முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.044.திருவாமாத்தூர்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.044.திருவாமாத்தூர்
5.044.திருவாமாத்தூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அழகியநாதர்.
தேவியார் - அழகியநாயகியம்மை.
1506 | மாமாத் தாகிய மாலயன் மால்கொடு தாமாத் தேடியுங் காண்கிலர் தாள்முடி ஆமாத் தூரர னேயரு ளாயென்றென் றேமாப் பெய்திக்கண் டாரிறை யானையே. |
5.044.1 |
தமக்குள்ளே பெரும் பூசல் கொண்டவராகிய திருமாலும் பிரமனும் ஆணவ மயக்கம் கொண்டு தாமாகத் தேடியும், பெருமானின் திருவடியடையும் திருமுடியையும் காண்கிலர்; "ஆமாத்தூர் அரனே! அருள்வாயாக" என்று பலமுறை இன்பமுறக் கூவியே இறையானைக் கண்டார்.
1507 | சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள் புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும் அந்தி யானை ஆமாத்தூ ரழகனைச் சிந்தி யாதவர் தீவினை யாளரே. |
5.044.2 |
காலை மாலை ஆகிய சந்திகளில் வணங்கப் படுவானும், யோகநெறி தலைப்படுவாருடைய புந்தியில் உறைபவனும், தேவர்களால் தொழப்படும் அந்திவானத்தைப்போன்ற செம்மேனியானும் ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளரே ஆவர்.
1508 | காமாத் தம்மெனுங் கார்வலைப் பட்டுநான் போமாத் தையறி யாது புலம்புவேன் ஆமாத் தூரர னேயென் றழைத்தலும் தேமாத் தீங்கனி போலத்தித் திக்குமே. |
5.044.3 |
காமமும் பொருளுமாகிய கார்வலையிலே பட்டுப்போகும் நெறியை அறியாமற் புலம்புகின்ற அடியேன் "ஆமாத்தூர் அரனே!" என்று அழைத்தலும், தேமாவின் இனிய கனி போலப் பெருமான் தித்தித்தனன்.
1509 | பஞ்ச பூத வலையிற் படுவதற் கஞ்சி நானு மாமாத்தூ ரழகனை நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும் வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே. |
5.044.4 |
ஐம்பெரும் பூதங்களாலாகிய வலையிற்படுவதற்கு அஞ்சி அடியேனும் ஆமாத்தூர் அழகனை நெஞ்சின் கண் நினைந்தேன்; அந்நினைப்பு என்னை எய்துதலும் வஞ்சனையாகிய ஆறுகள் வற்றிவிட்டன; காண்பீராக.
1510 | குராமன் னுங்குழ லாளொரு கூறனார் அராமன் னுஞ்சடை யான்திரு வாமாத்தூர் இராம னும்வழி பாடுசெய் யீசனை நிராம யன்தனை நாளும் நினைமினே. |
5.044.5 |
குரவமலர்கள் நிலைபெற்ற கூந்தலை உடைய உமா தேவியை ஒரு கூற்றில் உடையவனும், பாம்பு நிலைபெற்ற சடையனும், திருவாமாத்தூரில் இராமனால் வழிபாடு செய்யப் பெற்ற ஈசனும், நிராமயனும் ஆகிய பெருமானை நாள்தோறும் நினைப்பீர்களாக.
1511 | பித்த னைப்பெருந் தேவர் தொழப்படும் அத்த னையணி யாமாத்தூர் மேவிய முத்தி னையடி யேனுள் முயறலும் பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே. |
5.044.6 |
பித்தேறியவனும், பெரிய தேவர்களால் தொழப் படும் தலைவனும், அழகு பொருந்திய ஆமாத்தூரை விரும்பிப் பொருந்திய முத்துப் போல்வானும் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தே முயன்று உள்குதலும், அன்பு என்னும் வெள்ளம் பரவி எழுவதாயிற்று; காண்பீர்களாக.
