வலிக்குமாம் மாண்டார் மனம். |
23 |
திருமண மண்டபம் முழங்க மண வாத்தியமாக நின்றவை, அன்றைக்கே, அங்கேயே அந்த மனிதர்க்குப் பிணப்பறையாய் ஒலித்தலும் உண்டு என நினைத்து, மாட்சிமையுடையோர் மனமானது, பிறவிப் பிணியினின்று நீங்கும் வழியையே உறுதியாய்ப் பற்றியிருக்கும்.
சென்றே எறிய ஒருகால்; சிறுவரை நின்றே எறிப பறையினை - நன்றேகாண் முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. |
24 |
(பறை அடிப்போர்) இறந்தவர் வீட்டிற்குச் சென்று ஒரு முறை பிணப்பறையை அடிப்பர்; சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை அடிப்பர்; மூன்றாவது முறை பறை அடிப்பதற்குள் சாகப் போகிறவர்கள், செத்தவர்களைத் துணியால் மூடி மறைத்துத் தூக்கிக் கொண்டு, நெருப்பை எடுத்துக்கொண்டு சுடுகாட்டை நோக்கிப் புறப்பட்டுச் செல்வர். (எனவே யாக்கை நிலையாமையை நன்கு யோசித்துப் பார்!)
கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங்கொண்டீண்டு உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண்டொண்டொ டென்னும் பறை. |
25 |
கூட்டமாகக் கூடி உறவினர் கூவி அழ, பிணத்தைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் நிச்சயமாய் 'இன்பம் உண்டு, இன்பம் உண்டு' என்று மயங்குபவனுக்கு, 'டொண் டொண் டொண்' என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை) என்னும் உண்மையை உரைக்கும்!
நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்; தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக் கால். |
26 |
தோல் பையாகிய உடம்பிலிருந்து, தான் செய்ய வேண்டிய தொழில்களை முழுமையாகச் செய்து, அப்பயனைத் தானே அனுபவிக்கின்ற கூத்தாடியாகிய உயிர் உடலைவிட்டு அப்புறம் சென்றால், பின் அவ்வுடலைக் கயிற்றால் கட்டியிழுத்தால்தான் என்ன? நன்றாகச் சுத்தம் செய்து அடக்கம் செய்தால் தான் என்ன? கண்ட இடத்திலே போட்டால்தான் என்ன? பலரும் பழித்தால்தான் என்ன? (ஒரு செயலைச் செய்யத் தூண்டுவதும் உயிர்தான்; அந்தச் செயலின் பயனை அனுபவிப்பதும் உயிர்தான். அத்தகைய உயிர் இருக்கும்போது மேலான செயல்களைச் செய்க! என்பதாம். ஒவ்வொரு நேரமும் வெவ்வேறு சிந்தனைகளை, செயல்களையுடையதால் உயிரைக் கூத்தன் என்றார்.)
படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல். |
27 |
வீழ்கின்ற மழை நீரிலே தோன்றும் குமிழிபோலப் பலமுறை தோன்றி அழியும் ஒருவகைப் பொருள் இந்த உடம்பு எனக் கருதி, இப்பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்வோம் நாம் என்று உணர்ந்து, அதற்கான அறங்களைச் செய்யும் உறுதியான நல் ஞான முள்ளவரை இப்பொ¢ய உலகில் ஒத்திருப்பவர் யார்? ஒருவரும் இல்லை!
யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கையா லாய பயன்கொள்க; - யாக்கை மலைநாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே நிலையாது நீத்து விடும். |
28 |
உடம்பை உறுதியுடையதாக முன் செய்த நல்வினைப் பயனால் பெற்றவர், அதனால் ஆகும் பயனான நற்காரியங்களைச் செய்வாராக! ஏனெனில் மலை மீது உலாவும் மேகம்போல் காணப்பட்டு நிலை பெறாது இவ்வுடல் அழிந்துவிடும்
புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச் சென்றான் எனப்படுத லால். |
29 |
ஒருவன் இப்பொழுது நின்று கொண்டிருந்தான்; உட்கார்ந்தான்; படுத்தான்; தன் உறவினர் அலறி அழ இறந்தான் என்று கூறப்படுவதால், புல் நுனியிலிருக்கும் நீர்த்துளியைப் போல நிலையில்லாத தன்மையுடையது இந்த உடம்பு என்று எண்ணி, இப்பொழுதே அறவினைகளைச் செய்க!
கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து. |
30 |
மனிதர்கள் 'வரட்டுமா' என்று கேளாமல் வந்து உறவினராய் ஒரு வீட்டில் பிறந்து பின், தாம் வாழ்ந்த கூடு மரத்திலே கிடக்கத் தூரத்தே பறந்து செல்லும் பறவைகளைப் போலச் சுற்றத்தாரிடம் உடம்பை விட்டு விட்டுப் பேசாமல் இறந்து போவார்கள். ('குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே, உடம்போடு உயிரிடை நட்பு' என்பது குறள்.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
3.யாக்கை நிலையாமை - Naaladiyar - நாலடியார் - Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - யாக்கை, உலகில், செய்து, இன்பம், நிலையாமை, கூத்தன், உறவினர், நின்று, உயிர்தான், பெற்றவர், இன்னினியே, வாளாதே, உடம்பை, நீத்து, டென்னும், உடம்பு, அடிப்பர், யானைத், இவ்வுலகில், தோன்றும், இலக்கியங்கள், literature, யாரும், வாழ்நாள், தூக்கிக், ஒலித்தலும், என்பது, சூரியன், கொண்டு