முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 126.நிறையழிதல்
திருக்குறள் - 126.நிறையழிதல்
காமக் கணச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. |
1251 |
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.
காமம் எனஒன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். |
1252 |
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும். |
1253 |
யான் காமத்தை என்னுள்ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும். |
1254 |
யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன் றன்று. |
1255 |
தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர். |
1256 |
வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்தோ!
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின். |
1257 |
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை. |
1258 |
நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?
புலப்ப லெனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு. |
1259 |
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினோர்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல். |
1260 |
கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
126.நிறையழிதல் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - காமநோய், வெறுத்து, விரும்பிய, காமத்தால், நெஞ்சம், பெருந்தகைமை, காமத்தை, உடைக்கும், இலக்கியங்கள், சொல்லப்படும், நெஞ்சத்தை, கொண்டு, literature