மாடத்தேவன் சுனை
3
சில நாளைக்கெல்லாம் முன்னைக் காட்டிலும்
மிக்க துயரகரமான செய்தி வந்தது. ஊமைத்துரையின் படைக்கும் கும்பினியின்
படைக்கும் கோரமான யுத்தம் நடந்தது என்றும், பாஞ்சாலங்குறிச்சிப் படை
கூண்டோ டு கைலாசமாகப் போர்க்களத்தில் மாண்டு மடிந்து விட்டதென்றும் ஜனங்கள்
சேரும் இடங்களில் எல்லாம் பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட வேலம்மாள்
கண்ணீர்விட்டு அழுதாள். மாடத்தேவன் கல்லாய்ச் சமைந்து உட்கார்ந்திருந்தான்.
கருப்பையா சேர்வை அவர்களுக்கு ஆறுதல் சொன்னான். ஆயினும் அதிகமாக அவன்
ஆறுதல் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. யௌவனப் பிராயத்தில் எல்லாவிதத்
துயரங்களும் சீக்கிரத்தில் பறந்து போய் விடுகின்றன. அதிலும் புதிது புதிதாகக்
காதலில் மூழ்கியிருப்பவர்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா? மாடத்தேவனும்
வேலம்மாளும் தங்களுடைய வருங்கால வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளில் வெளி
உலகத்து நிகழ்ச்சிகளை மறந்து விட்டார்கள்.
கலியாணத்துக்குத் தேதி வைப்பது பற்றி மாடத்தேவன் கருப்பையா சேர்வையிடம் இரண்டு மூன்று தடவை பிரஸ்தாபித்தான். கிழவனும், "ஆகட்டும்; குலதெய்வத்துக்குப் பூசை போட்டுவிட்டுத் தேதி வைத்து விடுவோம்" என்று சொன்னான்.
இந்த நிலையில் ஒரு நாள் மாடத்தேவனுடைய ஆகாசக் கோட்டைகள் எல்லாம், கும்பினியாரின் பீரங்கிகளால் தகர்க்கப்பட்ட பாளையக்காரர் கோட்டைகளைப் போல், தகர்ந்து விழுந்து மண்ணோடு மண்ணாய்ப் போகும்படி நேர்ந்தது.
ஒரு நாள் அவன் சிவகங்கைக்குப் போயிருந்தான். அங்கே தனக்கு வேண்டிய சில சாமான்களை வாங்கிக் கொண்டான். பிறகு நகைக் கடைக்குப் போனான். வேலம்மாளுக்குக் கலியாணத்தின் போது போடுவதற்காகக் கைக்குத் தங்கக் காப்பு, கழுத்துக்குத் தங்கக் கொடி இவைபற்றி விசாரித்தான். எதை வாங்கலாம் என்று நிச்சயிக்க அவனால் முடியவில்லை. வேலம்மாளையே ஒரு நாள் அழைத்து வந்து வாங்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு திரும்பி வந்தான். இதைப் பற்றிச் சொல்லலாமென்று உற்சாகத்துடன் அவன் கோட்டைக்கு வந்த போது, அங்கே கிழவனையும் அவனுடைய மகளையும் தவிர மூன்றாவது ஆள் ஒருவன் இருப்பதைக் கண்டான். அந்தப் புது மனிதன் ஒரு தூணில் சாய்ந்திருக்க, வேலம்மாள் ஒரு அடுக்குப் பானையில் வெந்நீர் வைத்துக் கொண்டு அவன் காலில் விட்டுக் கழுவிக் கொண்டிருந்தாள். கருப்பையா சேர்வை பக்கத்தில் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
இந்தக் காட்சியை வாசற்படியில் நின்றபடியே சிறிது நேரம் மாடத்தேவன் பார்த்தான். அவன் வந்து நின்றதை அந்த மூவரில் ஒருவரும் கவனிக்கவில்லை. சத்தப்படுத்தாமல் திரும்பிப் போய்விட்டான்.
வெள்ளரிக்காய்த் தோட்டத்தில் அன்று மாடத்தேவனுக்கு வேலை ஒன்றும் ஓடவில்லை. உடம்பெல்லாம் வெலவெலத்திருந்தது. அடிக்கடி இடிந்த கோட்டையையும் மலைமேல் இருக்கும் சுனையையும் பார்த்துக் கொண்டிருந்தான். வேலம்மாள் கையில் குடத்துடன் சுனைக்குப் போவது ஒரு தடவை தெரிந்தது. உடனே குன்றின் மீது பாய்ந்தேறிச் சென்றான். அவன் குன்றின் உச்சியை அடைந்தபோது வேலம்மாள் இடுப்பில் குடத்துடன் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். மாடத்தேவன் அவள் எதிரில் போய் வழி மறிப்பது போல் நின்று முறைத்துப் பார்த்தான்.
"என்னங்கறேன்? ஏன் இப்படி வித்தியாசமாய்ப் பார்க்கிறாய்?" என்று வேலம்மாள் கேட்டாள்.
