மாடத்தேவன் சுனை
1
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த
இனிய சுனையைப் பெற்றுள்ள அர்ச்சுனன் குன்றின் அடிவாரத்தில் ஒரு சிறிய
கோட்டை இருந்தது. ஒரு சமயம் அர்ச்சுனன் தென்னிந்தியாவில் தீர்த்த யாத்திரை
செய்தபோது இந்தக் குன்றின் மேல் ஏறி நின்று தவம் செய்தானாம். அப்போது
அவனுக்குத் தாகம் எடுத்து விட்டதாம். அர்ச்சுனனின் தந்தையான இந்திரன்
தன் மகனுடைய தாகத்தைத் தீர்ப்பதற்காகத் தேவலோகத்திலிருந்து ஒரு குடம்
தண்ணீரைக் கொட்டினானாம். அதில் அர்ச்சுனன் குடித்தது போக மிச்சமிருந்த
தண்ணீர் சுனையாக நின்று விட்டதாம். ஆகையினாலேயே அதற்கு அர்ச்சுனன் குன்று
என்று பெயர் வந்ததாம். இது பழைய கதை; குன்றுக்குப் பெயர் வந்த கதை. 'மாடத்தேவன்
சுனை' என்னும் பெயர் எவ்விதம் ஏற்பட்டது என்பதையல்லவா இப்போது நாம் பார்க்க
வேண்டும்?
அர்ச்சுனன் தவம் செய்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் குன்றின் சாரலில் பாண்டிய மன்னன் ஒருவன் ஒரு கோட்டை கட்டினான். அந்தக் கோட்டை நாளடைவில் பழுதுபட்டு நமது கதை நடந்த காலத்தில் இடிந்து தகர்ந்த நிலையிலேதான் இருந்தது. ஆகையால் அந்தக் கோட்டையைப் பற்றி யாவரும் அவ்வளவாகக் கவனிக்கவில்லை. பாஞ்சாலம்குறிச்சி வீரபாண்டியக் கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட போது, பாண்டிய நாட்டிலுள்ள பாளையக்காரர்களின் கோட்டைகளையெல்லாம் தகர்த்துவிட வேண்டுமென்று கும்பினிக்கார வெள்ளையர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் இந்தக் கோட்டையை இடிக்க வேண்டும் என்று அவர்கள் கட்டாயப் படுத்தவில்லை. ஏற்கனவே அக்கோட்டை வேண்டிய மட்டும் இடிந்து தகர்ந்து இருந்தது. எந்தவிதமான சண்டைக்கும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாது. அதிகம் பேர் அதில் தங்கியிருப்பது அசாத்தியமான காரியம்.
அச்சமயம் அக்கோட்டையில் கருப்பையா சேர்வை என்ற கிழவனும், அவனுடைய செல்லப் புதல்வி வேலம்மாள் என்பவளும் வாழ்ந்து வந்தார்கள். வெகு காலத்துக்கு முன்பு அந்தப் பாறைக்குப் பக்கத்தில் கள்ளர் பயம் அதிகமாயிருந்த காலத்தில் வழிப்போக்கர்களுக்குப் பாதுகாப்பாக அக்கோட்டை கட்டப்பட்டது. சிவகங்கைப் பாளையக்காரர் அங்கே கருப்பையாவைக் குடும்பத்துடன் குடியேற்றி வைத்தார். அதற்காக அவருக்கு மானியமும் கிடைத்து வந்தது. இளம் வயதில் கருப்பையா பெரிய வீர தீரனாயிருந்தான். கையில் தடியை எடுத்துக் கொண்டு கிளம்பினால் பத்துக் கள்ளர்களை அவன் ஒருவனாகவே சமாளித்து விடுவான். பிரயாணிகள் இரவு நேரங்களில் அந்தக் கோட்டையில் தங்குவதுண்டு. அப்படித் தங்கியதற்காகவும், கருப்பையா தங்களுக்கு அளிக்கும் பாதுகாப்புக்காகவும் பிரயாணிகள் அவனுக்குத் தக்க சன்மானம் கொடுத்துவிட்டுப் போவார்கள்.
