தியாக பூமி - 4.21. நெடுங்கரைப் பிரயாணம்
பதினாறு மாடு பூட்டிய ரதத்தில் சம்பு சாஸ்திரி கழுத்தில் பூமாலைகளுடனும், பக்கத்தில் ஒரு குழந்தையுடனும் ஊர்வலம் வருவதைக் கண்டதும் தீக்ஷிதருக்கு ஒரே பிரமிப்பாய் போய்விட்டது. "எப்படியும் தஞ்சாவூர் ஜில்லாக்காரனுடைய மூளையே மூளை! எப்படி ஊரை ஏமாத்திண்டிருக்கான் பார்த்தாயா?" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். "இந்தப் பொண்ணு ஒண்ணை எங்கே போய்ப் பிடிச்சான்?" என்று மனத்துக்குள் கேட்டுக் கொண்டார்.
ஊர்வலம் முடிந்து எல்லாரும் ஊர்ச் சாவடியை அடைந்தார்கள். அங்கே பொதுக் கூட்டம் நடக்க ஏற்பாடாகியிருந்தது. மரத்தடியில் பெரிய மேடை கட்டி, பாரத மாதா படத்தை வைத்து அலங்கரித்திருந்தார்கள். சம்பு சாஸ்திரியும் சாருவும் இன்னும் சிலரும் மேடையின் மீது அமர்ந்திருந்தார்கள்.
அந்த சமயத்தில் தீக்ஷிதர் கூட்டத்தில் புகுந்து இடித்துப் பிடித்துக் கொண்டு போய் மேடையருகில் வந்து சேர்ந்தார். சம்பு சாஸ்திரியைப் பார்த்து, "சாஸ்திரிகளே! சௌக்கியமா?" என்று கேட்டார்.
"அடடா! தீக்ஷிதர்வாளா? இங்கே எங்கே வந்தது? எதிர்பாராத விஜயமாயிருக்கிறதே?" என்றார் சம்பு சாஸ்திரி.
தீக்ஷிதரைப் பார்த்ததில் சம்பு சாஸ்திரிக்கு வெறுப்பும் சந்தோஷமும் கலந்தாற்போல் உண்டாயின. 'இந்த மனுஷர் இங்கே எங்கு வந்து சேர்ந்தார்?' என்று ஓர் எண்ணம்; 'இவரிடம் நெடுங்கரையைப் பற்றித் தகவல் தெரிந்து கொள்ளலாமே' என்று ஓர் ஆசை.
"ஆமாங்கணும்! உலகமெல்லாம் இப்ப உம்ம பேச்சாத்தானே இருக்கு? தமிழ்நாட்டு மகாத்மா காந்தின்னு கூட உம்மைப் பத்திச் சொல்றாளே? அப்பேர்ப்பட்டவர் நம்மூர்க்காரராச்சே. அவரைப் பார்க்கணும்னுதான் வந்தேன். உம்மகிட்டத் தனியா ஒரு விஷயமும் பேச வேண்டியிருக்கு."
"அதுக்கென்ன! கூட்டம் முடிந்ததும் பேசலாம்" என்றார் சம்பு சாஸ்திரி.
கூட்டத்தில் வழக்கம் போல் வரவேற்புப் பேச்சுக்கள் முடிந்ததும், சாரு எழுந்திருந்து காந்தி பாட்டு ஒன்று பாடினாள். கூட்டத்திலிருந்தவர்கள் குழந்தையின் பாட்டை ரொம்பவும் ரஸித்து ஆனந்தித்தார்கள்.
