மாடத்தேவன் சுனை
முன்னுரை
ராமநாதபுரம் ஜில்லாவில் நடைபெறவிருந்த
ஓர் ஆண்டு விழாவுக்காக நான் ரயில் ஏறிப் பிரயாணம் செய்ய நேர்ந்தது. அப்போது
நாடெங்கும் தண்டவாளம் நகர்ந்து ரயில் வண்டி கவிழ்ந்தது பற்றிச் செய்திகள்
வந்து கொண்டிருந்த காலம். எனினும் நான் ஏறிய அதே ரயிலில் ஒரு கனம் மந்திரியும்
ஏறியிருக்கிறார் என்ற தைரியத்தின் பேரில் கவலையற்றிருந்தேன்.
'தூங்காமை கல்வி துணிவுடைமை
இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.'
என்னும் திருவள்ளுவரின் திருவாக்கைக் கடைப்பிடித்து நம் மந்திரிமார்கள்
உறக்கமின்றி, தேச நிர்வாகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் அல்லவா? அவர்கள்
விழித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் எந்த அரக்கன் வந்து தண்டவாளத்தைத்
தொட்டு விட முடியும்? யமன் தான் அணுகி வந்து விடுவானா?நீங்கா நிலனாள் பவர்க்கு.'
இரண்டு பக்கமும் காடாயிருந்த பிரதேசத்தில் ரயில் நின்றது. காட்டுப்பாக்கம் ஸ்டேஷனுக்கு அப்பால் சிறிது தூரத்தில் நிற்பதாக அறிந்தேன். காரணம் எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வண்டி தண்டவாளத்திலிருந்து நழுவி விட்டதுதானாம். நல்ல வேளையாய்ப் போச்சு. எல்லாம் கடவுளுடைய செயல்தான்! எதிர் பக்கம் வந்த ரயிலுக்கு நேர்ந்தது இந்த ரயிலுக்கு நேர்ந்திருந்தால்?.. இவ்வுலகில் நம்மால் ஏதோ பெரிய காரியங்கள் நிறைவேற வேண்டுமென்பது கடவுளுடைய விருப்பம் போலும்! அன்றைக்கு 'லார்ட் கிளைவ்' என்னும் மகா வீரன் தன்னைத்தானே துப்பாக்கிக் குண்டால் சுட்டுக் கொள்ள முயன்றபோது அவனைச் சாகாமல் காப்பாற்றிய கடவுள்தான் நம்மையும் காப்பாற்றி இருக்க வேண்டும்! உலகில் எந்தப் பாகத்தில் எந்த சாம்ராஜ்யத்தை நாம் ஸ்தாபிக்க வேண்டுமோ, அல்லது அழித்தாக வேண்டுமோ, யார் கண்டது?
காட்டுப்பாக்கத்துக்கு அருகில் நாலரை மணி நேரம் காத்திருந்த பிறகு எங்கள் ரயில் கிளம்பிற்று. அப்புறமும் கொஞ்சம் சாவகாசமாகவே சென்றது. அதன் பலன் என்னவென்றால், காலை எட்டு மணிக்கு மதுரைக்குப் போக வேண்டிய ரயில் மத்தியானம் 12-30க்கு போய்ச் சேர்ந்தது. (அங்கு இறங்கி விசாரித்தபோது, கனம் மந்திரி அவர்கள், எழும்பூர் ஸ்டேஷனில் தூங்க ஆரம்பித்தவர், திண்டுக்கல்லில்தான் விழித்துக் கொண்டார் என்று அறிந்தேன்! நல்ல வேளை, மந்திரியை மட்டும் நம்பியிராமல் கடவுளையும் நம்பியது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று!)
குறிப்பிட்ட ஆண்டு விழாவுக்குப் போய்ச் சேர வேண்டுமானால், பாக்கிப் பிரயாணத்துக்கு ரயிலை நம்பிப் பயனில்லை என்று ஏற்பட்டது. எனவே மதுரையில் ஒரு மோட்டார் கார் பிடித்துக் கொண்டு புறப்பட்டோ ம். வழியில் காரின் இன்ஜின் கொஞ்சம் தொந்தரவு கொடுத்தது. முன் பக்கத்துத் துவாரம் வழியாகவும், பின் பக்கத்து ஓட்டை வழியாகவும் பிரமாதமான புகை கிளம்பியது. "வேறொன்றுமில்லை; வண்டியின் என்ஜின் கொஞ்சம் தண்ணீர் கேட்கிறது" என்றார் டிரைவர்.
