முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 17.அழுக்காறாமை
திருக்குறள் - 17.அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்கா(று) இலாத இயல்பு. |
161 |
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
விழிப்பேற்றின் அஃதொப்ப(து) இல்லை யார்மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். |
162 |
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணா(து) அழுக்கறுப் பான். |
163 |
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக் கறிந்து. |
164 |
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
அழுக்கா(று) உடையார்க்(கு) அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது. |
165 |
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றும் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். |
166 |
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
அவ்வித்(து) அழுக்கா(று) உடையானைச் செய்பவள் தவ்வையைக் காட்டி விடும். |
167 |
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
அழுக்கா(று) எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். |
168 |
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். |
169 |
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை
அழுக்கற்(று) அகன்றாரும் இல்லைஅஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். |
170 |
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
17.அழுக்காறாமை - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - பொறாமை, அழுக்கா, ஆக்கமும், விடும், செய்யார், கெடும், காட்டி, கேடும், தனக்கு, இலக்கியங்கள், ஒருவன், இல்லாமல், literature, அழுக்காற்றின்