மாடத்தேவன் சுனை
6
மாடத்தேவன் அர்ச்சுனன் குன்றை அடைந்த
போது ஊமைத்துரையும் வேலம்மாளும் கோட்டைச் சுவர் மீது உட்கார்ந்து கொண்டு
ஆவலோடு வழி பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர்கள் கேட்பதற்காகக்
கூட இவன் காத்திருக்கவில்லை.
"சாமி! நான் போன காரியம் பழந்தான். உங்களை உடனே புறப்பட்டு வரச் சொன்னார். கிளம்புங்கள்! ஒரு விநாடிக் கூடத் தாமதிக்கக் கூடாது! வேலம்மா! சாமியைத் தனியாக அனுப்பக் கூடாது! நீ சிறுவயல் வரையில் கொண்டு விட்டுவிட்டு வா!" என்றான்.
அவசரத்தின் காரணத்தை அறியாத வேலம்மாள் ஊமைத்துரையைப் பார்த்தாள். ஊமைத்துரையின் முகத்தில் மறுபடியும் ஒரு புன்னகை தவழ்ந்தது, அவன் குதித்து எழுந்து புறப்படுவதற்கு ஆயத்தமானான்.
"இ-இ-இவள் வரவேண்டாம்! நா-நா-நான் போகிறேன்; வ-வ-வழி தெரியும்" என்று சொன்னான்.
"இல்லை, துரையே! உங்களைக் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கட்டாயம் இவளை அழைத்துப் போகவேண்டும். வேலம்மா! ஏன் தயங்குகிறாய்? உனக்கு விஷயம் புரியவில்லை போலிருக்கிறது. வழியில் கும்பினிப் படையைப் பார்த்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு வந்து விடுவார்கள். குறுக்கு வழியில் சீக்கிரமாகச் சாமியைக் கொண்டு போய்ச் சிறு வயலில் விட்டுவிட்டு வா!" என்றான்.
இதைக் கேட்டதும் வேலம்மாளுக்கு அவனுடைய பரபரப்பின் காரணம் தெரிந்துவிட்டது. ஆனாலும் சிறிது தயங்கினாள்.
"நீயும் - அப்பாவும்... என்ன செய்வீர்கள்?" என்றாள்.
"என்னை நான் காப்பாற்றிக் கொள்வேன். உன் அப்பனைக் கடவுள் கவனித்துக் கொள்வார். முருகன் மேல் ஆணை! உடனே புறப்படு!" என்றான்.
இருவரும் கிளம்ப ஆயத்தமானார்கள்.
"சாமி! சற்றுப் பொறுங்கள்!" என்று சொல்லிவிட்டு மாடத்தேவன் கோட்டைக்குள் ஓடினான். ஒரு நிமிஷத்துக்கெல்லாம் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து,
"இதை எடுத்துப் போங்கள்!" என்றான்.
ஊமைத்துரை உதட்டைப் பிதுக்கி "ஹும்" என்றான். தன் மடியில் வைத்திருந்த சுருள் கத்தியை எடுத்து ஒரு விசிறு வீசினான்.
"எனக்கு இ-இ-இது போதும்! அ-அ-அதை நீயே வைத்துக் கொள்!" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
ஊமைத்துரையும் வேலம்மாளும் கொஞ்ச தூரம் சென்றார்கள். குன்றுக்குப் பின்னால் அவர்கள் மறைய வேண்டிய சமயம் வந்தது. வேலம்மாள் ஒரே ஓட்டமாய்த் திரும்பி ஓடி வந்தாள். மாடத்தேவனுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
"என் பேரில் சந்தேகப்பட்டாயே? இப்போது சாமியுடன் என்னை அனுப்புகிறாயே?" என்றாள்.
"பெண்ணே! சந்தேகத்தைப் பற்றிப் பேச இது தானா சமயம்?" என்று மழுப்பினான் மாடத்தேவன்.
"ஆனால் உன் பேரில் எனக்குச் சந்தேகமாயிருக்கிறது?" என்றாள் வேலம்மாள்.