"ஆமாம்; என்னைப் பார்த்தால் இனிமேல் உனக்கு வித்தியாசமாய்த்தானிருக்கும்!" என்றான் மாடத்தேவன்.
"நீ சொல்லுகிறது ஒன்றும் எனக்கு புரியவில்லை" என்றாள் வேலம்மாள்.
"அது எப்படிப் புரியும்?" என்றான் மாடத்தேவன்.
"சரி, புரியாது போனால் போகட்டும். வழியைவிடு எனக்கு வேலை இருக்கிறது" என்றாள் வேலம்மாள்.
"தாராளமாய்ப் போ! நானா வேண்டாம் என்று வழி மறிக்கிறேன்?' என்று கூறி மாடத்தேவன் வழியை விட்டு விலகிக் கொண்டான்.
வேலம்மாள் மேலே சென்றவள் இரண்டொரு தடவை தயங்கித் தயங்கி நின்றாள். மாடத்தேவன் அவளை பார்க்காமல் எங்கேயோ பார்த்துக் கொண்டு நின்றான்.
வேலம்மாள் ஆத்திரத்துடன் முணு முணுத்துக் கொண்டு விடு விடு என்று நடந்து போய்விட்டாள்.
அன்று மத்தியானம் மாடத்தேவன் வழக்கம்போல் அவர்கள் வீட்டுக்குச் சாப்பிடப் போகவில்லை.
தோட்டத்தில் வேலை செய்யவும் அவனால் முடியவில்லை. அங்குமிங்கும் அகாரணமாய் அலைகிறதும் தனக்குத்தானே பேசிக் கொள்கிறதுமாயிருந்தான்.
சாயங்காலம் பொழுது சாய்கிற சமயத்தில் வேலம்மாள் ஒரு பாத்திரத்தில் சோறு எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு வந்தாள்.
அவள் வருவது தெரிந்ததும், மாடத்தேவன் அவளை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிச் சுறுசுறுப்பாகச் செடிகளுக்கு களை கொத்திக் கொண்டிருந்தான்.
வேலம்மாள் அவன் எதிராக வந்து நின்று, "மத்தியானம் ஏன் சாப்பிட வரவில்லை?" என்று கேட்டாள்.
"இஷ்டமில்லை, வரவில்லை! நீ எதற்கு இங்கே வந்தாய்?" என்றான் மாடத்தேவன்.
"உனக்குச் சோறு கொண்டு வந்தேன். அப்பா கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வரச் சொன்னார்."
"எனக்குச் சோறு வேண்டாம். உங்கள் வீட்டுக்குப் புது விருந்தாளி வந்திருக்கானே, அவனுக்கே, எல்லாச் சோற்றையும் படையுங்கள்."
வேலம்மாள் சற்றுத் திகைத்தவள் போல் நின்றுவிட்டு, "விருந்தாளி வந்திருப்பது உனக்குத் தெரியுமா?" என்றாள்.
"ஏன் தெரியாது! உங்களுக்குத்தான் - அப்பனுக்கும் மகளுக்கும் - புது விருந்தாளி வந்திருக்கும் மவுஸில் கண் தெரியாமல் போய்விட்டது. எனக்குக் கூட கண் தெரியவில்லை என்று நினைத்தாயா?"
"ஓகோ! உனக்குக் கண்கூடத் தெரியுமா? நீ குருடு என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்?"
"நான் குருடு தான். இல்லாவிட்டால் கழுதையைக் குதிரை என்று எண்ணியிருப்பேனா? மூதேவியை லட்சுமி என்று கொண்டாடியிருப்பேனா?"
"என்ன சொன்னாய்? யாரைக் கழுதை என்றும் மூதேவி என்று சொன்னாய்? உனக்குப் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது. சோற்றை இதோ வைத்துவிட்டுப் போகிறேன். வேண்டுமென்றால் சாப்பிடு. இல்லாவிட்டால் பட்டினி கிடந்து செத்துப் போ!" என்று சொல்லிவிட்டு வேலம்மாள் சோற்றுப் பாத்திரத்தைக் கீழே வைத்தாள்.
"உன் சோறும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம்! இங்கே வைக்காதே! எடுத்துக் கொண்டு போய் எந்த நாய்க்காவது போடு!" என்று சொல்லிவிட்டு மாடத்தேவன் சோற்றுப் பாத்திரத்தைக் காலால் உதைத்தான். பாத்திரமும் உருண்டு, சோறும் சிதறி விழுந்தது.
வேலம்மாள், "இனி இந்தப் பக்கம் நான் வருகிறேனா பார்!" என்று சொல்லிவிட்டு விம்மிக் கொண்டே அங்கிருந்து போனாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாடத்தேவன் சுனை - Madaththevan Sunai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - வேலம்மாள், மாடத்தேவன், கொண்டு, அவன், வேண்டாம், என்றாள், ஒன்றும், என்றான், சோறு, சொல்லிவிட்டு, விருந்தாளி, வேலை, புது, நாள், தடவை, போய், போல், வந்து, கருப்பையா, பேசிக், கொண்டிருந்தான்