மாடத்தேவன் சுனை
7
மாடத்தேவனுடைய உயிர் வெகு கெட்டியாக அவனுடைய
உடலைப் பற்றிக்கொண்டிருந்தது. மறுபடியும் அவனுக்கு நினைவு வந்தபோது அதை
உணர்ந்தான். இப்போது சிறிது மங்கலாக வெளிச்சம் கூடத் தெரிந்தது. மேலேயும்
பக்கத்திலேயும் உற்றுப் பார்த்தான். கோட்டைச் சுவரின் ஒரு பெரும் பாளம்
எக்கச்சக்கமாக தன் பேரில் விழுந்திருக்கிறது என்பதை உணர்ந்தான். தன்
தலையிலும் உடம்பிலும் படாமல் சாய்வாக அந்தப் பாளம் வேறொரு கல்லினால்
முட்டுக் கொடுக்கப்பட்டு நிற்கிறது. ஆனால் காலின் மேல் மட்டும் ஒரு பெரிய
குண்டு பாறை விழுந்திருக்க வேண்டும். கால் எலும்பே முறிந்து போயிருக்க
வேண்டும். இல்லாவிட்டால் இவ்வளவு பொறுக்க முடியாமல் வலிக்குமா?
நேரம் ஆக ஆகப் பக்கத்துப் பாறைகள் சுட ஆரம்பித்தன. சூரியனுடைய வெயில் அடித்துச் சூடாகி வருகின்றன போலும். வரவரச் சூடு அதிகமாயிற்று; தாகம் தொண்டையை வாட்டியது; பசியும் எடுத்தது. தான் இப்படியே கிடந்து பசியினாலும் தாகத்தினாலும் பரிதவித்துச் சாக வேண்டியதுதானா? கோட்டைச் சுவர் தலையில் விழுந்து ஒரேயடியாகக் கொன்றிருக்கக் கூடாதா? முருகா! வேலம்மாள் பிரார்த்தனையின் பயனா இது?
எங்கேயோ வெகு தூரத்திலிருந்து அதல பாதாளத்திலிருந்து, ஆழமான குகையிலிருந்து, "முருகா, முருகா" என்று ஒரு தீனக்குரல் கேட்டது.
"முருகா! என் கணவன் எங்கே? நான் ஆசை வைத்த புருஷன் எங்கே? உன்னிடம் ஒப்புவித்துப் போன என் ராஜா எங்கே?" என்று புலம்பிய குரல் வெகு வெகு தீனஸ்வரத்தில், ஆனால் தெளிவாகக் கேட்டது.
அதற்குப் பதில் சொல்ல மாடத்தேவன் முயன்றான். "வேலம்மா!" என்று அவன் அழைத்த குரல் அவனுக்கே கேட்கவில்லை; அவளுக்கு எப்படிக் கேட்கும்? ஐயோ முருகா! கும்பினிச் சிப்பாய்கள் என்னைப் பார்க்காமல் போனதுபோல் வேலம்மாளும் போய் விடுவாளோ?
இல்லை; முருகன் அவ்வளவு கருணையற்றவனல்லன். வேலம்மாள் இதோ நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய குரல் மேலும் மேலும் தெளிவாகக் கேட்கிறது! மாடத்தேவன் தன்னுடைய சக்தியையெல்லாம் பிரயோகித்து, "வேலம்மா, வேலம்மா! இதோ இருக்கிறேன்!" என்று கத்தினான்!
"என் ராஜா!" என்று கதறிக் கொண்டு வேலம்மாள் ஓடி வந்தாள். அவன் காலில் மேல் கிடந்த குண்டு பாறையை முக்கி முனகி அப்புறப்படுத்தினாள். அதனால் அவளுக்கு ஏற்பட்ட இரைப்பு நீங்குவதற்குள் மாடத்தேவனின் காலைப் பிடித்து அவனை வெளியில் இழுத்தாள். "அடி பாவி! கால் முறிந்திருக்கிறதடி! வலி கொல்லுகிறது! என்னைத் தொடாதே! இப்படி இழுக்காதே..."
மாடத்தேவன் பாறைக்குள்ளிருந்து வெளிப்பட்டதும் வேலம்மாள் அவன் மீது விழுந்து கட்டிக் கொண்டு அழுதாள். மாடத்தேவன் பலாத்காரமாக அவளுடைய முகத்தைத் தள்ளிப் பிடித்துக் கொண்டு தான் தாகத்தினால் தவிப்பதை ஜாடையினால் தெரிவித்தான். அவனை உடனே வாரி அணைத்துத் தூக்கிக் கொண்டு சுனைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தாள். நாலு கை தண்ணீர் எடுத்து அவன் வாயில் விட்டதும் மாடத்தேவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
"வேலம்மா! உனக்குக் கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றினேன் பார்த்தாயா? ஆனால் கால் மட்டும் போய்விட்டது!" என்றான்.
வேலம்மாள் அவனுடைய காலைப் பார்த்துப் பார்த்து விம்மி அழுதாள்.