அதெல்லாம் பழைய காலம். கும்பினிக்காரர்கள் வந்து ஆர்க்காட்டு நவாப்புக்காக வரி வசூலிக்கத் தொடங்கியதிலிருந்து எல்லாம் ஏறுமாறாகப் போய்விட்டது. கருப்பையாவுக்குக் கிடைத்து வந்த மானியம் நின்றுவிட்டது. அவனுடைய அருமை மனைவி அவனையும் சின்னஞ்சிறு வேலம்மாளையும் அநாதையாக விட்டு விட்டுக் காலமாகி விட்டாள். இப்போதெல்லாம் அந்தப் பக்கத்தில் கள்ளர் பயமும் அதிகம் கிடையாது. கும்பினிக்காரர்களின் படைகளே பட்டப் பகலில் எல்லாக் கொள்ளையையும் நடத்தி வந்தபடியால், கள்ளர்கள் யாரைக் கொள்ளை அடிப்பார்கள்? அவனும் அவனுடைய மகளும் வாழ்க்கை நடத்துவதுதான் எப்படி?
இத்தகைய நிலைமையில் அர்ச்சுனன் குன்றின் உச்சியிலிருந்த சுனை நீர் தகப்பனும் மகளும் ஜீவித்திருப்பதற்கு கொஞ்சம் உதவியாயிருந்து வந்தது. அந்தச் சுனையில் சாதாரணமாக மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் தண்ணீர் ததும்பிக் கொண்டிருக்கும். அதிலிருந்து ஒரு சிறிய அருவி கோட்டைக்குள்ளே புகுந்து ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக ஓடிச் சென்று வெளியில் வந்து கீழே அடிவாரத்துக்குச் செல்லும். அவ்விதம் குன்றின் அடிவாரத்துக்கு வரும் சுனை அருவி நீரை உபயோகித்து ஒரு வாலிபன் பயிர்த் தொழில் செய்து கொண்டிருந்தான். அவன் பெயர் மாடத்தேவன். சில சமயம் அவன் கேழ்வரகு பயிர் செய்வான். சில சமயம் வெள்ளரிக்காய் போடுவான். நல்ல உழைப்பாளி. ஆகையால் அவனுடைய தோட்டம் எப்போதும் குளுகுளுவென்றிருக்கும். அந்தப் பக்கமாகச் சாலையில் பிரயாணம் செய்கிறவர்கள் சற்று நின்று அந்தத் தோட்டத்தைப் பார்த்துவிட்டுத்தான் போவார்கள். அவர்களில் சிலர் மகிழ்ச்சியுடன் பார்ப்பார்கள்; சிலர் பொறாமையுடனும் பார்ப்பார்கள்.
அவ்வாறு பொறாமையுடன் பார்த்தவர்களில் கருப்பையா சேர்வையும் ஒருவன். மாடத்தேவனுடைய உழைப்பினால் அவனுடைய காணி நிலம் நாளுக்கு நாள் செழிப்படைந்து வந்தது கண்டு கிழவன் மனம் புழுங்கினான். அம்மாதிரி தானும் செய்யலாமென்றால் கைகளில் போதிய வலிமை இல்லை. மூப்பும், வறுமையும், மதுவும் சேர்ந்து இரும்பு போன்ற உடம்பைப் பலவீனப்படுத்தியிருந்தன. தனக்கும் தன் மகளுக்கும் அன்றாடம் பசி தீருவதே பெரும் பாடாயிருக்கும்போது அவனுடைய கண்ணெதிரே, புதிதாக வந்து குடியேறியவன் ஒருவன் நாளுக்கு நாள் செழிப்பாயிருந்தால் மனம் கஷ்டப்படத்தானே செய்யும்? எனவே சுனைத் தண்ணீர் சம்பந்தமாகக் கிழவன் தகராறு செய்ய ஆரம்பித்தான். தன்னுடைய கோட்டையின் வழியாகச் செல்லும் சுனை அருவித் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி விடுவதாகச் சொன்னான். இதற்கு மாடத்தேவன் பயப்படவில்லை. "சுனை நீர் உன்னுடையதா? அல்லது கோட்டைதான் உன்னுடையதா? சுனை நீர் கடவுள் அளித்தது; இந்தப் பாழடைந்த கோட்டையோ சிவகங்கைப் பாளையக்காரருடையது. நீ மட்டும் சுனை நீரைத் தடுத்து நிறுத்து பார்க்கலாம். நான் பாளையக்காரரிடம் போய் உத்தரவு வாங்கி வருகிறேனா, இல்லையா பார்!" என்றான் அந்த வாலிபன்.