1512 | நீற்றி னார்திரு மேனியன் நேரிழை கூற்றி னான்குழற் கோலச் சடையிலோர் ஆற்றி னானணி யாமாத்தூர் மேவிய ஏற்றி னான்எமை யாளுடை யீசனே. |
5.044.7 |
எம்மை ஆளுடைய இறைவன், திருநீற்றினால் நிறைந்த திருமேனி உடையவனும், நேரிழையை ஒரு கூற்றில் உடையவனும், அழகு நிறைந்த குழலாகிய சடையில் ஓர் ஆறாம் கங்கையை உடையவனும் ஆகிய அழகு நிறைந்த ஆமாத்தூரில் விரும்பியெழுந்தருளிய இடப வாகனத்தை உடையவன் ஆவன்.
1513 | பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க் கண்ணித் தாகு மமுதினை யாமாத்தூர் சண்ணிப் பானைத் தமர்க்கணித் தாயதோர் கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே. |
5.044.8 |
பண்ணினை உடைய பாடல்களைப் பாடித்தன்னை அன்புசெய்யும் திறம் உடையவர்களுக்கு இனிக்கும் அமுது போல்வானும், ஆமாத்தூரில் பொருந்தியவனும், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு மிகநெருங்கிக் கண்ணிலுள்ள கருமணிப் பாவை போன்றவனுமானவனைக் காண்பீர்களாக!.
1514 | குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா மிண்ட ரோடெனை வேறு படுத்துய்யக் கொண்ட நாதன் குளிர்புனல் வீரட்டத் தண்டனாரிட மாமாத்தூர் காண்மினே. |
5.044.9 |
குண்டர்களும், மயிற்பீலிகளைக்கொள்ளும் குணமில்லாத மிண்டர்களுமாகிய சமணர்களோடு என்னை வேறுபடுத்தி உய்யுமாறு கொண்ட நாதனாகிய குளிர்புனல்சூழ்ந்த வீரட்டத்துத் தேவதேவர் உறையும் இடம் ஆமாத்தூரேயாகும். காண்பீர்களாக!.
1515 | வானஞ் சாடு மதியர வத்தொடு தானஞ் சாதுடன் வைத்த சடையிடைத் தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும் ஆனஞ் சாடிய வாமாத்தூ ரையனே. |
5.044.10 |
ஆகாயத்தே இருளைச்சிதைக்கும் மதியை அரவொடும் அஞ்சாதபடி நட்புக் கொள்ள வைத்தவர். தேன் முதலிய பஞ்சாமிர்தத்தொடும் இளநீர் பஞ்சகவ்வியம் முதலியவற்றை அபிடேகம் கொண்டவர் ஆமாத்தூர்ப்பெருமான்.
1516 | விடலை யாய்விலங் கல்லெடுத் தான்முடி அடர வோர்விர லூன்றிய வாமாத்தூர் இடம தாக்கொண்ட ஈசனுக் கென்னுளம் இடம தாகக்கொண் டின்புற் றிருப்பனே. |
5.044.11 |
அடங்காத விடலையாக வந்த இராவணன் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்றபோது அவன் முடிகள் அடரும்படியாக ஒரு விரல் ஊன்றயவனும், ஆமாத்தூரை இடமாகக் கொண்ட ஈசனுமாகிய பெருமானுக்கு என்னள்ளத்தை இடமாக வைத்து இன்புற்று இருப்பன் அடியேன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாமாத்தூர் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - உடையவனும், காண்மினே, ஆமாத்தூர், அடியேன், காண்பீர்களாக, யாமாத்தூர், நிறைந்த, வெள்ளம், பெருமானை, ஆமாத்தூரை, ஆமாத்தூரில், போல்வானும், பொருந்திய, நிலைபெற்ற, காண்கிலர், திருச்சிற்றம்பலம், திருமுறை, தொழப்படும், தேவர்களால், திருவாமாத்தூர், வாமாத்தூர், ஆறுகள், கூற்றில்