"எனக்காக அழாதே, வேலம்மா! உன் அப்பனுக்காக அழு! நான் கால் இழந்தாலும் உயிரோடு இருக்கிறேன். அவன் செத்தே போய்விட்டான். ஆனால் அவனுக்காகத் தான் ஏன் அழவேண்டும்? வீரச் சாவு அடைந்தவனுக்காக அழக்கூடாது. நேற்று இராத்திரி உன் அப்பன் என்னோடு நின்று கும்பினிக்காரர்களோடு சண்டையிட்டதைப் பார்த்திருந்தாயானால்... ஆகா! வீரபாண்டியனும் ஊமைத்துரையும் கூட அதிசயப்பட்டிருப்பார்கள்!"
வேலம்மாள் அழுகையை நிறுத்திவிட்டு, "அப்பன் உண்மையில் அப்படி உன்னோடு நின்றானா? வேறு விதமாக நான் சந்தேகப்பட்டேனே!" என்றாள்.
"சந்தேகப்பட்டாயா? நான் சந்தேகப்பட்டதற்கு மட்டும் அவ்வளவு பிரமாதமாகக் கோபித்துக் கொண்டாயே? சந்தேகம் பொல்லாதது வேலம்மா!"
"ஆமாம் சந்தேகப்படக்கூடாதுதான். சற்று முன்னால் நான் முருகன் பேரில் கூடச் சந்தேகப்பட்டேன். ஆனால் முருகன் உன்னை எனக்குக் காப்பாற்றிக் கொடுத்தார்!" என்றாள் வேலம்மாள்.
முருகன் கருணையினாலும் வேலம்மாளின் பணிவிடையினாலும் மாடத்தேவன் பிழைத்து எழுந்தான். ஆனால் கால் போனது போனதுதான். கால் இல்லா முடவனாகவே அவன் வாழ்ந்து வந்தான்.
முடவனைக் கட்டிக் கொண்டதற்காக வேலம்மாள் சிறிதும் வருத்தப்படவில்லை. அதைப் பற்றிப் பெருமையே கொண்டாள். அவளே வெள்ளரித் தோட்டம் போட்டு வெள்ளரிக்காய் விற்று வந்த காசைக் கொண்டு குடும்பம் நடத்தினாள். கணவனையும் காப்பாற்றினாள்.
ஏழு வருஷம் அவர்கள் இன்ப வாழ்க்கை நடத்தினார்கள். பிறகு மாடத்தேவன் இறந்து போனான்.
இறக்கும் வரையில் வேலம்மாளின் தகப்பன் செய்த துரோகச் செயலைப் பற்றி மாடத்தேவன் அவளிடம் சொல்லவில்லை. கும்பினிப் படையுடன் வீரப்போர் புரிந்து அவன் உயிர் விட்டதாகச் சொல்லி வந்தான்.
வேலம்மாளும் ஒரு இரகசியத்தை இறுதிவரையில் மனதிற்குள்ளேயே வைத்திருந்து இறந்தாள். ஊமைத்துரைக்கு வழிகாட்ட அவளை மாடத்தேவன் போகச் சொன்ன இரவில், கொஞ்ச நேரத்திலேயே ஊமைத்துரையிடம் விடைபெற்றுக் கொண்டு அவள் திரும்பி விட்டாள். சுனைக்கரையில் மரத்தின் பின்னாலிருந்து அங்கே நடந்தது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் தகப்பன் செய்த சதிச் செயலையும் அறிந்து கொண்டிருந்தாள். ஆனால் அதைப்பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை. 'உனக்கு எப்படித் தெரிந்தது?' என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? 'ஊமைத்துரையை நடுவில் விட்டு விட்டு வந்தேன்' என்று தானே சொல்லவேண்டும்?
இந்த அதிசயத் தம்பதிகளுடைய வாழ்க்கையைப் பற்றி அறிந்த பக்கத்துக் கிராமவாசிகள் வீரன் மாடத்தேவனுடைய நினைவுக்காகச் சுனைக்கரையில் ஒரு கல் நாட்டினார்கள். அவனைக் காப்பாற்றிய முருகனுக்காக ஒரு வேலையும் நட்டார்கள். அந்தச் சுனைக்கு நாளடைவில் 'மாடத்தேவன் சுனை' என்று பெயர் வந்தது.
இப்போதும் அந்தப் பக்கமாய்ப் போகிற கிராமத்து ஜனங்கள் மாடத்தேவன் கல் மீதும் அருகில் உள்ள வேல் மீதும் சுனை ஓரத்து அரளிச் செடியிலிருந்து பூப்பறித்துப் போட்டு வணங்கிவிட்டுப் போகிறார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாடத்தேவன் சுனை - Madaththevan Sunai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மாடத்தேவன், வேலம்மாள், அவன், கொண்டு, கால், வேலம்மா, நான், முருகா, முருகன், வெகு, எங்கே, மட்டும், தான், உயிர், குரல்