மாடத்தேவன் சுனை
2
பிறகு சில தினங்கள் கழித்து அந்த மூன்று
பேருடைய வாழ்க்கையும் மிக உற்சாகமாக நடந்து வந்தது. வேலம்மாளை எத்தனை
நேரம், எந்தெந்த விதமாகப் பார்த்தாலும் மாடத்தேவனுடைய கண்களில் தாகம்
தணிவதில்லை. வேலம்மாளுக்கும் அப்படியேதான். அவளுடைய கண்களுக்கு வானமும்,
பூமியும் புதிய வர்ணங்களைப் பூசிக் கொண்டு புதிய புதிய அழகுகளுடன் விளங்கின.
அவள் காற்றிலே மிதந்தாள்; வானவெளியில் பறந்தாள்; நிலாக் கதிர்களை அருந்தி,
நட்சத்திரங்களுடன் உறவாடினாள். இடிந்த பாழுங்கோட்டை, மன்னர்கள் வசிக்கும்
மணி மாட அரண்மனையாயிற்று. மலைச் சுனை பொற்றாமரைக் குளமாகத் திகழ்ந்தது.
அதன் கரையிலுள்ள வெள்வேல மரம் கற்பக விருட்சமாக மாறிவிட்டது. இந்திரனும்
சந்திரனும் அவளுடைய அடிபணிந்து அவளுக்கு ஆடை புனைந்து அலங்காரங்கள் செய்து
விட்டார்கள். காட்டு மல்லிகைப் பூ தேவலோகத்து மந்தார புஷ்பம் ஆயிற்று.
கேழ்வரகுக் கூழ் தேவாமுதமாக ருசித்தது.
இப்படி நாட்கள் ஆனந்தமயமாகப் போய்க் கொண்டிருக்கையில் அவர்களுடைய வாழ்க்கையில் சங்கடமான சம்பவம் நிகழ்ந்து விட்டது. ஒரு நாள் கும்பினிக்காரர்களின் படை அந்த வழியே போயிற்று. படையின் முன்னணியில் குதிரை மேல் ஏறி ஒரு வெள்ளைக்கார மேஜர் வந்தான். மாடத்தேவனுடைய வெள்ளரிக்காய்த் தோட்டத்தின் மீது அவனுடைய கொடிய ஆசைப் பார்வை விழுந்தது. அச்சமயம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மாடத்தேவனைக் கையால் சமிக்ஞை செய்து "கம் ஹியர் மேன், கம் ஹியர்!" என்று அழைத்தான். மாடத்தேவன் அதன் கருத்தைத் தெரிந்து கொண்டு மேஜர் துரையின் பக்கத்தில் வந்தான்.
"வெள்ளரிக்காய் இருக்கிறதா, மேன்? காஸுக்கு எத்தனை?" என்று கேட்டான்.
"வெள்ளரிக்காய் இல்லை, துரையே!" என்றான் மாடத்தேவன்.
மேஜர் எட்டிப் பார்த்து, "இருக்கிறது, மேன்! ஏன் பொய் சொல்லுகிறாய்?" என்றான்.
"நிஜமாக இல்லை, எஜமான்! எல்லாம் பிஞ்சுகள்; முற்றுவதற்கு ஒரு வாரம் பிடிக்கும்!"
"பிஞ்சாய் இருந்தால் மெத்த நல்லது, மேன்! காயைவிடப் பிஞ்சு நல்லாயிருக்கும்! பத்து டஜன் பறித்துக் கொண்டு வா! ஜல்தி!"
"பிஞ்சைப் பறிக்கக் கூடாது, எஜமான்! பறிப்பது பாவம். செய்த வேலையெல்லாம் வீண் போனதாகும்!"
"யூ டாம்! நான் ஆர்டர் போடுகிறேன். நீ மாட்டேன் என்றா சொல்கிறாய்... ஜமேதார்! கம் ஹியர்!"