"இது என்ன பைத்தியம்?" என்றான் மாடத்தேவன்.
"நீ என் உயிரைக் காப்பாற்றுவதற்குத்தான் இப்போது போகச் சொல்கிறாய், இல்லையா?" "அப்படித்தான் வைத்துக் கொள்ளேன், உன் உயிர் எனக்குப் பாத்தியதைப் பட்டதில்லையா?"
"ஈரேழு ஜன்மத்துக்கும் பாத்தியதைப் பட்டது. ஆகையால் நான் திரும்பி வரும்வரையில் நீ உயிரோடிருப்பதாகச் சத்தியம் செய்து கொடு! அப்படிச் சத்தியம் செய்தால்தான் போவேன்!"
"பெண்ணே! அப்படியே சத்தியம் செய்கிறேன். அதை நிறைவேற்றுவது முருகனுடைய பொறுப்பு!"
"முருகனை நான் வேண்டிக் கொள்கிறேன். நீ கவலைப்படாதே!" என்று வேலம்மாள் சொல்லி, தன் இரு கரிய விழிகளாலும் ஒரு தடவை மாடத்தேவன் முகத்தைப் பருகி விடுபவள் போலப் பார்த்தாள். பிறகு அவனுடைய கழுத்தை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தாள்.
மாடத்தேவன் தன்னுடைய குடிசைக்குப் போனான் அதிலிருந்த சில ஆயுதங்களையும் தட்டு முட்டுச் சாமான்களையும் எடுத்துக் கொண்டான். பிறகு நெருப்புக் குச்சியைக் கிழித்துக் குடிசையின் கூரையில் பற்ற வைத்தான். தீப்பிடித்துக் கொண்டு குடிசை எரிய ஆரம்பித்ததும் கோட்டையை நோக்கிச் சென்றான். கோட்டைச் சுவர் மேல் ஏறி ஒரு வசதியான இடத்தில் கையில் துப்பாக்கியுடன் உட்கார்ந்து கொண்டான்.
சற்று நேரத்துக்கெல்லாம் குடிசை எரிந்த தீயின் வெளிச்சத்தில் ஏழெட்டுப் பேர் சாலையோடு வருவது தெரிந்தது. அவர்கள், எரியும் குடிசையின் அருகில் நின்று சற்று நேரம் பார்த்துக் கொண்டு நின்றார்கள். பின்னர், அவர்களில் நாலு பேர் பிரிந்து முன்னால் வந்தார்கள்.
மாடத்தேவன் துப்பாக்கியின் விசையை இழுத்தான். குபீர் என்ற சத்தத்துடன் குண்டு பாய்ந்தது. வந்தவர்களில் நாலு பேரும் துள்ளி நகர்ந்து கொண்டார்கள். ஒருவர் மேலும் குண்டு பாயவில்லை.
மாடத்தேவன் பிறகு இரண்டு மூன்று தடவை சுட்டதும் வியர்த்தமாகவே போயிற்று.
பிறகு அந்த மனிதர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடி ஆலோசித்தார்கள். அவர்களில் ஒருவன் மட்டும் வந்த வழியே திரும்பிச் சென்றான்.
மற்றவர்கள் சாலையில் துப்பாக்கி எல்லைக்கு வெளியே ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டார்கள்.