"பாளையக்காரனுக்கு இங்கே என்ன அதிகாரம்? அவன் எனக்குப் படி அளக்கிறானா? அந்தக் காலம் மலையேறிவிட்டது. ஆனானப்பட்ட வீரபாண்டியக் கட்டபொம்மனைக் கும்பினிக்கார வெள்ளையர்கள் புளிய மரத்திலே தொங்கவிட்டு விட்டார்கள் இந்தப் பாளையக்காரன் என்னை என்ன செய்துவிட முடியும்? கோட்டை என்னுடையது. நான் இஷ்டப்பட்டால் அருவியைத் தடுப்பேன்!" என்று கிழவன் கருவினான்.
இதையெல்லாம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள் அவனுடைய மகள் வேலம்மாள். அன்று மாலை மாடத்தேவனுடைய தோட்டத்திற்குப் போனாள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றார்கள். பேச்சு எளிதில் வருவதாயில்லை; வேலம்மாளின் நெஞ்சை அடைத்தது. அவளுடைய கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அப்போது பூரண சந்திரன் கீழ்த் திசையில் உதயமானான். சந்திர கிரணங்கள் வேலம்மாளின் கண்ணீர்த் துளிகளைச் சுடர்விடும் முத்துக்கள் ஆக்கின.
அதைப் பார்த்த நிமிடத்திலேயே மாடத்தேவன் வேலம்மாளின் கொத்தடிமையானான்.
"பெண்ணே! இந்த நேரத்தில் இங்கே தனியாக ஏன் வந்தாய்? உன் அப்பன் பார்த்தால் என்ன சொல்வான்?" என்றான்.
ஏற்கனவே அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதுண்டு. எட்ட நின்று பேசியதும் உண்டு. ஆனால், மாடத்தேவனின் தோட்டத்துக்குள் வேலம்மாள் பிரவேசித்ததில்லை.
மாடத்தேவன் இப்போது கேட்டதற்கு "உன்னிடம் ஒன்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வதற்காக வந்தேன்!" என்றாள் வேலம்மாள்.
"கெஞ்ச வேண்டாம்; உத்தரவு போடு!" என்று கூறினான் மாடத்தேவன்.
"என் தகப்பனாருக்கு வயதாகி விட்டது. தள்ளாமை வந்துவிட்டது. இன்னும் சில காலந்தான் உயிரோடிருப்பார். அவர் இருக்கிறவரையில் இந்த இடிந்த கோட்டையும் மலை மேலுள்ள சுனையும் அவருடைய உடைமைகளாகவே இருக்கட்டும். அவர் போகும் போது இதையெல்லாம் கொண்டு போகப் போவதில்லை. அவருக்குப் பிறகு நான் இங்கே தனியாக இருக்க மாட்டேன். அப்புறம் நீயே இதையெல்லாம் வைத்துக் கொள். நான் போட்டிக்கு வரவில்லை. கொஞ்ச நாள் பொறுத்துக் கொண்டிரு!" என்றாள்.
"பெண்ணே! கோட்டை, சுனை, இந்தத் தோட்டம், குடிசை எல்லாம் உன்னுடைய உடைமை; நான் உன்னுடைய அடிமை. நீ என்னை இங்கே இருக்கச் சொன்னால் இருக்கிறேன். இல்லாவிட்டால் மறுபடியும் போய்க் கும்பினிக்காரன் பட்டாளத்தில் சேர்ந்து விடுகிறேன்" என்றான் மாடத்தேவன்.
