மாடத்தேவன் சுனை
5
கோட்டைக்குள் ஒரு தனி அறையை மாடத்தேவன்
கேட்டு வாங்கிக் கொண்டிருந்தான். அதில் தன்னுடைய தட்டு முட்டுச் சாமான்களையும்
பெட்டி பேழைகளையும் போட்டு வைத்திருப்பதாகக் கருப்பையா சேர்வையிடம் சொல்லியிருந்தான்.
ஊமைத்துரையை அந்த அறைக்கு அழைத்துப் போய்ப் பூட்டைத் திறந்து காட்டினான்.
அறைக்குள்ளே சில பெட்டிகளும் சாக்கு மூட்டைகளும் இருந்தன. அவை எல்லாவற்றிலும்
கன்னங்கரிய வெடி மருந்து இருந்தது. பக்கத்தில் சில துப்பாக்கிகளும் ஈட்டிகளும்
கத்திகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. "சாமி! இந்த ஆயுதங்களையெல்லாம்
உங்களுக்காகத்தான் சேர்த்து வைத்திருக்கிறேன். இவற்றை உபயோகப்படுத்த
மட்டும் வழி சொல்லுங்கள்!" என்றான் மாடத்தேவன்.
பின்னர், ஏழெட்டுத் தினங்கள் மாடத்தேவன் மிகச் சுறுசுறுப்பாயிருந்தான். ஊமைத்துரை சொன்னபடி பல இடங்களுக்கும் போய்ப் பலரைப் பார்த்துச் சங்கேதமாகச் செய்தி சொல்லிவிட்டு வந்தான். கடைசியாக ஊமைத்துரை மிக முக்கியமான வேலை ஒன்றை அந்த வாலிபனிடம் ஒப்புவித்தான். சிவகங்கைக்கு அவன் சென்று, சிவகங்கைப் பாளையக்காரரின் தம்பியான சின்னமருது சேர்வை எங்கே இருக்கிறார் என்று விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டியது; சின்னமருதுவைக் கண்டு, ஊமைத்துரை இருக்குமிடத்தைத் தெரிவிக்காமல் அவர் உயிரோடிருக்கிறார் என்று மட்டும் சொல்ல வேண்டியது. மருதுவின் மனதை அறிந்து கொண்டு, "ஊமைத்துரையுடன் சேர்ந்து வெள்ளைப் பூண்டை இந்த நாட்டிலிருந்து அடியோடு ஒழிக்கும் முயற்சிக்கு உதவி செய்யத் தயாரா?" என்று கேட்டு வரவேண்டியது - இந்த முக்கிய விஷயத்தை ஊமைத்துரை இரண்டு மூன்று தடவை படித்துப் படித்துச் சொன்னான். மாடத்தேவனும் நன்றாய் கேட்டுக் கொண்டு உற்சாகமாகக் கிளம்பினான். சிவகங்கைக்குப் போய் விசாரித்தான். சின்னமருது சேர்வை சிறுவயல் என்ற ஊரில் தனி அரண்மனை கட்டிக் கொண்டு வசிப்பதாகத் தெரிய வந்தது. பிறகு சிறு வயலுக்குப் போய்ச் சின்ன மருதுவைப் பேட்டிக் கண்டான். ஊமைத்துரை உயிரோடிருப்பது அறிந்து அவர் அளவிலாத மகிழ்ச்சி அடைந்தார். உடனே தன்னுடைய அரண்மனைக்கு வந்து சேரும்படியும், பதினைந்து நாளில் இருபதினாயிரம் படை வரையில் திரட்டி விடத் தம்மால் முடியும் என்றும், வீராதி வீரரான ஊமைத்துரை தலை வகித்து நடத்தினால் வெள்ளைப் பூண்டை அடியோடு இந்நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டி விடலாம் என்றும் சொல்லி அனுப்பினார்.
இந்த உற்சாகம் செய்தியுடன் மாடத்தேவன் இடிந்த கோட்டைக்கு விரைந்து வரத் தொடங்கினான். ஆனால் வரும் வழியில் ஒரு இடையூறு ஏற்பட்டது. ஒரு சிறிய கும்பினிப் படை அங்கே திரண்டு இறங்கியிருப்பதைப் பார்த்து, மாடத்தேவன் ஒதுங்கிப் போக நினைத்தான். அது பலிக்கவில்லை. நாலைந்து சிப்பாய்கள் அவனைப் பிடித்துக் கட்டிப் பாசறையின் நடுவில் இருந்த கூடாரத்துக்குக் கொண்டு போனார்கள். கூடாரத்தில் அவனைத் தூணோடு ஒன்றாகச் சேர்த்துக் கட்டினார்கள்.