திடீரென்று அவர்களில் ஒருவன், "வேலம்மா! மகளே வேலம்மா!" என்று கூவிக்கொண்டு கோட்டையை நோக்கி ஓடி வந்தான். அவன் கருப்பையா சேர்வை என்பது மாடத்தேவனுக்குத் தெரிந்தது. கூடாரத்தில் கட்டப்பட்டிருந்தபோது பக்கத்துக் கூடாரத்திலிருந்த வந்த கிழவனின் குரல் கருப்பையா சேர்வையின் குரல்தான். ஆனால் அவன் எதற்காக இப்போது அப்படி அலறிக் கொண்டு ஓடி வருகிறான்? இதுவும் ஒரு சூழ்ச்சியோ? துப்பாக்கியில் பாக்கியிருந்த ஒரு குண்டை அந்தத் துரோகியின் மீது செலுத்தலாமா என்று மாடத்தேவன் ஒரு கணம் யோசித்தான். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் பின்னால் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவன் அந்த வேலையைச் செய்து விட்டான். கிழவன் 'வீல்' என்று சத்தமிட்டுக்கொண்டே கீழே விழுந்தான். 'கிழவனுடைய துரோகத்துக்குப் பலன் கிடைத்துவிட்டது' என்று எண்ணி மாடத்தேவன் மகிழ்ந்தான். ஆனால் இப்படி அவன் செய்த துரோகத்தைப்பற்றி வேலம்மாள் தெரிந்து கொள்ளாதது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று? தெரிந்திருந்தால் வேலம்மாள் அதை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாள்!
கிழவனுடைய துரோகச் செயலினால் ஊமைத்துரைக்கு ஆபத்து ஏற்படாமல் அவரை எச்சரித்து அனுப்பியது கூட அவ்வளவு பெரிய காரியம் இல்லை. அவருக்கு வழி காட்டுவது என்ற காரணத்தின் பேரில் வேலம்மாளை அனுப்பியது எவ்வளவு நல்ல யோசனை?
அதுவரையில் மாடத்தேவனுடைய யோசனை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இனி என்ன செய்வது என்பதுதான் தெரியவில்லை. வந்தவர்கள் துணிந்து கோட்டைக்குள் வருவார்கள். ஒரு கை பார்த்துவிடலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால், அவர்கள் அருகில் நெருங்குகிற வழியாயில்லை. ஊமைத்துரை இங்கிருப்பதாகவே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தவரையில் நல்லதுதான். நேரம் ஆக ஆக, ஊமைத்துரை சிறுவயல் போய்ச் சேர்வதற்கு வசதி ஏற்படும். இந்தப் படு முட்டாள்கள் இங்கேயே காத்துக் கொண்டிருக்கட்டும்! ஊமைத்துரையின் சுருள் வாளை நினைத்துப் பயந்து சாகட்டும்!...
இவ்வாறு இரு தரப்பிலும் காத்திருக்கும் போட்டி நடந்தது. நள்ளிரவு வரையில் அந்தப் போட்டி நடந்தது. மாடத்தேவனுக்குத் தூக்கம் கூட வர ஆரம்பித்துவிட்டது. இளம் பிராயம் அல்லவா? கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. அந்தச் சமயத்தில், வடக்கேயிருந்து வந்த சாலை வழியாக ஒரு கரிய கட்டெறும்புக் கூட்டம் சாரி வைத்து வருவதைக் கண்டான்.
இல்லை, இல்லை! அவை கட்டெறும்புகள் அல்ல. கும்பினிப் பட்டாளம்தான் வருகிறது. அப்பப்பா! எத்தனை பேர்? இருநூறு, ஐந்நூறு, ஆயிரம் பேர் இருக்கும் போல் தோன்றுகிறதே? அத்தனை பெரிய படைக்கு முன்னால் தான் ஒருவன் என்ன செய்ய முடியும்? ஆனாலும் ஒரு கை பார்த்துவிட வேண்டும். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் கும்பினிப் பட்டாள சிப்பாய்கள் புகுந்தபோது, கோட்டைக்குள்ளே இருந்த ஒவ்வொரு வீரனும் எத்தனைப் பேரைக் கொன்றுத்தீர்த்தான்? அதைப் போல் தானும் செய்துவிட்டு, வீர சொர்க்கம் அடைய வேண்டியதுதான். ஆனால், பாவம், வேலம்மாள். அவளுக்குச் செய்து கொடுத்தச் சத்தியம் என்ன ஆகிறது? அதைப்பற்றி யோசித்து என்ன பயன்? அவள் தான் முருகன் பேரில் பாரத்தைப் போட்டிருக்கிறாளே? முருகனே சத்தியத்தை நிறைவேற்றட்டும்! நமக்கு என்ன கவலை?
