தியாக பூமி - 4.20. வந்தாரே தீக்ஷிதர்!
இதற்கிடையில், சம்பு சாஸ்திரியும் சாருவும் தமிழ் நாட்டின் கிராமங்களில் ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் கால் நடையாக நடந்தும், சாலையில் போய்க் கொண்டிருந்த போக்கு வண்டிகளில் ஏறிக்கொண்டும் கிராமம் கிராமமாகச் சென்றார்கள். ஒரு கிராமத்துக்குப் போனதும், சாஸ்திரி குழந்தையுடன் ஊர்ச் சாவடியிலோ, கோவிலிலோ அல்லது குளக் கரையிலோ உட்கார்ந்து கொள்வார். யாரோ பெரியவர் வந்திருக்கிறாரே என்று ஜனங்கள் வந்து சேர்வார்கள். அவர்களிடம் பேசத் தொடங்குவார். நமது பாரத தேசம் முன்னே எவ்வளவு மேன்மையாக இருந்தது என்பதை எடுத்து விவரிப்பார். இந்தக் காலத்தில் தேசத்துக்கு ஏற்பட்டிருக்கும் தாழ்வையும் ஜனங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் தீய பழக்க வழக்கங்களையும் எடுத்துக் காட்டுவார். சாதி, மத துவேஷங்களினால் விளையும் தீங்குகளையும், மதுபானத்தினால் உண்டாகும் கெடுதிகளையும் விவரிப்பார். தாம் சொல்வதற்கெல்லாம் ஆதாரமாக, புராண இதிகாசங்களிலிருந்தும், திருமந்திரம், திருக்குறள் முதலிய தமிழ் நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் எடுத்துக் காட்டுவார். இடையிடையே, குழந்தை சாருவும் தாத்தா சொல்லிக் கொடுத்த பாட்டு ஏதாவது சொல்வாள்.
சீக்கிரத்தில் இவர்களுடைய கீர்த்தி நெடுகப் பரவத் தொடங்கியது. "ஒரு பெரியவரும் குழந்தையுமாக ஊர் ஊராக வருகிறார்களாம், அந்தப் பெரியவர் ரொம்பப் படித்தவராம். சாஸ்திரங்களில் கரை கண்டவராம். தேசிய விஷயங்களை அவர் சொல்கிறது போல் அவ்வளவு மனத்தில் படியும்படி பெரிய பெரிய தலைவர்கள் கூட சொல்கிறதில்லையாம்" என்று கிராமங்களில் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்.
"தீண்டாமை ஒழிய வேண்டுமென்று மகாத்மா சொல்கிறாரோ, இல்லையோ? அதைப்பற்றி மற்றவர்கள் யாராவது பேசினால் ஜனங்களுக்குக் கோபம் வருகிறது. ஆனால், சம்பு சாஸ்திரி பேசுகிறபோது எல்லாரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தீண்டாமை வழக்கத்துக்கு நம்ம சாஸ்திரங்களிலே இடங் கிடையாதென்று அவர் அவ்வளவு தெளிவாய் எடுத்துச் சொல்கிறார்" என்று சீர்திருத்தப் பற்றுள்ளவர்கள் சொன்னார்கள்.
"அவரோடு ஒரு குழந்தை வருகிறதல்லவா? அதைப் பார்க்கிறதற்குப் பதினாயிரங் கண் வேணும். அந்தக் குழந்தை காந்தி பாட்டுப் பாடுகிறது. அந்தப் பாட்டைக் கேட்கிறதற்கு இருபதாயிரம் காது வேணும்" என்று வேறு சிலர் சொன்னார்கள்.
"சம்பு சாஸ்திரிதானே? ஓஹோஹோ! அவர் சாதாரண மனுஷரா என்ன? யோகின்னா அவர்? மந்திர சக்தியுடையவராச்சே? அவர் வாயாலே சாபங் கொடுத்தாலும் கொடுத்ததுதான்; அநுக்ரஹம் பண்ணினாலும் பண்ணினதுதான்" என்ற வதந்தி ஒரு பக்கத்தில் பரவிக் கொண்டிருந்தது.
"அந்தப் பெரியவரும் குழந்தையும் ஒரே சமயத்தில் மூன்று ஊரில் இருந்திருக்காளாம். மூன்று ஊரிலும் பொதுக் கூட்டத்திலே பேசியிருக்காளாம். கலியுகத்திலே இந்த மாதிரி அதிசயத்தை இதுவரையில் பார்த்ததில்லை" என்றும், "சம்பு சாஸ்திரியை அரெஸ்ட் பண்ணி ஜெயிலிலே போட்டுடறதுன்னு சர்க்காரிலே ஆன மட்டும் பார்த்தாளாம்; முடியலையாமே? போலீஸ்காரன் வந்தானோ, இல்லையோ, தாத்தாவும் பேத்தியும் மாயமாய் மறைஞ்சுடறாளாமே?" என்றும், இம்மாதிரி அவர்களுக்கு ஆச்சரியமான சக்தியெல்லாம் கற்பித்துப் பேசிக் கொண்டார்கள்.
ஆனால் விஷயம் தெரிந்தவர்கள், "சேச்சே! அதெல்லாம் சுத்தப் பிசகு. இந்த மாதிரி குருட்டு நம்பிக்கைதான் தேசத்தைக் கெடுக்கிறது. சம்பு சாஸ்திரியை என்னத்துக்காகச் சர்க்காரிலே அரெஸ்ட் பண்ண வர்றா? அவர் தான், கவர்ன்மெண்ட் பேச்சையோ, வெள்ளைக்காரன் பேச்சையோ எடுக்கறதேயில்லையே? நம்ம ஜனங்கள் ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது, சாதி வித்தியாசமெல்லாம் போகணும், தீண்டாமை ஒழியணும், கள்ளுக் குடிக்கக்கூடாது. கதர் கட்டிக்கணும் - இவ்வளவு தானே அவர் சொல்றது. இதுக்காக அவரைச் சர்க்காரிலே அரெஸ்ட் பண்ண வருவாளா, என்ன?" என்று உண்மையை எடுத்து விளக்கினார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.20. வந்தாரே தீக்ஷிதர்! - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அந்தப், குழந்தை, அரெஸ்ட், ஜனங்கள், தீண்டாமை, சர்க்காரிலே, இல்லையோ, சொன்னார்கள், வேணும், மாதிரி, பேச்சையோ, சாஸ்திரியை, என்றும், கொண்டார்கள், மூன்று, அவ்வளவு, எடுத்து, பெரியவர், சாஸ்திரி, கிராமங்களில், விவரிப்பார், ஏற்பட்டிருக்கும், சாருவும், பெரியவரும், காட்டுவார், எடுத்துக், பேசிக்