ஜமேதார் மேஜர் துரையின் அருகில் வந்தான். அவனிடம் மேஜர் ஏதோ சொன்னான். உடனே ஜமேதார் பதினைந்து சிப்பாய்களை அழைத்துக் கொண்டு வெள்ளரிக்காய் தோட்டத்தில் புகுந்தான். பூப்பிஞ்சு உள்பட எல்லா வெள்ளரிக் காய்களையும் அவர்கள் பறித்தார்கள். அதோடு கூட வெள்ளரிப் பாத்திகளையும் கொடிகளையும் கன்னா பின்னாவென்று மிதித்துத் துவைத்தார்கள். அவர்களைத் தடுக்கலாமா என்று முதலில் மாடத்தேவன் நினைத்தான். அதில் பயன் ஒன்றுமில்லையென்று பிறகு நிதானித்துக் கொண்டான். அவர்களுடைய அட்டூழியங்களைப் பார்த்து வயிறெரிந்து நின்றான்.
தோட்டத்தைத் துவம்சம் செய்துவிட்டுச் சிப்பாய்கள் வெளியேறியபோது மாடத்தேவன், மேஜர் துரையின் அருகில் சென்று, "எஜமானே! இது தர்மமா? இந்த அநியாயம் கடவுளுக்குப் பொறுக்குமா?" என்றான்.
"டாம் யுவர் கடவுள், மேன்! நீ இந்த வெள்ளரித் தோட்டம் போட்டிருக்கிறாயே, இதற்காகக் கும்பினிக்கு வரி கொடுத்திருக்கிறாயா?"
"வரியா? வரி யாரும் என்னைக் கேட்கவும் இல்லை; நான் கொடுக்கவும் இல்லை."
"கேட்கவில்லை யென்பது பொய் சால்சாப்பு. போனால் போகட்டும். நாங்கள் இப்போது பறித்துக் கொண்ட வெள்ளரிக்காயின் விலையை நீ கொடுக்க வேண்டிய வரிக்காக வரவு வைத்துக் கொள்கிறேன்!"
இவ்விதம் சொல்லிவிட்டு மேஜர் துரை சிரித்தான். மற்றும் பல சிப்பாய்களும் சிரித்தார்கள். சிரித்துக் கொண்டே மேலே நகர்ந்தார்கள்.
இடிந்த கோட்டைக்கு அருகில் வந்ததும் மேஜர் "இந்தக் கோட்டையை ஏன் இன்னும் தரைமட்டமாக்க வில்லை? பீரங்கியை இதன்மேல் திருப்பலாமா?" என்று கேட்டான். பக்கத்திலே வந்த ஜமேதார், "இந்தக் கோட்டையில் ஒன்றுமே இல்லை. பாழும் குட்டிச்சுவர்கள் தான் இருக்கின்றன. பீரங்கி மருந்து வீணாவது தான் லாபம்!" என்றான்.
"இதில் யாரும் குடியில்லயா?"
"ஒரு கிழவனும் அவன் மகளும் இருக்கிறார்கள். அவனிடம் வேட்டையாடுவதற்கு ஒரு பழைய துப்பாக்கியும், ஈட்டியும், வாளும் இருந்தன. அவற்றையெல்லாம் முன்னமே பிடுங்கிக் கொண்டு விட்டோம்."
"அந்த ஓல்டு மேன் அதோ நின்று பார்க்கிறானே, அவன் தானே! அவனுடைய மகள் எப்படி இருப்பாள்? அழகாயிருப்பாளா?" என்று மேஜர் கேட்டான்.
"இருப்பாள்; அவுராங் அவுடாங்கைப் போல் அழகாயிருப்பாள்!" என்று ஜமேதார் சொன்னதும் துரை கடகடவென்று சிரித்தான். சில நிமிஷத்துக்கெல்லாம் மேஜரும் ஜமேதாரும் மற்றச் சிப்பாய்களும் அர்ச்சுனன் குன்றைத் தாண்டி அப்பால் சென்று மறைந்தார்கள்.
அன்றெல்லாம் கருப்பையா சேர்வை, வேலம்மாள், மாடத்தேவன் ஆகிய மூவரும் கும்பினிக்காரரின் அக்கிரமங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.
"நானும் இரண்டு வருஷம் கும்பினியாரிடம் வேலை பார்த்தேன். அவர்கள் செய்யும் அக்கிரமம் சகியாமல் தான் திரும்பி வந்துவிட்டேன்" என்றான் மாடத்தேவன்.
"நீ வந்தது நல்லதாய்ப் போயிற்று. இப்படிப்பட்ட பாவிகளிடம் யாராவது சேவகம் செய்வார்களா?"