இப்படிச் சாஹஸச் செயல்கள் புரிவதுபற்றி மாடத்தேவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் கும்பினிப் படைநெருங்கி வந்துவிட்டது. அது என்ன? படைக்கு நடுவில் நீளமாக வண்டி ஒன்று வருகிறதே! அந்த வண்டியில் என்ன வருகிறது.
பட்டாள வரிசை, முன்னால் வந்த வீரர்கள் நின்ற இடத்திலேயே நின்றது. ஏதோ ஆலோசனைகள் நடந்தன. பிறகு, அந்தக் கரிய நீண்ட வண்டியருகில் நின்று கொண்டு சில வீரர்கள் என்னமோ செய்தார்கள். ஓகோ! அது பீரங்கி வண்டிபோல் அல்லவா இருக்கிறது? பீரங்கியில் மருந்து போட்டுக் கொட்டியிருக்கிறார்களா?
மாடத்தேவன் சிறிது திடுக்கிடத்தான் செய்தான். பீரங்கி வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. பீரங்கியிலிருந்து குண்டு போட்டுக் கோட்டையை அடியோடு நாசமாக்கப் பார்க்கிறார்கள் போலும்! ஆனால் அதிகமாகக் குண்டு போடுதல் தேவையாயிராது. பீரங்கியின் வேலை மிகவும் எளிதாய் போய்விடும். மூட்டை மூட்டையாக வெடி மருந்தைத் திருடிக் கொண்டு வந்து மாடத்தேவன் கோட்டையின் அறை ஒன்றில் போட்டு பூட்டி வைத்திருந்தான் அல்லவா? அந்த அறையில் குண்டுவிழ வேண்டியதுதான்! தீர்ந்தது கோட்டை! தீர்ந்தது தன் உயிரும்! வேலம்மா! நன்றாக முருகன் பேரில் பாரத்தைப் போட்டாய்! கும்பினிப் பட்டாளத்தின் பீரங்கியின் முன்னால் முருகன் என்ன செய்வான்?
ஓகோ!...கிழவன் அலறி ஓடி வந்ததன் காரணமும் இப்போது தெரிந்தது. பீரங்கி கொண்டு வந்து கோட்டை மேல் சுடப் போகிறார்கள் என்று அறிந்ததும் கிழவனுக்கு மகளைப் பற்றிய கவலை வந்து விட்டதாக்கும்!...
குடிசைத் தீ முன்னமே அணைந்து விட்டது. நாலா பக்கமும் காரிருள் சூழ்ந்திருந்தது. அந்த இருளைப் பிளந்துகொண்டு பீரங்கி முகப்பில் ஒரு மின்னல் ஜோதி தென்பட்டது. அடுத்த கணம் பயங்கரமான பீரங்கியின் குரைப்புச் சத்தம் கேட்டது. பீரங்கி சத்தத்திலேயே அந்தப் பயங்கரத்திலேயே அந்தப் பழைய கோட்டைச் சுவர்கள் அதிர்ந்தன. மறு விநாடி குண்டு வந்து கோட்டைக்குள் விழுந்தது. ஆயிரம் பேரிடி ஏக காலத்தில் இடித்தாற் போல ஒரு பயங்கர வெடிச் சத்தம்; ஒரு பெரிய அகண்டமான நெருப்பு ஜுவாலை; பிறகு சட சட, பட படவென்று வானம் இடிந்து விழுந்தது. குன்றும் கோட்டைச் சுவர்களும் தகர்ந்து விழுந்தன. மாடத்தேவனும் உருண்டு விழுந்தான். விழுந்த கணத்திலேயே நினைவை இழந்தான்.
