முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.042.திருவேட்களம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.042.திருவேட்களம்
5.042.திருவேட்களம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசுபதேசுவரர்.
தேவியார் - நல்லநாயகியம்மை.
1486 | நன்று நாடொறும் நம்வினை போயறும் என்று மின்பந் தழைக்கவி ருக்கலாம் சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை துன்று பொற்சடை யானைத் தொழுமினே. |
5.042.1 |
திருவேட்களத்துள்ளுறைகின்ற நெருங்கிய பொலிவார்ந்த சடையுடைய ஈசனைத் தொழுவீர்களாக; அங்ஙனம் தொழுதால் நாள்தொறும் நம்வினை பெரிதும் தொலையும்; என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம்.
1487 | கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன் பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன் விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு திருப்ப னாகி லெனக்கிட ரில்லையே. |
5.042.2 |
கரும்பாகிய விருப்பத்தை விளைக்கும் வில்லை உடைய மன்மதனைக் காய்ந்தவனும், மேருமலையாகிய வில்லினால் முப்புரங்களைச் செற்றவனும், அடியார்களிடத்து விருப்பம் உடையவனும் ஆகிய பெருமான் உறையும் வேட்களத்தைக் கைதொழுது இருந்தேனாயின், எனக்கு இடர்களே இல்லை.
1488 | வேட்க ளத்துறை வேதிய னெம்மிறை ஆக்க ளேறுவ ரானைஞ்சு மாடுவர் பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால் காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே. |
5.042.3 |
வேட்களத்துறையும் வேதியனும், எம் இறைவனும், திருநீலத் திருமிடறு உடைய தலைவனும் ஆகிய பெருமான் விடையுகந்து ஏறுவர்; பஞ்சகவ்வியம் ஆடுவர்; பூக்களைக்கொண்டு திருவடி போற்றினால் நம்மைக் காப்பர்.
1489 | அல்ல லில்லை அருவினை தானில்லை மல்கு வெண்பிறை சூடும் மணாளனார் செல்வ னார்திரு வேட்களங் கைதொழ வல்ல ராகில் வழியது காண்மினே. |
5.042.4 |
நிறைந்த வெண்பிறையைச் சூடும் மணவாளராகிய திருவேட்களத்து அருட்செல்வரைக் கைகளால் தொழ வல்லவராகில் அதுவே வழியாகும்; காண்பீர்களாக; அவ்வழியே நின்றால் அல்லல்கள் இல்லை; அரிய வினைத் துன்பங்களும் இல்லையாம்.
1490 | துன்ப மில்லைத் துயரில்லை யாமினி நம்ப னாகிய நன்மணி கண்டனார் என்பொ னாருறை வேட்கள நன்னகர் இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே. |
5.042.5 |
நம்மவராகிய திருநீலகண்டனும், என் பொன்போன்றவனும் ஆகிய இறைவன் உறைகின்ற திருவேட்கள் நன்னகரில் இன்பமே வடிவாகிய அவன் சேவடியை ஏத்தியிருப்பதனால். இனித் துன்பமும் இல்லை; துயரங்களும் இல்லை.
1491 | கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே பாட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர் சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப் பட்ட வல்வினை யாயின் பாறுமே. |
5.042.6 |
கவலைகளாற் கட்டப்பெற்று வீழ்ந்திடாது, விரைந்து உயிர்போவதற்கு முன்பே நீர், உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் கைதொழுவீர்களாக; தொழுவீராயின், பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும்.
1492 | எட்டு மொன்று மிரண்டுமூன் றாயினார் சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு திட்ட மாகி யிருமட நெஞ்சமே. |
5.042.7 |
அறியாமை உடைய நெஞ்சமே! வட்ட வடிவாகிய மென்முலைகளை உடைய உமாதேவியை ஒருபங்கில் உடையவரும், எட்டு மூர்த்தியானவரும், ஒரு பரம்பொருளானவரும், இரண்டு (சிவம், சத்தி) ஆனவரும், மும்மூர்த்தியானவரும் உறைகின்ற சிறப்புடையதும், உயர்ந்தவர்கள் சேர்ந்ததுமான திருவேட்களம் கைதொழுது விருப்புற்று இருப்பாயாக.
1493 | நட்ட மாடிய நம்பனை நாள்தொறும் இட்டத் தாலினி தாக நினைமினோ வட்ட வார்முலை யாளுமை பங்கனார் சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே. |
5.042.8 |
வட்டவடிவமாகிய மென்முலைகளை உடைய உமாதேவியை ஒருபங்கில் உடையவரும், உயர்ந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவேட்களத்தையும், அங்கு நட்டமாடிய நம்பனையும், நாள்தோறும் விருப்பத்துடன் இனிது நினைப்பீராக.
1494 | வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண் சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும் சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே. |
5.042.9 |
திருவேட்களத்து அருட்செல்வர் வட்டமாக வளைந்த மதில்கள் சூழ்ந்த திரிபுரங்கள் மூன்றையும் சுட்ட கொள்கையர் ஆயினும், தம்மைச் சூழ்ந்தவர் வல்வினைகளைத் தீர்த்து அவர்களைக் குளிர்விக்கும் சிட்டராவர்.
1495 | சேட னாருறை யுஞ்செழு மாமலை ஓடி ஆங்கெடுத் தான்முடி பத்திற வாட வூன்றி மலரடி வாங்கிய வேட னாருறை வேட்களஞ் சேர்மினே. |
5.042.10 |
பெருமை உடையனாய பெருமான் உறையும் திருமாமலையாகிய திருக்கயிலாயத்தை ஓடி எடுத்தவனாகிய இராவணன் முடிகள் பத்தும் இறும்படியாக வாட ஊன்றி, மலரடியினை வளைத்த வேடனார் உறைகின்ற திருவேட்களம் சேர்வீராக.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவேட்களம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவேட்களம், பெருமான், வேட்களங், உறைகின்ற, னார்திரு, னாருறை, உறையும், உடையவரும், சூழ்ந்தவர், வடிவாகிய, குளிர்விக்கும், வல்வினை, சிட்டர், ஒருபங்கில், மென்முலைகளை, நெஞ்சமே, உமாதேவியை, சூடும், நாள்தொறும், நம்வினை, திருச்சிற்றம்பலம், திருமுறை, கைதொழு, கைதொழுது, நம்மைக், காப்பர், போற்றினால், திருவேட்களத்து