"இவர்களுடைய அதி அக்கிரமத்தை ஒழிக்கும் காலம் வந்துவிட்டது. நேற்றுத்தான் நான் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சென்று பாளையங்கோட்டைச் சிறையை உடைத்து விட்டு ஊமைத்துரையையும் அவருடன் இருந்த வீராதி வீரர்களையும் விடுதலை செய்து விட்டார்களாம். ஊமைத்துரையும் ஒரு பெரும் படை திரட்டி வருகிறாராம். கும்பினிக்காரர் இடித்துத் தரைமட்டமாக்கிய பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை ஒரே வாரத்தில் மறுபடி கட்டி விட்டார்களாம். நீங்கள் இரண்டு பேரும் உத்தரவு கொடுத்தால் நான் கூடப் போய் ஊமைத்துரையின் படையில் சேரலாம் என்று பார்க்கிறேன்" என்றான் அந்த வாலிபன்.
இதைக்கேட்ட கிழவன் கருப்பையா சேர்வை பயந்து போனான். "அதெல்லாம் வேண்டாம், தம்பி! ஊமைத்துரையின் காரியம் எப்படி நடக்கிறது என்று பார்த்துக் கொள்ளலாம். இந்த வெள்ளைக்காரர்கள் இருக்கிறார்களே இவர்கள் பாதாள உலகத்திலிருந்து வந்த ராட்சதர்கள். இவர்களை ஒழித்துக் கட்டுவதற்கு சூரபத்மனைக் கொன்ற முருகன் மறுபடியும் அவதாரம் எடுத்தாக வேண்டும். எல்லாவற்றுக்கும் கொஞ்ச நாள் பொறுத்திரு. மேலே என்ன நடக்கிறதென்று பார்த்துத் தீர்மானிக்கலாம்" என்றான்.
வேலம்மாள் அன்று மாடத்தேவனைத் தனியாகச் சந்தித்தபோது, 'அப்பா சொன்னதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அன்னிய வெள்ளைக்கார கும்பினியை எதிர்த்துச் சண்டை போட வேண்டியது தான். ஆனால் ஒரு விஷயந்தான் கவலையாயிருக்கிறது. என் தகப்பனார் சபல புத்தியுள்ளவர். நீ வெளியில் போனதும், யாராவது ஒருவனுடைய கழுத்தில் என்னைப் பலவந்தமாகப் பிடித்துக் கட்டி விட்டால் என்ன செய்கிறதென்று பயமாயிருக்கிறது. நமக்குள் ஒரு கலியாண பந்தம் ஏற்பட்ட பிறகு நீ போனால் பாதகமில்லை" என்றாள். "நீ சொல்வது உண்மைதான். தை மாதம் பிறந்ததும் ஒரு தேதி பார்த்துக் கலியாணத்தை முடித்து விடுவோம். பிறகு அப்போதுள்ள நிலைமைக்குத் தகுந்தாற்போல் யோசித்துச் செய்து கொள்ளலாம்!" என்றான் மாடத்தேவன்.
அன்னியர்களாகிய கும்பினிக்காரர்களை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியந்தான்; ஆனாலும் வேலம்மாளைப் பிரிந்து செல்வது இலேசான காரியம் அல்ல. வேலம்மாள் இன்னொருவனைக் கலியாணம் செய்து கொள்வது என்பதை நினைத்தபோது மாடத்தேவனுடைய உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. வெள்ளரிக்காய், பூவும் பிஞ்சுமாகப் பறிபோனபோதுகூட அவனுக்கு அவ்வளவு ஆத்திரம் உண்டாகவில்லை. எனவே ஊமைத்துரையின் படையில் சேரும் யோசனையைத் தள்ளிப் போட்டான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாடத்தேவன் சுனை - Madaththevan Sunai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மேஜர், என்றான், மாடத்தேவன், செய்து, மேன், கொண்டு, இல்லை, நான், ஜமேதார், வெள்ளரிக்காய், அந்த, பிறகு, தான், வேலம்மாள், அருகில், ஊமைத்துரையின், சென்று, துரையின், மாடத்தேவனுடைய, வந்தான், ஹியர், கேட்டான்