தியாக பூமி - 4.2. உமாராணி விஜயம்
சென்னைப் பட்டணம் சில நாளாக அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பம்பாயிலிருந்து ஸ்ரீமதி உமாராணி என்னும் சீமாட்டி சென்னைக்கு விஜயம் செய்யப் போகிறாள் என்னும் செய்தி தான் அதற்குக் காரணம். டிராம் வண்டிகளிலும், மோட்டார் பஸ்களிலும், கிளப்புகளிலும், காப்பி ஹோட்டல்களிலும், பீச் மணற் கரையிலும், பார்க் புல் தரையிலும் இன்னும் ஜனங்கள் எங்கெங்கே கூடுகிறார்களோ, அங்கெல்லாம், உமாராணியின் வரவைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.
"ஏன், ஸார்! என்னிக்கு வர்றாளாம்?"
"அடுத்த புதன்கிழமை வர்றதாகப் பத்திரிகையிலே போட்டிருக்கு."
"எந்த ரயில்லே-பம்பாய் எக்ஸ்பிரஸிலேதானே?"
"நான் சொல்றேன், கேளுங்கோ! அவள் சென்ட்ரல் ஸ்டேஷனிலே வந்து இறங்கமாட்டா. சென்ட்ரல்லே இறங்கினா, கூட்டம் தாங்காது. பேஸின் பிரிட்ஜிலேயே இறங்கிக் காரிலே போயிடுவா."
"கார்ப்பரேஷனிலே உபசாராம் நடக்கிறதோ இல்லையோ?"
"ஆகா! மீட்டிங் நடந்து தீர்மானங்கூடப் பாஸாயிடுத்தே!"
இந்தச் சமயத்தில், அந்த டிராமிலோ பஸ்ஸிலோ உலக விஷயங்களை அதிகமாய்க் காதிலே போட்டுக் கொள்ளாத மனுஷர் யாராவது இருந்தால், "ஏன், ஸார்! யாரோ வர்றா, வர்றா என்கிறயளே? அது யாரு?" என்று கேட்டு வைப்பார்.
"யாரு, உமாராணிதான்" என்று பதில் வரும்.
"உமாராணியா! அவள் யார், ஐயா, அப்படி ஒருத்தி கிளம்பியிருக்காள்? ஸினிமா ஸ்டாரோ?"
உடனே கலகலவென்று சிரிப்பு.
"என்ன, சிரிக்கறயளே? அவள் யாருதான் பின்னே? காங்கிரஸிலே சேர்ந்தவளோ?"
"என்ன, ஐயா, நிஜமா உமாராணி யாருன்னு தெரியாமயா கேட்கிறீர்?"
"தெரியாமல் தான் கேட்கிறேன். பின்னே, தெரிஞ்சால் கேட்பாளோ?"
"உமாராணிங்கறவள் பம்பாயிலே ஒரு பெரிய பணக்காரி. அவள் நம் ஊர் மீனாக்ஷி ஆஸ்பத்திரிக்கு அஞ்சு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறாள்."
"என்ன? என்ன?"
"அவரைக் கொஞ்சம் பிடிச்சுக்குங்கோ, ஐயா! மூர்ச்சை போட்டு விழுந்துடப் போறார்."
"என்ன பரிகாசம் பண்றயளா? அஞ்சு லட்சம் ரூபாயாவது, கொடுக்கவாவது?"
"கொடுக்கவாவதுன்னா? - கொடுத்திருக்காளே!"
"ஐம்பதினாயிரமாயிருக்கும்; பத்திரிகைக்காரன் ஒரு பூஜ்யத்தைச் சேர்த்துப் போட்டிருப்பன்."
"அஞ்சு லட்சம்னு இலக்கத்திலும் போட்டு, எழுத்திலும் எழுதியிருக்கு. அப்புறம்?"
"நம்பறதுக்கு முடியாமேன்னா இருக்கு? அஞ்சு லட்சம்! அடேயப்பா!"
"அஞ்சு லட்சமான்னு வாயைப் பிளந்துடறீரே, ஐயா! நமக்குன்னா அஞ்சு லட்சம் பெரிது! பம்பாயிலே அஞ்சு லட்சம் என்கிறது அஞ்சு ரூபாய் மாதிரி."
"ஆமாமாம்; நம் ஊரிலே பெரிய ரூபாய்ன்னா ஓர் ஆயிரம்; அங்கே, ஒரு லட்சம்."
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.2. உமாராணி விஜயம் - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - லட்சம், உமாராணி, போட்டு, ரூபாய், பின்னே, விஜயம், என்னும், பம்பாயிலே