இந்த நிலைமையில் பக்கத்துக் கூடாரத்தில் நடந்த சம்பாஷ்ணையில் கொஞ்சம் அவன் காதில் விழுந்தது. ஒரு கிழக் குரல், 'ஊமைத்துரை இருக்குமிடம் எனக்குத் தெரியும். காட்டிக் கொடுக்கிறேன்' என்று சொல்லியது. அதற்காகக் கும்பினித் துரைத்தனத்தார் கொடுப்பதாகச் சொல்லியிருந்த ஐயாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுக்கும்படி அதே குரல் கேட்டது.
"ஆகட்டும்! ஊமையன் பிடிபட்டதும் பரிசுத் தொகை கொடுக்கப்படும்!" என்றார் மேஜர் துரை.
"ஜமேதார்! இப்போதைக்கு இந்தக் கிழவனுக்கு நல்ல பழைய புட்டிச் சாராயம் ஒரு கிளாஸ் கொடு!" என்றும் அந்த மேஜரின் குரல் சொல்லிற்று.
"அதிகம் பேர் வேண்டாம். கூட்டமாக வந்தால் அவன் தப்பித்து ஓடிப் போய் விடுவான். நாலைந்து பேரை மட்டும் - தைரியசாலிகளாக - என்னுடன் அனுப்புங்கள். பிடித்துக் கொடுக்காவிட்டால் என் பெயர்... அல்ல மாற்றி வைத்துக் கொள்கிறேன்" என்றது கிழக் குரல்.
இதையெல்லாம் கேட்டு மாடத்தேவன் துடிதுடித்துக் கொண்டிருந்தான். கட்டுக்களைப் பலாத்காரமாக அறுத்தெறியும் சக்தி தனக்கு இல்லையே என்று வருத்தப்பட்டான். இதற்குள் மேஜர் துரை அவனைக் கட்டி வைத்திருந்த கூடாரத்துக்கு வந்தார்.
"ஓ! இந்தப் பையனை நான் பார்த்திருக்கிறேனே! இவனுடைய தோட்டத்தில்தானே நிறைய வெள்ளரிக்காய் கிடைத்தது!" என்றார் மேஜர்.
"ஆம், எஜமானே! என்னை எதற்காக இவர்கள் பிடித்துக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை" என்றான் மாடத்தேவன்.
"என்னமேன்! கும்பினியின் படையில் நீ சேர்ந்து விடுவதுதானே? நல்ல சம்பளம் கிடைக்கும்!" என்றார் மேஜர் துரை.
"எஜமானே! நான் ஒரு சமயம் ஆர்க்காட்டு நவாபின் படையில் இருந்தேன். என்னைப் போருக்கு உபயோகமில்லை யென்று போகச் சொல்லி விட்டார்கள். இப்போது சேர்ந்து மட்டும் என்ன பிரயோஜனம்? நல்ல வெள்ளரிக்காய் பயிர் சேமித்து வைக்கிறேன். நீங்கள் அந்த பக்கம் வரும்போது கொடுப்பேன். கும்பினிப் படையில் சம்பளத்துக்கு ஆசைப்பட்டுச் சேர லட்சம் பேர் வருவார்கள். ஆனால் வெள்ளரிக்காய் பயிர் செய்ய எல்லாராலும் முடியுமா?" என்றான் மாடத்தேவன்.
இந்தப் பதில் மேஜருக்கு மிகவும் பிடித்திருந்தது. "நீ சொல்கிறது ரொம்பச் சரி. வெள்ளரித் தோட்டம் நன்றாய்ப் போட்டு வை! மறுமுறை வரும்போது கிஸ்திக்காக வரவு வைத்துக் கொள்ள மாட்டேன். காசுக்கு நாலுவீதம் கொடுத்து வாங்கிக் கொள்வேன்!" என்றான்.
மேஜர் துரையின் உத்தரவுப்படி மாடத்தேவன் கட்டை அவிழ்த்து விட்டார்கள்.
"வந்தனம், துரைகளே!" என்று சொல்லிவிட்டு மாடத்தேவன் அங்கிருந்து விரைந்து சென்றான். ஓட்டமும் நடையுமாகப் போய் அதிசீக்கிரத்தில் இடிந்த கோட்டையை அடைந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாடத்தேவன் சுனை - Madaththevan Sunai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மாடத்தேவன், ஊமைத்துரை, மேஜர், குரல், கொண்டு, என்றான், அந்த, மட்டும், என்றார், துரை, வெள்ளரிக்காய், படையில், நல்ல, போய், அவன், கேட்டு, சேர்ந்து, என்றும், கட்டி, பிடித்துக்