தியாக பூமி - 4.4. பசுவும் கன்றும்
அட்வகேட் ஆபத்சகாயமய்யர் தமக்கு இந்த மாதிரி அதிர்ஷ்டம் வரப்போகிறதென்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. உமாராணி இப்போது குடியிருந்த பங்களா ஆபத்சகாயமய்யருடைய கட்சிக்காரன் ஒருவனுக்குச் சொந்தமானது. அந்தப் பங்களாவுக்கு வாடகைப் பத்திரம் எழுதுவது சம்பந்தமாக, அவர் உமாராணியைப் பார்த்துப் பேச நேர்ந்தது. அவருடைய நல்ல சுபாவத்தைக் கண்ட உமாராணி அவரையே தன்னுடைய மற்ற காரியங்களையும் கவனிப்பதற்கு வக்கீலாக அமர்த்திக் கொண்டாள். இதன் காரணமாக ஆபத்சகாயம் அடைந்த பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. 'உலகத்திலே பெண்ணாய்ப் பிறந்தால் உமாராணியைப் போல் பிறக்கவேண்டும்! வக்கீலாயிருந்தால் நம்மைப் போல் கொடுத்து வைத்தவனாயிருக்க வேண்டும் என்பது தற்சமயம் அவருடைய தீர்ந்த அபிப்பிராயமாயிருந்தது. அந்தச் சமயத்தில் அவருக்கு ஹைகோர்ட் ஜட்ஜு பதவி கிடைப்பதாயிருந்தால் கூடத் தயங்காமல் மறுத்திருப்பார். ஹைகோர்ட் ஜட்ஜு ஆகிவிட்டால், உமாராணிக்கு வக்கீலாயிருக்கும் பாக்கியத்தை இழந்து விட வேண்டுமல்லவா? இதைக் காட்டிலும் அது என்ன ஒசத்தி?
அன்று காலை உமாராணி டெலிபோனில் கூப்பிட்டதன் மேல் ஆபத்சகாயமய்யர் அவளுடைய பங்களாவுக்கு வந்திருந்தார்.
"ஏதாவது தகவல் கிடைத்ததா?" என்று உமாராணி கேட்டாள்.
"இதுவரையில் ஒன்றும் கிடைக்கவில்லை; நானும் முயற்சி பண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்றார் வக்கீல்.
"உங்க கிட்டச் சொல்லி ஒரு மாதம் போலிருக்கிறதே; இன்னுமா கண்டுபிடிக்க முடியலை?" என்றாள் உமா.
ஆபத்சகாயமய்யர் புன்னகை புரிந்தார்.
"என் மேலே தான் தப்பு என்று உங்கள் எண்ணம் போல் இருக்கு. சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயா என்கிறாப் போலே, சென்னைப் பட்டணத்திலே சம்பு சாஸ்திரி எங்கே இருக்கார் என்று கேட்டால் யாருக்குத் தெரிகிறது? ஏதாவது அடையாளம் சொன்னால் தேவலை" என்றார்.
இதைக் கேட்ட உமாராணி சற்று நேரம் மௌனமாயிருந்தாள். ஏதோ பழைய ஞாபகங்கள் அவள் உள்ளத்தில் தோன்றிக் கொண்டிருந்ததாக முக பாவத்திலிருந்து தெரிந்தது.
பிறகு, தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல், திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து, "என்ன சொன்னீர்கள்?" என்று கேட்டாள்.
"ஏதாவது அடையாளம் சொன்னால் தேவலை என்றேன்."
"ஓர் அடையாளங் கூடத்தான் சொல்லியிருக்கிறேனே? ஆறு ஏழு வயதிலே அவரோட ஒரு குழந்தையிருக்கும்னு சொல்லலையா?" என்றாள் உமா.
அதற்கு வக்கீல், "இந்த அடையாளம் போதுமா அம்மா? முதலிலே சம்பு சாஸ்திரியைக் கண்டுபிடிச்சின்னா, அப்புறம் அவர்கிட்டக் குழந்தை இருக்கான்னு பார்க்கணும்? எனக்குத் தெரிந்த வரையிலே, இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. பத்திரிகைகளிலே விளம்பரம் பண்ணிப் பார்க்கலாம்" என்றார்.
"வக்கீல் ஸார்! இந்த யோசனை எனக்குத் தெரியாதுன்னா நினைச்சுட்டேள்; பத்திரிகைகளிலே விளம்பரம் பண்ணக்கூடாது. பண்ணினால், யார் விளம்பரம் பண்ணினா, எதுக்காகப் பண்ணினா என்கிற கேள்வியெல்லாம் கிளம்பும். நான் யாரைத் தேடறேனோ, அவருக்கு நான் தேடுகிறேன் என்கிற விஷயம் தெரியக் கூடாது. அப்படித் தெரியாமல் அவரைக் கண்டு பிடிக்கிறதற்கு வழி என்ன என்று தான் பார்க்கவேணும். இந்தச் சென்னைப் பட்டணத்திலே அவர் இல்லாவிட்டால், வேறு எங்கே இருந்தாலும் கண்டு பிடித்தாக வேணும்" என்றாள் உமா.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.4. பசுவும் கன்றும் - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - உமாராணி, ஆபத்சகாயமய்யர், என்றார், என்றாள், அடையாளம், விளம்பரம், ஏதாவது, வக்கீல், எனக்குத், சொன்னால், பத்திரிகைகளிலே, பங்களாவுக்கு, என்கிற, பண்ணினா, உமாராணியைப், பட்டணத்திலே, அவருக்கு, ஹைகோர்ட், அவருடைய, இருக்கு, சென்னைப், கேட்டாள்