பின்னர், சம்பு சாஸ்திரி எழுந்திருந்து பேசினார். பழைய நாட்களில் பாரத தேசம், எவ்வளவு பெருமையுடன் இருந்தது என்பதை எடுத்துச் சொன்னார். தேசம் தற்சமயம் க்ஷீணமடைந்திருப்பதை எடுத்துக் காட்டினார். இந்தத் தேசத்தைப் புனருத்தாரணம் செய்வதற்கு மகாத்மா காந்தி அவதாரம் செய்திருக்கிறார் என்று சொன்னார். ராமாயணம், கீதை முதலிய நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, நம்முடைய பெரியவர்கள் சொல்லியிருப்பதைத்தான் காந்தி மகானும் சொல்கிறார் என்று எடுத்துக் காட்டினார். பிறகு வர்ணாசிரம தர்மம் என்பதை நம் பெரியோர்கள் என்ன நோக்கத்துடன் ஏற்படுத்தினார்கள் என்பதை விவரித்தார். சாதிகளில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று கிடையாதென்றும், ஒரு வகுப்பாரைத் தீண்டாதவர்கள் என்று ஒதுக்கி வைக்க சாஸ்திரத்தில் இடமில்லையென்றும் ருசுப்படுத்தினார். கடைசியில் மதுபானத்தின் தீங்கை எடுத்துச் சொல்லிப் பேச்சை முடித்தார். உள்ளூர்க்காரர்கள் வந்தனோபசாரம் சொன்ன பிறகு பிரமாதமான உற்சாகத்துடனும் ஜய கோஷங்களுடனும் கூட்டம் கலைந்தது.
பிறகு சம்பு சாஸ்திரி, தீக்ஷிதரைத் தனியாக அழைத்துச் சென்று, "என்ன சமாசாரம் தீக்ஷிதர்வாள்! தனியாய்ப் பேசவேணும் என்றீர்களே?" என்று கேட்டார்.
"ஓய் சம்பு சாஸ்திரி! உம்ம குட்டை எல்லார் மத்தியிலும் உடைச்சுவிடலாம்னு பார்த்தேன். போனால் போறது, நம்ம ஊர்க்காரனாச்சேன்னு விட்டேன்; தெரியுமாங்கணும்?" என்றார் தீக்ஷிதர்.
"குட்டை உடைக்கிறதா? என்ன சொல்றேள், தீக்ஷிதர்வாள்? எனக்கு ஒன்றுமே புரியலையே?"
"உமக்கு ஏங்காணும் புரியும்? பெரிய அழுத்தக்காரராச்சே நீர்? ஆமாம், எவ்வளவு ரூபாய்ங்காணும் சேர்த்திருக்கிறீர் இதுவரையிலே? ரொக்கமாய்ப் பத்தாயிரமாவது இருக்குமா?"
"ரொக்கமாவது, பத்தாயிரமாவது? நான் பணஞ்சேர்க்கறதுக்காக இப்படிக் கிளம்பினேன்னு நினைச்சுண்டயளோ?"
"அப்பாடா! இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமான்னு பேசமாட்டீரா நீர்? சொல்லாத போனால் போம்... பொண் ஒண்ணை அழைச்சுண்டு வந்திருக்கிறீரே? அதை எங்கே புடிச்சீர்? அதையாவது சொல்வீரோ, மாட்டீரோ?"
"குழந்தையா? பராசக்தி கொடுத்தாள், தீக்ஷிதரே!" என்று சாஸ்திரி சொல்லிவிட்டுப் புன்னகை புரிந்தார். அந்தப் புன்னகையில், இதை இந்த மனுஷர் எங்கே நம்பப் போகிறார் என்ற பாவம் தோன்றிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.21. நெடுங்கரைப் பிரயாணம் - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சாஸ்திரி, கூட்டம், என்றார், இந்தப், என்பதை, காந்தி, சொன்னார், எடுத்துச், காட்டினார், போனால், பத்தாயிரமாவது, குட்டை, தீக்ஷிதர்வாள், எவ்வளவு, எடுத்துக், முடிந்ததும், தீக்ஷிதர், கொண்டார், ஊர்வலம், கூட்டத்தில், சேர்ந்தார், மகாத்மா, மனுஷர், கேட்டார், எழுந்திருந்து