மாடத்தேவனுக்கு மறுபடி நினைவு வந்தபோது, காலில் சகிக்க முடியாத கொடிய வலி தெரிந்தது. மூச்சு விடத் திணறியதும் தெரிந்தது. உடம்பெல்லாம் சொட்ட வியர்த்து நனைந்திருந்தது. ஒரே இருட்டாயும் இருந்தது. அந்த இருட்டைப் போன்ற இருட்டை அவன் அதற்கு முன் கண்டதேயில்லை. ஒருவேளை தன் கண் பொட்டையாயிற்றோ என்று நினைத்தான். இல்லை; கண்ணில் ஒரு கோளாறும் இல்லை. கையினால் தடவிப் பார்த்தேன். மேலே சில்லிட்ட பாறை; பக்கத்திலும் சில்லிட்ட பாறை. கீழே மட்டும் கல்லும் மண்ணுமான தரை, அப்பால் இப்பால் நகருவதற்கு இடம் இல்லை. இடமிருந்தாலும் நகர முடியாதபடி காலில் ஏதோ பெரும் பாரம் அமுக்கியது. பொறுக்க முடியாத வலியும் சேர்ந்திருந்தது.
யாரோ சிலர் பேசிக் கொண்ட குரல்கள் பாதாளத்திலிருந்து கேட்பது போலக் கேட்டன.
"பார்த்தாயா? ஊமையன் மறுபடியும் டிமிக்கி கொடுத்து விட்டான்!"
"நன்றாகத் தேடிப் பார்த்தாகி விட்டது. இனித் தேடுவதற்கு இடமில்லை."
"பீரங்கி வருவதற்கு முன்னாலேயே அவன் கம்பி நீட்டியிருக்க வேண்டும்."
"ஊமைத்துரையை ஊர் ஜனங்கள் இந்திரஜித்தன் என்று சொல்வது சரிதான்."
"எப்படியும் அகப்படாமலா போகிறான்? நாலாபுறமும் ஆட்களைப் பிரித்து அனுப்பித் தேடச் செய்யலாம்!"
"சிவகங்கைக்குப் போயிருப்பான்."
"இல்லை, கமுதிக் கோட்டைக்குச் சென்றிருப்பான்."
"காட்டிலே ஒளிந்து கொண்டிருந்தாலும் இருப்பான்."
"அந்தக் குடிகாரக் கிழவன் நம்மை வேண்டுமென்று ஏமாற்றினானா? அல்லது தானே ஏமாந்து போனானா?"
"முட்டாள்களே! அவனைச் சுட்டுக் கொன்று விட்டீர்களே! மற்றவர்களுக்கு உதாரணமாகத் தூக்கில் அல்லவா தொங்கவிட்டிருக்க வேண்டும்?"
கிழவன் மரத்தில் தொங்கும் காட்சியை மாடத்தேவன் மனக் கண்ணால் பார்த்து மகிழ்ந்தான். அந்தச் சண்டாளத் துரோகியை அப்படிச் செய்திருந்தாலும் தகும். ஆனால் வேலம்மாள் பார்த்தால் எவ்வளவுக் கஷ்டப்படுவாள்? வேலம்மா! வேலம்மா! உன்னை இனி நான் காணப் போவதில்லை. இதோ மறுபடியும் எனக்கு மயக்கம் வருகிறது. என்னுடைய உயிர் இதோ பிரிந்து போகிறது...
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாடத்தேவன் சுனை - Madaththevan Sunai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மாடத்தேவன், கொண்டு, என்ன, இல்லை, வேலம்மாள், அவன், வேலம்மா, வந்து, அந்த, என்றான், பிறகு, நான், பீரங்கி, தெரிந்தது, பேரில், கும்பினிப், குண்டு, பேர், வந்த, அல்லவா, கிழவன், ஒருவன், முன்னால், இப்போது, முருகன், சத்தியம், கோட்டைச், எவ்வளவு, பெரிய, அந்தப், வருகிறது, பீரங்கியின், வேண்டும், மறுபடியும், உட்கார்ந்து, என்றாள், ஊமைத்துரை, கோட்டையை, செய்து, அவர்களில், கோட்டைக்குள், கரிய, மேல், காலில்