"இந்த வறண்ட ஜில்லாவில் மனிதர்களுக்கும் பிராணிகளுக்குமே தண்ணீர் கிடைப்பது அரிதாயிற்றே! மோட்டார் என்ஜின் வேறு தண்ணீர் கேட்டால், தண்ணீர் எங்கே கிடைக்கப் போகிறது?" என்று நான் என் கவலையைத் தெரிவித்துக் கொண்டேன்.
"சீக்கிரத்தில் மாடத்தேவன் சுனை வரும். அதில் எப்படியும் தண்ணீர் இருக்கும்" என்றார், கூட வந்த பாண்டிய நாட்டு நண்பர்.
மாடத்தேவன் சுனை வந்தது. அது சாலைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு குட்டையான, கறுப்பான, பச்சை நிறமே காணாத பாறையின் உச்சியில் இருந்தது. அந்தப் பாறையின் அடிவாரத்தில் ஒரு பழைய கோட்டை ஒரு காலத்தில் இருந்து, பின்னால் இடிந்து தகர்ந்து போயிருக்க வேண்டும் என்பதற்கு அறிகுறிகள் காணப்பட்டன. கோட்டைச் சுவரில் ஒரு சிறு பகுதி கூட உருப்படியாக இல்லை. கோட்டையின் அஸ்திவாரங்கள், தகர்ந்து உருண்டு கிடந்த சிற்சில பகுதிகள் மட்டுமே காணப்பட்டன.
அத்தகைய கரிய பாறையின் உச்சியில் சுற்று வட்டாரத்தில் வெகு தூரத்துக்கு வறண்டு கிடக்கும் பிரதேசத்தில், அந்த இனிய தெளிந்த நீர்ச்சுனை எப்படி ஏற்பட்டது என்பது ஒரு பெரிய மர்மமாகவே தோன்றியது. இங்கேதான் இயற்கையின் அதிசயமான சக்தியைக் காண்கிறோம். சுனையைப் பார்த்து அதிசயித்த பிறகு, அதன் கரையில் செங்குத்தாக நிறுத்தியிருந்த ஒரு கருங்கல்லின் மீது என் கவனம் சென்றது. கல்லுக்கு அருகில் ஒரு சிறிய வேல் நாட்டப்பட்டிருந்தது. கல்லுக்கும் வேலுக்கும் பூஜை நடப்பதுண்டு என்று, சந்தனம், குங்குமம், புஷ்பம், வழிந்தோடியிருந்த எண்ணெய் இவற்றிலிருந்து தெரிந்து கொண்டேன்.
"மாடத்தேவன் சுனை"யைப் பற்றி ஏதேனும் ஒரு கதை இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சுனையின் கதையைப் பற்றி விசாரிக்க அப்போது அவகாசம் ஏது? ஆண்டு விழா அகோரமான குரலில் எங்களை அழைத்துக் கொண்டிருந்தது. மோட்டார் வாகனத்தின் தாகம் தீர்ந்ததும் புறப்பட்டுச் சென்றோம்.
பிறிதொரு சமயம் அவ்விடத்துக்குச் சென்று அக்கம் பக்கத்தில் விசாரித்துத் தெரிந்து கொண்ட கதையைக் கீழே எழுதியிருக்கிறேன். கொஞ்சம் காது, மூக்கு வைத்திருக்கிறேன்; அவ்வளவுதான். காது மூக்கு உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் கதை பிடித்திருந்தால் சரிதான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாடத்தேவன் சுனை - Madaththevan Sunai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ரயில், தண்ணீர், வந்து, கொஞ்சம், சுனை, பாறையின், மாடத்தேவன், நான், ஆண்டு, மோட்டார், வேண்டும்