"கும்பினிக்காரன் பட்டாளத்தில் சேர்வதா? பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியனை தூக்கிலே போட்ட சண்டாளர்களுடைய படையிலே சேர்வதா? அந்தப் பேச்சை இன்னொரு தடவை சொல்லாதே! இங்கேயே இரு. உண்மையில் அப்பாவுக்கு உன் பேரில் ரொம்பப் பிரியம். கொஞ்சம் நல்லபடியாக அவருடன் பேசிப் பார்த்தால், இரண்டு பேரும் அன்யோன்யமாகி விடுவீர்கள்!" என்றாள் வேலம்மாள்.
வேலம்மாளுடைய யோசனையை மறுநாளே மாடத்தேவன் கையாண்டு பார்த்தான். கருப்பையா சேர்வையிடம் சென்று "மாமா! அப்புறம் நான் யோசித்துப் பார்த்தேன். உங்களுடன் சண்டைப் பிடித்தது தப்பு என்று தெரிந்தது. நானோ அனாதை; உற்றார் உறவினர் யாருமில்லாதவன். இந்த அக்கம் பக்கத்திலும் நம்மைத் தவிர யாரும் கிடையாது. உங்களுக்கு நான் துணை; எனக்கு நீங்கள் தான் துணை. நாம் எதற்காகச் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்? எனக்கு ஒரு யோசனை தோன்றியது. உங்கள் கோட்டை வழியாக வரும் அருவித் தண்ணீரை நான் வெள்ளாமைக்கு உபயோகிக்கிறேன் அல்லவா? அதற்குப் பதிலாக, என்னுடைய நிலத்தில் விளைவதில் நாளில் ஒரு பாகம் கொடுத்து விடுகிறேன். என்ன சொல்கிறீர்கள்?" என்றான்.
"தம்பி! அப்படி வா வழிக்கு! இந்த அறிவு உனக்கு முன்னாலேயே ஏன் இல்லாமல் போயிற்று?" என்று கருப்பையா சேர்வை பெருமிதத்துடன் கூறினான்.
"போனது போகட்டும், மாமா! இனிமேல் நடக்க வேண்டியதைப் பார்க்கலாம். ஒரு நாள் என்னுடைய தோட்டத்துக்கு வந்து தான் பாருங்களேன்!" என்று மாடத்தேவன் ஆவலோடு கூறினான்.
"அதற்கென்ன, வருகிறேன். எப்போதாவது உனக்கு கூடமாட ஒத்தாசை செய்ய வேண்டுமானாலும் சொல்லு; நானும் வேலம்மாளும் எங்களால் முடிந்த ஒத்தாசை செய்கிறோம். என் மகள் எப்பேர்ப்பட்டவள் என்று உனக்குத் தெரியாது. அவள் கண் பார்த்ததை அவள் கை செய்யும்" என்றான் கிழவன்.
"நன்றாயிருக்கிறாது, மாமா! தள்ளாத கிழவராகிய உங்களையும் உங்கள் மகளையும் நான் என் தோட்டத்தில் வேலை செய்யச் சொலவேனா? நீங்கள் எப்போதாவது வந்து என்னை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். நான் தான் ஏகாங்கி என்று சொன்னேனே? நீங்கள் என்னுடன் சிநேகமாயிருந்தால் அதுவே எனக்குப் பெரிய உதவி!" என்றான் மாடத்தேவன்.
கிழவனும் மகளும் அன்றைக்கே மாடத்தேவனுடைய தோட்டத்துக்கும் போனார்கள். அதில் நாலில் ஒரு பங்கு வெள்ளாமை தனக்கு என்று ஏற்பட்டதிலிருந்து கிழவனுக்குப் பொறாமையெல்லாம் போய்விட்டது. தோட்டம் நன்றாயிருப்பதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான். தோட்டத்தை இன்னும் நல்ல செழிப்பாகச் செய்வதற்கு யோசனைகளும் சொன்னான்.
"நீ என்னை வேலை செய்யக்கூடாது என்று சொன்னாலும் நான் கேட்கமாட்டேன். என்னை இன்னும் கைகாலை முடக்கிப் போட்டு விடவில்லை. தண்ணீர் பாய்ச்சுகிறது, களை பிடுங்குகிறது எல்லாம் செய்வேன். வேலம்மாளுக்குத்தான் என்ன? கொஞ்சம் பழகி விட்டால் எல்லா வேலைகளையும் செய்வாள். என்னுடைய குலத்தில் பெண் பிள்ளைகள் வெளியேறி வேலை செய்து வழக்கமில்லைதான். ஆனால் அப்படியெல்லாம் பார்த்தால் சரிப்படுமா? காலம் மாறிவிட்டது. ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் பிழைக்க வேண்டும் அல்லவா? கைப்பாடு படுவதில் கேவலம் ஒன்றும் இல்லை...!"
மாடத்தேவன் இப்போது குறுக்கிட்டு, "மாமா! உங்கள் மகள் தோட்ட வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நான் இரண்டு வேளையும் கையினால் பொங்கித் தின்ன வேண்டியிருக்கிறது. அந்த வேலையை மிச்சம் செய்தாலே எவ்வளவோ எனக்கு உதவியாயிருக்கும்!" என்று சொன்னான்.
கிழவனுடைய மனம் பூரித்தது. அநேகம் தடவை இந்த மாதிரி கருப்பையா சேர்வை எண்ணமிட்டதுண்டு. வேலம்மாளை இந்தப் பையனுக்குக் கட்டிக் கொடுத்துவிட்டால், எல்லாக் கவலையும் தீர்ந்துவிடும். வேலம்மாளை வெளியூருக்கு அனுப்ப வேண்டியதில்லை. தான் சாகும் வரையில் அவளோடேயே இருந்து விடலாம். மாடத்தேவனின் வெள்ளாமையில் நாலில் ஒரு பங்குக்குப் பதில் நிலம் முழுவதுமே தனக்கு உரிமையாகப் போய்விடும்! அப்புறம் தான் வைத்தது தானே சட்டம்? - இம்மாதிரி எண்ணினான் அந்தப் பேராசைக்காரக் கிழவன். ஆனால் வெளியில் கொஞ்சம் பிகுவாகவே பேசினான்.
"அதெல்லாம் அவ்வளவு சீக்கிரமாய் முடிவு செய்யக் கூடிய காரியமா, தம்பி! அது விஷயத்தில் வேலம்மாளின் இஷ்டந்தான் முக்கியம். அவள் இஷ்டத்துக்கு விரோதமாக நான் எதுவும் சொல்லமாட்டேன்" என்றான்.
வேலம்மாள் அவர்களுடைய பேச்சின் வெளிப்படையான பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு, "இது என்ன அப்பா, பிரமாதம்? இரண்டு பேருக்குச் சமைப்பதற்குப் பதில் மூன்று பேருக்குச் சமைப்பதில் என்ன கஷ்டம்? இவர் வேண்டுமானால் தினம் நம் வீட்டுக்கு வந்து உன்னோடு சாப்பிடட்டுமே? இவருக்கும் சேர்த்துச் சமைப்பதில் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை" என்றாள்.
"உனக்குக் கஷ்டம் இல்லையென்றால் எனக்கு என்ன ஆட்சேபணை?" என்றான் கிழவன் கருப்பையா சேர்வை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாடத்தேவன் சுனை - Madaththevan Sunai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், மாடத்தேவன், கருப்பையா, என்றான், என்ன, சுனை, அவனுடைய, வேலம்மாள், கிழவன், கோட்டை, வந்து, அர்ச்சுனன், என்னை, அந்தப், தான், எனக்கு, அந்தக், குன்றின், இல்லை, தண்ணீர், நாள், வேலம்மாளின், இங்கே, வேலை, என்றாள், நின்று, கொஞ்சம், அவன், கொண்டு, மாமா, பெயர், சேர்வை, வேண்டும், மகள், அவள், உங்கள், பார்த்துக், என்னுடைய, பார்த்தால், இன்னும், அப்புறம், நீங்கள், கூறினான், இரண்டு, இதையெல்லாம், தோட்டம், ஒருவன், மட்டும், வந்தது, செய்து, இப்போது, சமயம், அதில், காலம், எல்லாம், மனம், செய்ய, சொன்னான், மாடத்தேவனுடைய, அந்த, மகளும், நீர், இந்தப்